Skip to content
த.அகிலன்

கனவும், வாழ்வும் பின் என் சொற்களும்…

த.அகிலன்

கனவும், வாழ்வும் பின் என் சொற்களும்…

விடுதலைப் புலிகள் சில கேள்விகள்…

த.அகிலன், February 2, 2009December 1, 2009

ltte2.jpgநானும் ஒரு பிரபலமான வலைப்பதிவராகும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டாலும் அது முயற்சியாகவேயிருக்கிறது இப்போது வரைக்கும். கடைசியா ஒரு சாத்திரியைப் போனவாரம் சந்தித்தேன். (இவர் பதிவர் சாத்திரி அல்ல டி.வி.புகழ்) அவர் சொன்னார் ஏழரைச் சனியன் உச்சத்தில் இருப்பதால் இதுபோன்ற தாமதங்கள் வரத்தான் செய்யும்.. ஆனாலும் நீர் அஞ்சக்கூடாது எண்டு. நானா அஞ்சுவதா எண்டு அவர் எதிரில் மிடுக்காக சொன்னாலும் அதிகாலை பதினொரு மணிக்கு எழுந்து பல்விளக்குகையில் மதில் தண்ணீர்த் தொட்டிக்கு மேலிருந்து பார்க்கும் காகத்துக்கும் சாத்திரிக்கும் ஏதேனும் தொடர்பிருக்குமா என யோசிக்கத்தான் செய்கிறது மனசு.
சனியனை எடுத்து சட்டைப் பாக்கெட்டில் போட்ட கதையாய் விடுதலைப்புலிகள் பற்றிய கேள்விகள் என்ற இந்தப்பதிவை எழுதலாம் எண்டு யோசித்தேன். நானொரு பிரவல பதிவராய் இல்லாவிட்டாலும் அவ்வப்போது எழுதிக்கொண்டிருப்பதால் கீற்று இணையத்தில் வந்த எனது வீடெனப்படுவது யாதெனில் பிரியம் சமைக்கிற கூடு… கட்டுரையைப் படித்துவிட்டு கவின்மலர் என்று ஒருவர் போன் பண்ணினார். நான் அவருடன் பேசும் போது சொன்னார் என்னங்க நான் அழகான இலங்கைத்தமிழைக் கேட்கலாம் என்று எதிர்பார்த்தால் நீங்கள் இந்தியர் மாதிரியே பேசுகிறீர்களே என்று. நான் அவருக்கு சொன்னேன் இலங்கைத் தமிழ் கேட்கிற உங்களுக்கு அழகாயிருக்கிறது ஆனால் கதைக்கிற எனக்கு ஆபத்தாயிருக்கிறது என்று.
நான் சென்னைக்கு வந்த புதிதில் பேருந்துகளில் பயணிப்பதையே தவிர்த்தேன். ஏனெனில் பேருந்துகளில் எங்கே இறங்குவது என்பதை சரியாக தெரியாது. அதைத் தெரிந்து கொள்ளவேண்டுமெனில் மனிதர்களுடன் பேசநேரிடும்.அப்படிப் பேச நேர்கையில் எல்லாம் நான் இரண்டாம் வசனத்தை ஆரம்பிக்கும் முன்னரே ஒரு சங்கடமான குரலில் எதிராளி கேட்பார்

“நீங்க சிலோனா? ”

சிலோனா என்கிற கேள்விக்குள்ளால் அவர் எனது உடம்பில் கட்டியிருக்கிற குண்டுகளைக் கற்பனை பண்ணத்தொடங்குகிறார் என்பதைப் புரிந்துகொள்ள எனக்கு அதிகநேரம் ஆவதில்லை. அதனால் நான் என்னைக் காட்டிக்கொடுக்கும் சொற்களைத் தவிர்க்கத் தொடங்கினேன். (குறிப்பாக ஓம்,கதைக்கிறது,விளங்கயில்லை,பிறகு இது மாதிரியான சில சொற்களை பேசுவதை நான் தவிர்த்தேன்) இவர்களாவது பறவால்ல நான் விடுதலைப்புலியா என்று சந்தேகம் மட்டும்தான் படுபவர்கள்.
இன்னும் சிலர் இருக்கிறார்கள். நான் புலிதான் என்பதை அவர்களாகவே உறுதிசெய்துகொண்டு பேசுகிறவர்கள்.

“சிங்களவனையெல்லாம் அடிச்சு துரத்தணும் சார்.”

“எங்க தலைவர் மாநாடு நடத்துறாரு சார் நான் போறேன் மதுரைக்கு நீங்க அமைப்பில இருக்கும் போது எத்தினை பேரை சுட்டிருக்கீங்க சார்?”

”  சார் நான் அமைப்பிலெல்லாம் இருக்கலங்க.. “அப்படியென்றால் எங்கே பாதிவழியில் இறக்கிவிட்டு விடுவாரோ என்று நினைத்துக்கொள்வேன். இதுக் கெல்லாம் மேல நான் சேத்துப்பட்டில் சந்தித்த ஒரு ஆட்டோக்கார அண்ணை என்னைக் கட்டிப்பிடிச்சு கொஞ்சாத குறைதான். “சார் நீங்க கிளிநொச்சியா” அவர் புழகாங்கிதமடைந்தவிட்டார் நான் எனக்கும் அவர் அடைகிற புழகாங்கிதத்திற்கும் ஒரு விதமான சம்மந்தமும் இல்லை என்பதை சொல்லிப்புரியவைக்க முயற்சித்தேன் ஆனால் அவர் கேட்பதாயில்லை அவர்பாட்டுக்கு நிறையப் பேசிக்கொண்டே போனார் நான் விட்டால் போதுமென்று ஓடிவந்துவிட்டேன்.
இன்னும் சிலர் இருக்கிறார் எதுவுமே தெரியாமல். “நீங்க சிலோனா சார்” என்று ஆரம்பிப்பார்கள். “ஆமாங்க” என்று சொன்னதும்.

“என்னசார் நடக்குது அங்க.” அப்படின்னுவார்..

நான் சொங்கி மாதிரி சிரிப்பேன்.

“என்ன நீ சிரிக்கிறா. உங்கூர்ல சண்டை நடக்குதில்லை அப்புறம் சிரிக்கிற..” நான் பேசாமல் இருப்பேன்.

“எதுக்கு அங்க போய் சண்டைபோட்டிட்டிருக்கீங்க..” என்று ஆரம்பிப்பார்.

“அங்கபோகலங்க அங்கியேதான் இருக்கோம்” என்பேன்.

“என்ன இருந்தாலும் இங்கேருந்து போனவங்க தானே “என்பார்.

“இங்கயிருந்து போனவங்க மலையகத் தமிழர்கள் அவங்களும் இப்ப 7 தலைமுறையாச்சு    அவங்களும் அங்கயிருக்கிறவங்கதான்  அதைவிடவும் தமிழர்கள் ஆதியில் இருந்தே அங்கஇருக்காங்க” அப்படிம்பேன்.

அவர் மறுபடியும் “எப்படின்னாலும் அவங்க இங்கேருந்துதானே போயிருக்கணும்.. இங்கயிருந்து போய் எதுக்கு அவங்ககூட சண்டை போட்டக்கிட்டு..” என்று முருங்கையில் ஏறுவார்.

நான் அவருக்கு பதிலை யோசிப்பதை விட்டுவிட்டு எப்படி எஸ்கேப்பாவது என்று யோசிக்க தொடங்கி விடுவேன்.
இன்னும் சிலர் இருக்கிறார்கள் சிலர் என்பது பொருத்தமாக இருக்காது (ஒரு தொடர்ச்சிக்காக எழுதினாலும் இவர்கள் தான் எண்ணிக்கையில் அதிகம்) அவர்களும் கேட்பார்கள்  நீங்க சிலோனா? ஆமாங்க……. நான் தயாராகிவிடுவேன்.

  • நம்மாளுங்க எத்தினை பேர் இருக்காங்க? (நம்மாளுங்க என்பது புலிகளை)
  • புலிகள் ரொம்ப பலவீனமாயத்தான் போய்ட்டாங்களோ?
  • நான் எல்லாம் அவரோட (பிரபாகரனோட) பெரிய பான்ங்க நீங்க அவரைப் பாத்திருக்கீங்களா?
  • விமானம் எல்லாம் வச்சிருக்கிறதாச் சொல்றாங்களே உண்மைதானா?
  • அதெல்லாம் எங்க வச்சிருக்காங்க?
  • பிரபாகரன் வன்னில தான் இருக்காரா இல்ல எஸ்கேப்பாயிட்டாரா?
  • இனிமே புலிகளால ஒண்ணுமே பண்ணமுடியாதுங்கிறாங்களே அப்படியா?
  • புலிகள் அங்கயிருக்கிற மக்களை வெளியேற விடாமப் பண்றாங்களாமே உண்மையா?
  • வன்னியில என்னதான் நடக்குது?

இப்படிப் போகும் கேள்விகள். நான் பரீட்சை மண்டபத்தில் ஆங்கில வினாத்தாளின் எதிரில் இருப்பது போல உணரத்தொடங்குவேன். ஆனால் இதில் என்ன சங்கடம் என்றால் முன்னையவர்கள் என்றாலும்  ஆர்வக்கோளாறுகள் என்று ஒதுக்கலாம். ஆனால் இவர்கள் நம்மாளுகள் என்று அழைப்பவர்கள். ஈழத்தமிழர்கள் பால் அதீத அன்பு கொண்டவர்கள். உண்மையிலேயே மிகுந்த அக்கறை கொண்டவர்கள். எப்படி இந்தியா கிரிக்கெட்டில் ஜெயித்தால் வெடிவெடிப்பார்களோ அதைப்போல புலிகள் கல்மடுக்குளத்தை உடைத்தாலும் வெடிகொழுத்துவார்கள். (அதாவது சுருங்கச் சொன்னால் புலம் பெயர்ந்த தமிழர்களின் மனநிலையில் இருப்பவர்கள்)
ஆனால் என்னால் முன்னைய ஆர்வக்கோளாறுகளின் கேள்விகளிற்காவது ஏதாவது பதிலைச் சொல்லிவிட முடியும். இவர்களின் கேள்விக்கு எனக்கு தெரிந்த ஒரே பதில் தெரியாது என்பதுதான். அவர் நீயெல்லாம் ஒரு ஈழத்தமிழனா என்று கேட்க முதல் அங்கிருந்து ஓடிவந்துவிடுவேன். அவரிடம் சொல்லவதில்லை நீங்கள் கேட்ட கேள்விகளிற்கான பதில் வன்னியில் இருக்கிறவனுக்கே தெரியாது என்பதை.
ஈழத்தமிழர்களின் பால் அக்கறையம் அன்பும் தமிழகத்தில் இருக்கிற எல்லா மக்களிடமும் எந்தவிதமான எதிர்பார்ப்புகளுமற்று இருக்கிறது.நான் சந்திக்கிற மனிதர்கள் அப்படித்தான் இருக்கிறார்கள்.

அண்மையில் ஒருத்தர் கேட்டார் என்னங்க புலிகள் மட்டுமேதான் போராடுறாங்களா? இந்தப் போராட்டம் மக்கள் மயப்படுத்தப்பட்டதில்லையா என்ன? யாழ்ப்பாணத்தில 5 லட்சம் தமிழர்கள் இருக்கிறாங்களாமே? அவங்க அரசாங்கத்துக் கெதிரா கிளர்ச்சில்லாம் பண்ண மாட்டாங்களா? ஆனா பாருங்கோ எனக்கு இதுக்கும் பதில் தெரியாம இருக்கிறது நல்லது என்று நான் நினைத்தேன்?

எண்ணங்கள்

Post navigation

Previous post
Next post

Related Posts

ரஜினிக்கு அறையவேண்டும்…….

July 4, 2007December 1, 2009

01.அறையில் பத்து மணிக்கு மின்சாரம் போய் மறுபடியும் தீடிரென்று முளைத்தது. அணைக்கப்படாதிருந்த தொலைக்காட்சி முழித்து ஓடத்தொடங்கியிருந்தது. திடுக்கிட்டு முழிக்கையில் ஏதோ ஒரு படத்தின் எழுத்தோட்டம் போய்க்கொண்டிருந்தது. (எழுத்தோட்டம் எண்டா படத்தில் நடித்தவர்களின் பெயர்ப்பட்டியல் வருகின்ற படத்துண்டைத்தான் எழுத்தோட்டம் என்போம். அதிலே நடிகை மீனாவின் பெயர் அறிமுகம் என்ற போட்டு எழுத்து சீர்திருத்தம் வருவதற்குமுன்பாக இருந்த “னா” போட்:டு இருந்தது. அட அந்தக்காலத்திலயே மீனா நடிச்சிருக்கிறாவா என்று தோன்றியது. திடீரென ஒரு…

Read More

காணிமுழுவதும் கண்ணிவெடியல்லவா…?

October 16, 2007December 1, 2009

“வாணி உன் வீடும் வளவும் நானறிவேன்அக்காணி முழுவதும் கலகலப்பல்லவோ” இப்படிப்பெரியவர்கள் கவிதைகளை எடுத்துவிட்டுக்கொண்டு இருக்க வாயைப்பிளந்து கொண்டிருந்திருக்கிறேன்.கானாபிரபாவின் பாசையில் சொன்னால் சின்னனுகளாய் இருந்த அனுபவங்கள் இவை. நவராத்திரி என்கிற வார்த்தையை விட அதை அந்த பத்து நாட்களையுமே சரஸ்வதிபூசை என்று சொல்லித்தான் நான் திரிந்திருக்கிறேன். நவராத்திரி என்பது கொஞ்சம் பெரியவர்கள் சொல்லும் சொல்லு. எங்களுக்கென்ன அதைப்பற்றி கவலை மொத்தமாய் சரஸ்வதி பூசை. எங்களுக்கு சரஸ்வதியெல்லாம் அவ்வளவு முக்கியமாக படவில்லை புக்கை…

Read More

நட்சத்திர வணக்கம் அல்லது கணிணிக்கு காணிக்கை

May 12, 2008December 1, 2009

இரண்டாயிரத்தி நான்காம் ஆண்டு இதே மேமாதத்தின் ஏதோ ஒரு நாளில் நான் முதல் முதலாக கணிணியைத் தொட்டிருக்கிறேன். ஒரு பொருத்தத்திற்காக மே மாதம் என்று சொல்கிறேன் என நினைக்க வேண்டாம் உண்மையிலேயே அது அப்படித்தான் நடந்தது. எங்களிற்கு பிசிக்ஸ் படிப்பிச்ச வாத்தியாரான அல்லது நண்பரான பிரதீப் என்றவருடன் நான் 2004 ஏப்ரல் ல நடந்த க.பொ.த உயர்தரப் பரீட்சைகள் முடிவடைந்ததும் தான் நான்  அது வரை கண்காட்சிகளில் மட்டுமே பார்த்து…

Read More

Comments (13)

  1. Anonymous says:
    February 2, 2009 at 9:09 am

    ஈழத்தமிழர்களின் பால் அக்கறையம் அன்பும் தமிழகத்தில் இருக்கிற எல்லா மக்களிடமும் எந்தவிதமான எதிர்பார்ப்புகளுமற்று இருக்கிறது.நான் சந்திக்கிற மனிதர்கள் அப்படித்தான் இருக்கிறார்கள். ஆனால் சில துன்பியல் சம்பவங்கள் அல்லது அவற்றின் பெயரால் அவர்களைப் பெரிய அளவில் ஒன்றுதிரளவிடமால் செய்கின்றனவோ?//

    !!உங்களை போலவே..ஆனால் எனக்கு முற்றிலும் தெரியாத இந்தி கேள்வித்தாள் முன்னால் இருப்பதாய் உணர்கிறேன்.

  2. கனகசபை says:
    February 2, 2009 at 10:56 am

    டேய் உங்கயிருந்துகொண்டு இதுவும் எழுதுவாய் இன்னும் எழுதுவாய்..

  3. vijay says:
    February 2, 2009 at 3:21 pm

    டேய் நல்லா அடக்கி வாசி

  4. gavin says:
    February 2, 2009 at 3:55 pm

    //நான் பரீட்சை மண்டபத்தில் ஆங்கில வினாத்தாளின் எதிரில் இருப்பது போல உணரத்தொடங்குவேன். //
    சரியாத்தான் சொல்லியிருக்கிறிங்க..

  5. gavin says:
    February 2, 2009 at 3:58 pm

    //அண்மையில் ஒருத்தர் கேட்டார் என்னங்க புலிகள் மட்டுமேதான் போராடுறாங்களா? இந்தப் போராட்டம் மக்கள் மயப்படுத்தப்பட்டதில்லையா என்ன? யாழ்ப்பாணத்தில 5 லட்சம் தமிழர்கள் இருக்கிறாங்களாமே? அவங்க அரசாங்கத்துக் கெதிரா கிளர்ச்சில்லாம் பண்ண மாட்டாங்களா? ஆனா பாருங்கோ எனக்கு இதுக்கும் பதில் தெரியாம இருக்கிறது நல்லது என்று நான் நினைத்தேன்?//
    உண்மைதான்….

  6. ராஜ நடராஜன் says:
    February 2, 2009 at 6:17 pm

    யதார்த்தமும்,கேள்விகளும் கொண்ட பதிவு.

  7. சாத்திரி says:
    February 2, 2009 at 7:36 pm

    //கடைசியா ஒரு சாத்திரியைப் போனவாரம் சந்தித்தேன். (இவர் பதிவர் சாத்திரி அல்ல டி.வி.புகழ்) அவர் சொன்னார் ஏழரைச் சனியன் உச்சத்தில் இருப்பதால் இதுபோன்ற தாமதங்கள் வரத்தான் செய்யும்.//
    இதுக்கெல்லாம் ரி.வி புகள் சாத்திரி தேவையில்லை நானே சொல்லுறன் ஏழரைச்சனியன் உச்சந்தலையிலை நிக்கிது.பாத்தப்பு கவனம்

  8. TBCD says:
    February 2, 2009 at 8:07 pm

    🙁
    //இலங்கைத் தமிழ் கேட்கிற உங்களுக்கு அழகாயிருக்கிறது ஆனால் கதைக்கிற எனக்கு ஆபத்தாயிருக்கிறது என்று//

  9. தீவு says:
    February 2, 2009 at 8:32 pm

    வன்னியில என்னதான் நடக்குது? 🙂

  10. கமல் says:
    February 3, 2009 at 8:31 pm

    இதே போலத்தான் இங்கு வெளிநாட்டிலும். பிந்தி வந்த இலங்கைக்காரரைப் பார்த்து முந்தி வந்த வெளிநாட்டுக்காரர் எப்பிடிக் கேட்பீனம் தெரியுமோ? ஏன் பொடியள் அடிக்கிறாங்களில்லை? எப்ப பொடியள் அடிப்பீனம்? சனம் சாகிறதைப் பற்றி இங்க உள்ள சனத்துக்குக் கவலையே இல்லை.. இங்கை உள்ளவை சொல்லுவீனம் சனம் செத்தால் என்ன போராட்டம் வெற்றி பெற்றால் சரியாம் என்று? இப்பிடியும் மனிதர்கள் இருக்கீனம் தானே? நாங்கள் ஏதோ பொடியள் மாதிரி அவையள் எங்களிட்டை விளக்கம் கேட்பீனம். அதோடை ஏன் இங்க வந்தீங்கள்? களத்துக்குப் போகலாமே என்று கேட்ட ஆட்களும் இருக்கீனம் இங்கை??

  11. platinum says:
    March 20, 2009 at 11:44 pm

    மாமா நேங்க எங்க வரலாறஇ புரிஞ்சுகலை மாமோய் …. பக்கு நீரிணை முந்தி இந்தியாவோட சிலோனு செர்ந்திருந்தப் போ இருக்கல.. அது பிரிஞ்ச்சபோது அங்க இருந்து பிரிஞ்சிட்டம் ஈழதிண்ட மூத்த குடிகள்… அப்புறமா தொப்புள் கொடி கூட எங்க ஒரிமைக்க உயிர் தர தயாரா இருக்காங்க இப்ப… நீக மட்டும் ஏன் குளம்புறீங்க… உங்களுக்கே புரியாத யதார்த்தம் கொல்லவரும் எதிரியை கொல்லு என்று தானே அவங்க உங்களிட்ட கேக்கிறாங்க… ஏனு பயப்புடுறீங்க????

  12. Maal says:
    April 20, 2009 at 11:11 am

    உங்களுக்கே இவ்வளவு பிரச்சனை எண்டா இங்க கொழும்பில இருக்கிற எங்களுக்கு எவ்வளவு கடியா இருக்கும்

  13. I Make Thousands of Dollars a Month Posting Links on Google from Home says:
    June 9, 2009 at 3:26 am

    Hey, great post, really well written. You should write more about this.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • அனுபவம்
  • எண்ணங்கள்
  • ஒலிக்கவிதைகள்
  • ஒலிப்பதிவுகள்
  • கவிதைகள்
  • காதல் சிலுவையில்
  • குளிரடிக்கிற ஏரியா
  • சினிமா அனுபவம்
  • நேர்காணல்
  • புகைப்படம்
  • புத்தகம்
  • September 2024
  • June 2021
  • November 2019
  • March 2019
  • April 2018
  • May 2013
  • February 2013
  • December 2012
  • October 2012
  • July 2012
  • June 2012
  • November 2010
  • August 2010
  • June 2010
  • April 2010
  • March 2010
  • February 2010
  • September 2009
  • August 2009
  • July 2009
  • June 2009
  • February 2009
  • January 2009
  • December 2008
  • November 2008
  • October 2008
  • September 2008
  • August 2008
  • July 2008
  • June 2008
  • May 2008
  • April 2008
  • March 2008
  • January 2008
  • December 2007
  • October 2007
  • September 2007
  • August 2007
  • July 2007
  • June 2007
  • May 2007
  • December 2006
  • November 2006
  • October 2006
  • September 2006
  • August 2006
  • July 2006
  • June 2006
©2026 த.அகிலன் | WordPress Theme by SuperbThemes