Skip to content
த.அகிலன்

கனவும், வாழ்வும் பின் என் சொற்களும்…

த.அகிலன்

கனவும், வாழ்வும் பின் என் சொற்களும்…

கேட்கவியலாச் சொல்

த.அகிலன், March 5, 2010April 13, 2024

ravi2

தட்சணா மூர்த்தி அன்பழகன் (27.03.1985 – 05.03.2009)

எனக்கு நினைவிருக்கிறது  நான் இரண்டாம் தடைவையாகவும் அவன் முதலாம் தடைவையாகவும் கடல் பார்த்தது. ஒரு பள்ளிச்சுற்றுலாவில் மாத்தளன் கடற்கரையை நாங்கள் பார்த்தோம். நான் அப்பாட அந்தரட்டிக்கு சாம்பல் கரைக்கப்போகும் போது முதல் முதலாக கீரிமலைக்கடலைப் பார்த்திருக்கிறேன். அது சாதுவாய் இருந்தது அன்றைக்கு கடல் அச்சமூட்டவில்லை அப்போதெல்லாம் பொங்கிவரும் அலைகளில்லை அலைகள் குறித்த நினைவேயில்லை எனக்கு அப்போதெல்லாம். ஆனால் இம்முறை அப்படியல்ல கடல் சீறிக்கொண்டிருந்தது ஒரு மிருகத்தைப்போல  நான் நூற்றுச் சொச்சம் மாணவர்களினிடையில் அவசரமாய்த் தம்பியைத் தேடினேன். அலைகள் அவனை கொண்டுபோயிருமோ எண்டு நான் பயந்துபோனேன். ஓடிப்போய் அவன் கைகளைப் பிடித்துக்கொண்டு இரண்டு பேரும் கால்களில் நழுவும் மணலை உணர்ந்தபடி சிரித்தோம்.

எனக்கு உண்மையில் அன்றைக்கு ஆச்சரியமாயிருந்தது.  எனக்கு அவனைப்பிடிக்காது என்றுதான் நான் நினைத்துக்கொண்டிருக்கிறேன். பலமுறை அவனைத் தொந்தரவாய் உணர்ந்திருக்கிறேன். அவன் என் நிழலைப்போல எப்போதுமிருந்திருக்கிறான் அதுவே என் பெரிய பிரச்சினை அவன் என் சுதந்திரத்தை பறிப்பதாக நான் எண்ணிக்கொண்டிருந்தேன்.  என் பால்யத்தில் இருந்தே அவன் என்னைத் தொடர்ந்து கொண்டிருந்தான். நான் படித்த அதே பள்ளியில் அவன் படித்தான். நான் கலந்து கொண்ட பேச்சுப்போட்டியில் அவன் கலந்து கொண்டான் நான் செய்வதெல்லாவற்றையும் அவன் செய்கிறான் என்பது எனக்கு எரிச்சலூட்டியது. ஆனால் அவன் என்னோடு போட்டிக்கு நிற்பதாய் நான்ஒரு போதும் நினைத்ததில்லை மாறாக அவன் என்னைக் கண்காணிக்கிறான் என்பதாய் உணர்ந்திருக்கிறேன். எதற்கெடுத்தாலும் அகப்பைக்காம்பைத் தூக்குகிற அம்மாவிடம் நான் செய்கிற திருகுதாளங்களைப் போட்டுக்கொடுப்பதற்காகவே அவன் என்னைத் தொடர்கிறான் என்றெனக்குத் தோன்றும் அதனால் அவனை நான் சினந்திருக்கிறேன். அம்மாவுக்கு பிடித்த பிள்ளையாய் அவன் எப்போதுமிருந்தான். அம்மாவை அதிகம் நேசித்த மகனாகவும்.

ஆனால் எப்போதும் அவனை நான் வெறுத்ததில்லை என்னால் வெறுத்திருக்கவும் முடியாது. ஆனால் அவன் என்னோடு ஒட்டிக்கொண்டு திரியவே ஆசையாயிருந்தான். எப்போதும்  “அண்ணா டேய்” என்றழைத்த படி எல்லாவற்றிற்கும் கூட வந்தான்.ஒரே சமயத்தில் அண்ணனாகவும் தோழனாகவும் என்னை அவன் அழைத்தஅந்தச் சொல் ஒரு உத்தி அழகான உத்தி. அப்படி அழைக்க நிர்ப்பந்திக்கப்பட்ட வயது வித்தியாசங்களே எங்களுக்கிருந்தன. இனி எப்போதும் என்னை அப்படியாரும் அழைக்கப்போவதில்லை.

அதே மாத்தளன் கடற்கரையில் அவனிடம் வலுக்கட்டாயமாகத் திணிக்கப்பட்ட துப்பாக்கிகளுடன் அவன் பலியிடப்பட்டபோது. அவன் இந்த பூமியைவிட்டே நழுவியபோது அதை அறியாத ,ஒரு கையாலாகாத சுயநலவாதியாக சென்னையில் தூங்கிக்கொண்டிருந்திருக்கிறேன். என்னால் அவனைப்பற்றி முழுமையாக ஒரு படைப்பை ஒரு நினைவுக்குறிப்பை எப்போதும் எழுதிவிடமுடியாது. என்னால் முடிவதெல்லாம் அவன் பலியிடப்பட்டவன் என்பதை உரக்கச் சொல்வதே. யார் யாருடையதோ தூக்கின காவடியை ஆடிமுடிக்கும் கனவுகளுக்காக பலியிடப்பட்ட ஆயிரக்கணக்கான உயிர்களில் அவனுடையதும் ஒன்று என்று சொல்லுவதே. அவனை மாவீரர் பட்டியலில் சேர்த்து என்னால் கற்பனை பண்ணவே முடியாது. நான் ஒரு மாவீரனின் அண்ணன் என்று குளிர்காய விரும்பவில்லை. அவன் பலியிடப்பட்டவன் அதுவே உண்மை அவன் சுமந்திருந்த துவக்கு அவன் மேல் திணிக்கப்பட்ட துவக்கு. அவனைக் கொன்றதும் அதுவே.

மேலும் சில நினைவுகள்

நிலவு

மரணத்துக்கு முன்னும் பின்னுமான குறிப்புக்கள்

அம்மாவின் சுருதிப்பெட்டி

அன்புத்தம்பி அன்பழகனுக்காக – நன்றி ப.அருள்நேசன்

என்னுடைய ‘மரணத்தின் வாசனை’ தொகுப்பு முதலாம் பதிப்பு வந்தபோது என்னைவிட தொலைபேசிப் பேச்சில் அவன் அதிகம் புழகாங்கிமடைந்தான். அதே மரணத்தின் வாசனை மூன்று மாதங்கள் கழித்து இரண்டாம் பதிப்பு வந்தபோது அது அவனுக்கு சமர்ப்பிக்கப்பட்டிருந்தது.

அனுபவம் எண்ணங்கள் ஈழம்கட்டாய ஆட்சேர்ப்புசாலைத.அன்பழகன்தம்பிநினைவுக்குறிப்புமாத்தளன்மாவீரர்முள்ளிவாய்க்கால்விடுதலைப்புலிகள்

Post navigation

Previous post
Next post

Related Posts

எங்களை மன்னித்து விடுங்கள் இனியொரு தடைவை நாங்கள் தமிழர்களாகப் பிறக்கமாட்டோம்.

June 10, 2009December 1, 2009

மஞ்சு ஒரு அழகான குட்டிப்பெண். 3 வயதில் அவளைத் தூக்கி நான் முத்தமிடும் போதெல்லாம் அவள் என் கறுப்பு நிறம் தனக்கும் ஒட்டிவிடப்போகிறது என்ற சின்னக்காவின் வார்த்தைகளை நம்பி தனது கைகளால் நான் முத்தமிட்ட கன்னத்தை அழுந்த துடைத்துக்கொள்வாள்.. அகிலன் மாமா ஆள்தான் கறுப்பு மனசுமுழுக்க வெள்ளை (நம்பலாம்) என்று அவளது கனவில் ஒரு பட்டாம் பூச்சி சொல்லிய நாளொன்றில். அவளது அகிலன் மாமா  வெள்ளையாய் மாறுவதற்காக எனக்குச் சிலமுத்தங்களும்…

Read More

தசாவதாரமும் தவன் சுப்பையாவும்.

November 17, 2008December 1, 2009

வாறான் வாறான் பூச்சாண்டி ரயிலு வண்டியில குழந்தைகளை பயங்காட்டுவதற்காக பூச்சாண்டிகள்.. பேய்கள்.. ஆவிகள் பிசாசுகள். அரக்கர்கள். இப்படி விதமான பாத்திரங்கள் உலவிக்கொண்டேயிருக்கிறது.. சிலவேளை நம்மிடையே வாழுகின்ற மனிதர்களாகவும் இருக்கிறார்கள்.. குழந்தைகளைப் பயங்காட்டும் மனிதர்கள்.. இந்தா சயந்தன் மாமா வாறான் பிடிச்சுக்குடுத்திடுவன் எண்டு சொன்னாலே சில குழந்தைகள்.. சோற்றுருண்டையை முழுசா நேராக அடிவயிற்றுக்கே அனுப்பும்.. அச்சம் தான் மனிதர்களை ஆண்டுகொண்டிருக்கிறது.. குழந்தைகள் விதிவிலக்கா என்ன.. குழந்தைகள் சரியாகச் சாப்பிடுவதில்லை என்கிற வார்த்தையை…

Read More
அனுபவம்

அம்மாவின் சுருதிப்பெட்டி..

August 2, 2009April 20, 2024

நீங்கள் ஈழம் பற்றிய வீடீயோக்கள் வருகிற எந்த இணையத்தளத்திலும் பார்க்கலாம். தனது சோட்டிக்கு மேலால் பச்சைப் புடைவையைச் சுற்றியபடி வெறுங்கையுடன் தனித்து திசையற்று நடந்து போகிற பெண் என்ர அம்மாதான். பத்துமாதம் என்னைச் சுமந்து பெத்த அம்மாதான் அது. இரண்டு ஆண் பிள்ளைகளையும் ஒரு பொம்பிளைப் பிள்ளையையும் பெத்து வளர்த்து ஆளாக்கின அதே அம்மாதான்…. ஸ.. ப.. ஸ.. அம்மா சுருதி சேர்த்துக்கொள்ளுவது ஒரு அழகுதான். எனக்கு அம்மாவின் பாட்டுக்கேட்பதை…

Read More

Comments (12)

  1. ken says:
    March 6, 2010 at 9:48 am

    ”பலியிடப்பட்டான் “ இதற்கு மேல் சொல்ல ஒன்றுமில்லை.

  2. சயந்தன் says:
    March 7, 2010 at 1:03 am

    அந்தநாள் இன்னமும் நினைவில் நிற்கிறது. அது மறந்து போகக் கூடிய நாளும் அல்ல.
    கிட்டத்தட்ட உங்களோடான எல்லாத் தொடர்புகளையும் நிறுத்தி விட்ட பிறகும் இந்தப் பதிவு அன்றைய நாளின் பதற்றத்தை மீளக் கொண்டு வருகிறது.

  3. அருண்மொழிவர்மன் says:
    March 8, 2010 at 6:36 am

    என்ன சொல்வதென்று புரியவில்லை, உங்கள் வேதனைஐ புரிந்து கொள்வதைத் தவிர எதையும் சொல்லமுடியவில்லை அகிலன்

  4. மாற்றுப்பிரதி says:
    March 16, 2010 at 3:02 pm

    வாசிக்கிறேன். தொடருங்கள் தோழர்.

  5. கவிதை காதலன் says:
    March 18, 2010 at 8:53 am

    வேதனைகளை சுமந்த வார்த்தைகள்..

  6. princenrsama says:
    March 21, 2010 at 10:16 pm

    //உண்மை அவன் சுமந்திருந்த துவக்கு அவன் மேல் திணிக்கப்பட்ட துவக்கு. அவனைக் கொன்றதும் அதுவே.//

    யார் பதில் சொல்வது?

  7. Abimaran says:
    April 6, 2010 at 4:10 am

    பலியிடப்பட்டவன்………..

  8. Jasokaran says:
    May 18, 2010 at 10:56 am

    Agiilan, …………………………………….. i can’t say anything

  9. அருந்ததி says:
    May 26, 2010 at 11:50 am

    princenrsama Says:
    March 21st, 2010 at 10:16 pm
    //உண்மை அவன் சுமந்திருந்த துவக்கு அவன் மேல் திணிக்கப்பட்ட துவக்கு. அவனைக் கொன்றதும் அதுவே.// யார் பதில் சொல்வது?”
    பிரின்ஸ் இந்தப் பார்வை உங்களுக்கு எப்போ வந்தது, எல்லாம் கருணாநிதிக்கு எதிராக திரும்புகிறது என்ற உடனா?

  10. seelan says:
    May 31, 2010 at 10:28 am

    அன்பு ,அது நாங்கள் அழைக்கும் பெயர்.7ம் ஆண்டில் இருந்து தொடங்கிய நம் நற்ப்பு மாத்தளனில் புதைக்கப்பட்டது.
    அவன் கையில் துப்பாக்கி(சாவு)தினிக்கப்பட்டது..அது யாவருக்கும் தெரியும்…அவனை நான் இருதியாக
    மாத்தளனில் கன்டபொது..அவன் எனக்கு வாழ்வு கொடுத்தான்
    என் கையில் தினிக்கபட இருந்த சாவை ..நாசுக்காக தட்டிவிட்டான்.இழந்தவனுக்கு தெரியும் 30 வருட போராட்டத்தின்
    வலி.

  11. Karunaharamoorthy says:
    April 15, 2012 at 5:38 pm

    மிகவும் துன்பம் தருகிறது. இப்படி எத்தனை ஆயிரம் பேருடைய தவிப்புகள் குமுறிக்கொண்டிருக்கின்றன எம்பூமியில். நெஞ்சு பொறுக்குதில்லை.

  12. தமிழ்கவி says:
    March 6, 2013 at 5:48 am

    எப்போதும் மனிதனை வாழவைத்துக் கொண்டிருப்பது மறதிதான் இல்லையேல் நினைவுகளே இவனைக் கொன்றுவிடும். இன்னும் பொரியும் சட்டியிலிருந்து தப்புவதாக நினைத்துக்கொண்டு நெருப்பில் விழுந்த என் போன்றோருடைய கதையும் மீதமிருக்கிறதே…அடுத்தடுத்து மூன்று ஆண்மக்களையும் திருமணத்துக்கு நாள் குறித்திருந்த என் பேத்தி மாயாவையும்.(பின்புறமாக கைகள் கட்டப்பட்ட நிலையில் அவள் சுடப்படும் காட்சியைக் கண்டபின்னும்கூட) அது அவளில்லை என்று நம்பிக்கொண்டு இன்னும்வாழ்கிறேனே இது மறதிதந்த பரிசா? இல்லை எனக்கு நானே தரும் சமாதானமா? இப்படி அடிக்கடி ஆறிய புண்ணைக் கீறிப்பார்க்காதீர்கள்.தாங்க முடியவில்லை..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • அனுபவம்
  • எண்ணங்கள்
  • ஒலிக்கவிதைகள்
  • ஒலிப்பதிவுகள்
  • கவிதைகள்
  • காதல் சிலுவையில்
  • குளிரடிக்கிற ஏரியா
  • சினிமா அனுபவம்
  • நேர்காணல்
  • புகைப்படம்
  • புத்தகம்
  • September 2024
  • June 2021
  • November 2019
  • March 2019
  • April 2018
  • May 2013
  • February 2013
  • December 2012
  • October 2012
  • July 2012
  • June 2012
  • November 2010
  • August 2010
  • June 2010
  • April 2010
  • March 2010
  • February 2010
  • September 2009
  • August 2009
  • July 2009
  • June 2009
  • February 2009
  • January 2009
  • December 2008
  • November 2008
  • October 2008
  • September 2008
  • August 2008
  • July 2008
  • June 2008
  • May 2008
  • April 2008
  • March 2008
  • January 2008
  • December 2007
  • October 2007
  • September 2007
  • August 2007
  • July 2007
  • June 2007
  • May 2007
  • December 2006
  • November 2006
  • October 2006
  • September 2006
  • August 2006
  • July 2006
  • June 2006
©2025 த.அகிலன் | WordPress Theme by SuperbThemes