Skip to content
த.அகிலன்

கனவும், வாழ்வும் பின் என் சொற்களும்…

த.அகிலன்

கனவும், வாழ்வும் பின் என் சொற்களும்…

காதல் சிலுவையில் 04

த.அகிலன், September 28, 2008March 14, 2012

இதுவரை எழுதாத
சொற்கள் கொண்டவொரு கவிதையை
எழுதும் என் பிரயத்தனங்களை
ஏளனம் பொங்கப் பார்த்துக்கொண்டேயிருக்கிறாய் நீ
என்னுடைய வார்த்தைகளையெல்லாம்

அடிமைசெய்து வைத்துக்கொண்டு.

கூரையில் நிரந்தரத் தாளமெனப் பொழிந்து கொண்டிருந்துவிட்டு சட்டென்று நின்று போன மழையைப்போலப் போய்விட்டாய்.. உதிர்ந்து கிடக்கிற கொண்டல் பூக்களை இணைத்துக் கோலங்கள் செய்தபடி காத்திருக்கிறேன் நான்.. நீ வரும் திசைகளின் புகார்கள் விலகுவதாயில்லை. சில கவிதைகள் நினைவுக்குள் அலைந்தன. உன்னை நினைவூட்டும் பொருட்கள் இத்தனை தானென்ற என் வரையறைகள் சிதறிய இக்கணத்தில் நான் உணர்ந்து கொண்டேன். இங்கே எல்லாமே உன் நினைவுகளால் ஆனதென்றும். நான் உன்னால் ஆனவனென்பதையும்….

மழை ஓடிய வழித்தடங்களில் திசையற்றுக் கரைந்து போயிருந்தது உன் கால்தடங்கள். மனசுக்குள் மிதக்கிற உன் ஒற்றை ஓவியத்தில். உறைந்து போய்க்கிடக்கிறது மழையும் எனக்கழித்தபழைய புன்னகைஒன்றும். அவநம்பிக்கைகளால் செய்யப்பட்டிருந்த எனது நாட்களையும் வார்த்தைகளையும் தத்தெடுத்துக்கொண்ட உன் புன்னகை ஒரு வானவில்லைப்போலத் திடீரென்று மறைந்தது.. நீ கொடுத்த நம்பிக்கையின் குற்றுயிரில் நான் மறுபடியும் ஒரு வானவில்லைச் செய்வதற்கான வர்ணங்களைச் சேகரிக்கலானேன்.. வானவில்லை உன்னைப்போல தேவதைகள் மட்டுமே செய்யமுடியும் என்னைப் போல சாதாரணனுக்கு உன் பிரியமே வாய்க்காத போது எங்கனம் வானவில் செய்தல் வாய்க்கும்..

உனது உயரங்களை எட்டமுடியா என் நினைவுகள் நெருக்க நான் உன் புன்னகையில் தூரிகையைத் தொட்டுக் கொண்டு ஒரு ஓவியத்தை வரையத் தொடங்கினேன்.. நீ அவ் ஓவியத்தின் மீது நீரள்ளி ஊற்றுகிறாய். கரைந்தென் காலடியில் ஒழுகும் வண்ணங்களில் எது என் கண்ணீர். பிரித்தறிய முடியாதபடிக்கு பெருகிஓடுகிறது வண்ணங்கள்.. துயரத்தின் வண்ணங்களாகின அவை..

ஒரு மதுக்கோப்பையின் வண்ணங்கள் கொண்டதா காதல்.. ஒளியில் மினுங்கும் இந்தத் திராவகத்தினுள் உறைந்திருக்கிறது உன் பிரியம்.. நான் ஆசையோடு பருகத்தொடங்குகிறேன்… அது உன் பிரியப்போலியெனத் திடுக்கிடும் மனம் வீரிட்டலறுகிறது.. இத்தனிமையைச் சபித்தபடி.. மதுவாலும் உன்னை வெல்லமுடியாதொரு கணத்தில்.. மது தோல்வியுற்ற ஒரு மனிதனின் குற்றவுணர்வுகளோடு நீங்கிப்போயிற்று.. உனது இருப்பிடங்களைக் காலிசெய்யமுடியாமல்.. உனது நினைவுகளை உக்கச் செய்யமுடியாமல்.. அவமானமும் வெட்கமும் மேலிட மது தோற்றுப்போய் வெளியேறியது… குடிப்பதில் எந்தப்பயனுமில்லை எனத் தெரிந்துகொண்ட ஒருநாளில் உபயோகித்த மதுக்கிண்ணங்களை நொருக்குவதில திருப்திகொள்கிறது மனம்… நொருங்கித் தெறிக்கும் கண்ணாடிச்சில்லுகளில் கிழிந்து தொங்குகிறதென் தனிமை.. எனக்கண்ணாடிச்சில்லொன்றை எடுத்து எனக்குள் பதுங்கிக்கொண்டிருக்கும் உன்னைத் தோண்டி எடுத்துவிடலாமென்றிருக்கிறேன்..

எப்படி உன்னை வெளியெற்றுவது.. உனது நினைவுகளைப் பிரித்துவைக்கத் தொடங்கியபோதுதான் உணர்ந்தேன்… நீயற்ற ஒரு நினைவு எனக்குள் இல்லை என்பதை..

கண்ணீர் ஒரு துரோகி தனிமையில் துணைக்குக்கிளம்பிவிடுகிறது.. நான் தனித்திருக்க விரும்புகிறேன். நான் உனக்கும் நீ எனக்குமாய் அள்ளியிறைத்த வார்த்தைகள் சொரிந்து கிடக்கிறது எதிரில்.. பிரியமான நமது காதல் தீனமான குட்டி நாயின் பதுங்கலோடு பார்த்தபடியிருக்கிறது.. நான் உன்னைக் கெஞ்சுகிறேன். அதைச் சாகவிட்டுவிடாதே என்று.. நீ குரூரம் வழியச்சிரிக்கிறாய்.. இன்னமும் பதுங்கி ஒழித்துக்கொள்கிறது அது.

 

இப்போது நான் என்ன செய்வது? உனை வெளியேற்றும் வழிகள் அனைத்தும் தோற்க… நிர்க்கதியாய் நின்றேன் காலத்தின் எதிரில்.. வா உனது மயக்கும் புன்னகையில் எனது உணர்வுகளை மங்கச் செய்து எனது உடலைக்கீறிப்பிளந்துனது நினைவுகளை எடுத்துப்போ..
கோழிகூவித்தூங்கின நாட்கள்/விளிம்புகள் மழுங்கிய உனது குரல்

  

• உனது பிரியத்தின் வாசனை
மடித்து வைக்கப்பட்டிருக்கும்
றங்குப்பெட்டியின்
உட்சுவரில் ஒட்டப்பட்டிருக்கும்
கத்தரிக்கப்பட்ட கவிதைகள்
யாருடையவை?

• ஒரு
உடைந்து போன நிலவும்
மீந்த ஒற்றைக்கொலுசும்
பூட்டி வைக்கப்பட்டிருக்கும் 
பேழை
மனசு
• கோழிகள் கூவித்தூங்கின
எனது நாட்கள்.
நான்
உன் தடம் பற்றி நடக்கையில்.
அலையேந்திப் போயிருந்த
உன் காலடிகளைப் 
பின் தொடர்ந்து
அலைகளுக்குள் நடந்து 
கொண்டிருக்கிறது நிலவு
• முகமற்று
ஒளிரும்
உன் புனனகை மட்டுமாய்
அலைந்து கொண்டிருக்கிறது
எனது
தெருக்களில்.  

• கவனமற்றுச்
சொற்களை
இறைத்தபடியிருக்கிறேன்
தாள்களில்.
விளிம்புகள் மழுங்கிய அலைகளாய்
தவழும் உன் குரலால்

 

காதல் சிலுவையில்

Post navigation

Previous post
Next post

Related Posts

காதல் சிலுவையில் 05

October 6, 2008March 14, 2012

இன்றைக்குப் பெய்த மழையும் உன் முத்தங்களை நினைவூட்டிற்று.. என்னால் உன்னைப் போல் சலனமற்றிருக்க முடியவில்லை.. நீ கலைத்துவிட்டுப்போன எனது வசிப்பிடம் ஒழுங்கற்றுகிடக்கிறது.. நான் என் பிரியங்களையெல்லாம் ஒன்று திரட்டி உனது திசைகளில் ஏவினேன்.. ஒய்ந்த மழையின் பின் சொட்டிக்கொண்டிருக்கும் இலைகளின் துளியைக் கைகளில் ஏந்திக்கொள்ளுகையில் உன் குரலின் ரகசியங்கள் அதில் ஒளிந்துகொண்டிருப்பதாய் படுகிறதெனக்கு.. நீ ஒரு குட்டிப்பெண்.. சில சமயம் அம்மா..  என் திசைகளில் படர்ந்த இருள் நீ விலக்கியது….

Read More

காதல் சிலுவையில் 02

September 16, 2008March 14, 2012

விளக்குகள் அணைக்கப்பட்ட கரையில் தளும்பிக்கொண்டிருக்கிற மதுக்கிண்மெனக்கிடக்கிறது கடல்.. உனது நினைவுகளெனப் பற்றியிழுத்து எனை வீழ்த்தும் திட்டங்கள் வகுக்கிறது கரைமணல்.. யாரோ ஒருத்தனின் முத்தங்களிற்கான யாரோ ஒருத்தியின் சிணுங்கலை எடுத்துப்போகிறது காற்று எனைக்கடந்து.. உனது முத்தங்களை நினைவூட்டி.. உன் சாயலை ஒத்த ஒருத்தியிடம் தயங்கிநிற்கிறதென் பாதங்கள்.. நிலவு எரிந்துகொண்டிருக்கிறது.. ஒரு மதுக்கடையின் மங்கலான விளக்குப்போல.. உலகம் ஒரு நாகரீகமான மதுக்கடை.. அதனால் தான் போதை எல்லாவற்றிலும் ஒளிந்திருக்கிறது.. காதல்,வெற்றி,காமம் எல்லாவற்றிலும் உள்ளொளிர்ந்து…

Read More

காதல் சிலுவையில் 01

September 15, 2008March 14, 2012

நீ எடுத்துச் சென்ற பிரியங்களை வேறெதனாலும் நிரப்ப முடியவில்லை.. கண்ணாடிக்குவளைகளுள் உடைந்து சிதறும்.. நுரைகளில்.. நொருக்கிக்கொண்டிருக்கிறேன் உனது பிரியத்தை.. ஒரு கணத்தில் குவளையே உன் முகமாக வீசியெறிகிறேன் அதை ஒரமாய்.. உடைந்து சிதறிய கண்ணாடித்துண்டுகளிலெல்லாம் பல்கிப்பெருகுகிறாய் ஏளனச் சிரிப்போடு.. நீ கொடுத்ததை எல்லாம் எடுத்துக்கொள்.. ஒரு மழைநிசியில் நீ கொண்டு வந்த பிரியங்களையெல்லாம்.. மழைநின்ற நண்பகலில் எடுத்துக்கொண்டு வெளியேறினாய்.. வானவில் அழியத்தொடங்கியிருந்த அந்த மழைப்பகல் கோடையாகிற்றெனக்கு மட்டும். பிறகு பெய்த…

Read More

Comments (5)

  1. விஜய் says:
    September 29, 2008 at 1:09 pm

    //இதுவரை எழுதாத
    சொற்கள் கொண்டவொரு கவிதையை
    எழுதும் என் பிரயத்தனங்களை
    ஏளனம் பொங்கப் பார்த்துக்கொண்டேயிருக்கிறாய் நீ
    என்னுடைய வார்த்தைகளையெல்லாம்
    அடிமைசெய்து வைத்துக்கொண்டு.//

    நீங்களாப் போய் அடிமைப் படுறது பிறகு அழுகிறது சொன்னாக் கேக்கிறீங்களாடா..

  2. bala says:
    September 30, 2008 at 9:06 am

    தெறிக்கும் கண்ணாடிச்சில்லுகளில் கிழிந்து தொங்குகிறதென் தனிமை..

    கண்ணீர் ஒரு துரோகி தனிமையில் துணைக்குக்கிளம்பிவிடுகிறது

    நான் உன்னால் ஆனவனென்பதையும்….

    naan rasitha varigal ivai akilan,
    kaathal vali arputhamai padapidithulleergal

    nandri
    bala

  3. Anonymous says:
    September 30, 2008 at 6:29 pm

    ஆவதும் பெண்ணாலே மனிதன் அழிவதும் பெண்ணாலே… 🙂

  4. mercy says:
    October 15, 2008 at 8:45 am

    aaki vidum pothe aagi kolla vendum, aaki viduval endra alatchiyathil irundhal thaanaga alinthupovan aval alzhika vendiya avashiyam illai

  5. Kavi says:
    June 7, 2009 at 4:09 pm

    ஞாயிறு தினக்குரலில் உங்கள் நேர்காணல் படித்தேன்… உங்கள் ஆக்கங்களையும் இணையத்தில் படித்தேன்…ஈழத்தமிழர் ஆக்கங்கள் இன்னும் வரவேண்டும்.. ஈழத்தமிழர் சோகங்கள் உலகுக்கு சொல்லப்பட வேண்டும

    கொழும்பில் இருந்து கவி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • அனுபவம்
  • எண்ணங்கள்
  • ஒலிக்கவிதைகள்
  • ஒலிப்பதிவுகள்
  • கவிதைகள்
  • காதல் சிலுவையில்
  • குளிரடிக்கிற ஏரியா
  • சினிமா அனுபவம்
  • நேர்காணல்
  • புகைப்படம்
  • புத்தகம்
  • September 2024
  • June 2021
  • November 2019
  • March 2019
  • April 2018
  • May 2013
  • February 2013
  • December 2012
  • October 2012
  • July 2012
  • June 2012
  • November 2010
  • August 2010
  • June 2010
  • April 2010
  • March 2010
  • February 2010
  • September 2009
  • August 2009
  • July 2009
  • June 2009
  • February 2009
  • January 2009
  • December 2008
  • November 2008
  • October 2008
  • September 2008
  • August 2008
  • July 2008
  • June 2008
  • May 2008
  • April 2008
  • March 2008
  • January 2008
  • December 2007
  • October 2007
  • September 2007
  • August 2007
  • July 2007
  • June 2007
  • May 2007
  • December 2006
  • November 2006
  • October 2006
  • September 2006
  • August 2006
  • July 2006
  • June 2006
©2026 த.அகிலன் | WordPress Theme by SuperbThemes