அவளது
ஊரின் புழுதிச் சாலையையும்
பழகிய நிலவையும்
பிரியமுடியாக் கிழவியின்
புலம்பலினை ஆற்றமுடியா
அலையின் வார்த்தைகள்
மண்டியிட்டு வீழ்கின்றன.
அவள் காலடியில்.
இந்தக் கடலுக்கு
அப்பால்தான்
நம் ஊரிருக்கிறதா?
மறுபடி மறுபடி
கேட்டுக்கொண்டிருக்கின்றன
குழந்தைகள்.
தன்
முதுமைச் சுருக்கங்களில்
படியும் மெல்லிய
பிரகாசத்துடன்
தலையசைத்த படியிருக்கிறாள்
கிழவி… ஆமென்று.
இந்த நிலவா?
அங்கேயுமிருந்தது?
மறுபடியும் கிழவியின்
நினைவுகளைக் கலைத்த
குழந்தைகள் கேட்டன.
ம் அதேதான்.
வழியவிட்ட பெருமூச்சிற்கிடையில்
இதேதான் அங்கேயுமிருந்ததாய்
கிழவி சொன்னாள்.
அப்ப…..!
நிலவும் அகதியாய்
எம்முடன் வந்ததா?
விடைதரமுடியாக்
கேள்வியைத் தூக்கிக் கொண்டு
குழந்தைகள் ஓடின….
//விடைதரமுடியாக்
கேள்வியைத் தூக்கிக் கொண்டு
குழந்தைகள் ஓடின….//
நட்சத்திர வார நிறைவில் உங்கள் முத்திரைக் கவிதை
அகிலனின் அடையாளங்களோடு பதிவாகியிருக்கிறது கவிதை, ஒரு வரியில் சொல்கிற விடயம்தான் ஆனால் ஒவ்வொரு வரிகளிலும் உணர்ச்சிகளை காட்டியிருக்கிறீர்கள் அதிலும் அந்த கடைசி வரிகள் உங்களிற்கே உரிய தனி நடை அகிலன்…கடந்த சில நாடகளில் உங்களை வாசித்தறிந்ததிலிருந்து சொல்கிறேன்…
” அப்ப…..!
நிலவும் அகதியாய்
எம்முடன் வந்ததா? ”
உம் ஒவ்வொரு கவிதை பதிவுக்கும் “அருமை” என்று மறுமொழியிடுவதில் எனக்கு உடன்பாடில்லை..
ஆனாலும் இக்கவிதை மிக மிக மிக அருமை.. கொஞ்சம் உள்ளூர சில வலிகளை தந்தபோதிலும்..
“அப்ப…..!
நிலவும் அகதியாய்
எம்முடன் வந்ததா?
விடைதரமுடியாக்
கேள்வி”
நிச்சயமாக உங்கள் எண்ணம் எங்கள் மனதையும் கேட்கிறது.
//விடைதரமுடியாக்
கேள்வியைத் தூக்கிக் கொண்டு
குழந்தைகள் ஓடின….//
நான் மிகவும் ரசித்த கவிதைகளுள் ஒன்று 🙂
உங்கள் வலியை அழகாக செதுக்கியிருக்கிறீர்கள் அகிலன்
வலி நிறமபிய பதிவு
very nice
ஈழத் தமிழன் வாழ்வின் அடையாளங்கள்..
மிகவும் அருமை….