பிரபாகரனுக்குப் பின்னரான தமிழ் அரசியல்
இலங்கைத் தீவில் பிரபாகரனுக்குப் பின்னரான தமிழ் அரசியல் என்பது இன்னமும் தொடங்கவில்லை. நாடு இப்பொழுதும் ஒரு இடைமாறு காலகட்டத்தில்தான் நிற்கிறது. பிரபாகரன் இல்லை என்பதை ஜீரணித்துக்கொள்ள முடியாத தமிழர்களே அதிகமாகத் தென்படுகிறார்கள். அவரை ஒரு சாகாவரம் பெற்ற மாயாவியாக உருவகித்து வைத்திருந்த அநேகமானவர்களுக்கு அவரில்லாத ஒரு உலகத்தை நினைத்துப் பார்க்கவே முடியாதிருக்கிறது. குறைந்தபட்சம் அவருடைய ஆவியோடாவது கதைத்துவிடவேண்டும் என்ற தவிப்போடு அவர்கள் கண்ணாடிக் குவளைகளை நகர்த்திக்கொண்டிருக்கிறார்கள்.
ஆனால், பிரபகாரன் அரங்கில் இல்லை என்பதே உண்மை. அவர் தப்பியோடி எங்காவது பர்மியக் காடுகளில் ஒளிந்திருந்தாலும்கூட இனி அவரால் அரசியல் செய்யமுடியாது. அவருடைய அரசியல் எப்பொழுதோ காலாவதியாகிவிட்டது. அவர் உயிருடன் தப்பியிருந்தாலும் கூட அரசியல்த் துறவறம் பூண்டு ஒரு தலைமறைவுச் சாட்சியாக இருக்கலாம். அவ்வளவுதான். அதாவது பிரபாரனின் யுகம் முடிந்துவிட்டது. நவீன தமிழ் அரசியலில் தோன்றிய ஒரு வீரயுகம் முடிந்துவிட்டது. அதை ஒரு வீரயுகம் என்று அழைக்கலாமா என்பதும் இப்பொழுதும் விவாதத்துக்குரியதே.
விடுதலைப் புலிகளின் வீரம் தியாகம் என்பவற்றைச் சூழ்திருந்த புனிதத்திரைகள் யாவும் நாலாம்கட்ட ஈழப்போரில் கிழிந்துபோய்விட்டன. தன்னையும் தன்னுடைய அதிகாரத்தையும் தக்கவைப்பதற்காக அவர் ஆடிய சூதாட்டம் அவரை உலகின் மன்னிக்கப்படமுடியாத போர்க்குற்றவாளிகள் மற்றும் மனிதகுலத்துக்கு எதிரான குற்றங்களைப் புரிந்தவர்களின் பட்டியலில் சேர்த்துவிட்டது.
மாவிலாற்றிலும், முகமாலையிலும் தோற்கடிக்கப்பட்டபோது பிரபாகரன் நிதானமிழந்துவிட்டார். அவர் ஆட்சிசெய்த அரை அரசைப் பாதுகாப்பதற்காக அவருடைய பிரஜைகள் என்று அவர் நம்பிய சுமார் மூன்று இலட்சம் மக்களை அவர் வதைத்த விதம் அதை நியாயப்படுத்த அவருடைய ஆட்கள் சொன்ன பொய்கள் தோல்விகளையும் இயலாமைகளையும் மறைக்க அவர் தனது சொந்தச் சனங்களுக்கே அவிழ்த்துவிட்ட கட்டுக்கதைகள் எல்லாமுமே அவருடைய தலையைச் சுற்றி அவருடைய அபிமானிகளால் வரையப்பட்டிருந்த ஒளிவட்டத்தை அழித்துவிட்டன. முதலில் அவர் வீட்டுக்கு ஒரு பிள்ளை என்று கேட்டார். முடிவில் வீட்டிலுள்ள வலுவுள்ள எல்லோரையும் கேட்டார். வராதவர்களைக் கடத்திச் சென்றார். எதிர்த்த உறவினர்களைச் சுட்டுக்கொன்றார் அல்லது அடித்து நொறுக்கினார். தனது பிடியிலிருந்து தப்பி அரச படைகளை நோக்கி ஓடிய தனது சனங்களைப் புறமுதுகில் சுட்டுக்கொன்றார் அல்லது தப்பியோடிப் பிடிபட்டவர்களை அடித்து நொறுக்கினார்.
நவீன தமிழ் அரசியலில் தனிநபர் வழிபாட்டின் உச்சமாகக் காணப்படுவது அவர்தான். அதேசமயம் தனது சொந்தச் சனங்களால் வேறெந்தத் தமிழ்த் தலைவரையும் தூற்றியிராத அளவுக்கு கேவலமான வசைச் சொற்களால் தூற்றப்பட்ட ஒரு தலைவராகவும் அவரே காணப்படுகிறார். அவர் தொடக்கி வைத்த தமிழின் நவீன வீரயுகம் எனப்படுவது அவரைத் தமிழ் வீரத்தை அதிகம் துஷ்பிரயோகம் செய்த ஒரு தலைவராகவே நிறுவிவிட்டு முடிந்திருக்கிறது.
பிரபாகரன்தான் எல்லாமும் என்று நம்புகிறவர்களைப் பொறுத்தவரை எல்லாம் முடிந்துவிட்டதுதான். 38 ஆண்டுகாலத் தமிழ் அரசியல் முழுவதும் வீணாகிவிட்டதுதான். ஆனால், பிரபாகரனோடு முடிவுக்கு வந்தது தமிழ் மிலிட்டரிசம் தான். தமிழ் அரசியல் அல்ல. தமிழின் நவீன வீரயுகம் ஒன்று அவருடன் முடிந்துவிட்டது இனி அறநெறியுகம் ஒன்று வரும். அதற்கிடையிலான ஒரு இடைமாறு காலகட்டத்திலேயே இப்பொழுது தமிழ் அரசியல் நிற்கிறது.
அறநெறிக்காலம் என்றதும் நாயன்மார்களும், ஆழ்வார்களும் வந்து உதித்து அதிசயங்கள், அற்புதங்களைச் செய்து தேவாரத் திருப்பதிகங்களைப் பாடப்போகிறார்கள் என்ற அர்த்தத்தில் அல்ல. மாறாக, தமிழின் முன்னைய வீரயுகங்களைப்போல யுத்தத்தின் படிப்பினைகளிலிருந்து வீரத்திற்குப் பதிலாக அறிவைப் போற்றும் ஒரு புதிய மரபின் எழுச்சியை அதாவது மரபு மாற்றத்தைக் கருதியே இங்கு இவ்வாறு கூறப்படுகிறது. அதாவது, புலிகளின் வீழச்சியிலிருந்து பெற்ற படிப்பினைகளிலிருந்து ஒரு புதிய தமிழ் அரசியல் வெளியை உருவாக்குவது என்ற அர்த்தத்தில்.
பிரபாகரன் ஒரு கெடுபிடிப்போரின் குழந்தை, அவர் கெடுபிடிப்போரின் இரு துருவ போட்டி அரசியலுக்கு ஊடாகவே வளர்ந்தவர். ஆனால், கெடுபிடிப்போரின் பின்னரான ஒரு துருவ உலக ஒழுங்கை அவரால் புரிந்துகொள்ள முடியவில்லை. அல்லது அவரது தலையைச்சுற்றி வரையப்பட்டிருந்த ஒளிவட்டம் ஒரு புதிய உலக ஒழுங்கைப் புரிந்துகொள்ள அவரை விடவில்லை. அல்லது அதை இடித்துரைக்க வல்ல புத்திஜீவிகளை அவர் நெருங்கிச்செல்லவில்லை. முள்ளிவாய்க்காலில் அவருடைய வீழ்ச்சியின் இறுதிக்கட்டத்திலும் அவர் எதற்காகவோ காத்திருந்தும் கூட ஒரு துருவ உலக ஒழுங்கைச் சரியாக உள்வாங்காததன் விளைவுதான்.
ஒரு துருவ உலக ஒழுங்கை அவர் மட்டுமல்ல அவரைப்போன்ற ஒற்றைப் பரிமாண அரசியலை அவாவும் எவராலும் சுதாகரித்துக்கொள்ள முடியாதுதான். ஏனெனில், ஒரு துருவ உலகம் எனப்படுவது தகவல் தொழில்நுட்பம், நிதி மூலதனம் இரண்டினதும் திரட்சியாக எழுச்சிபெற்ற ஒன்று. தகவல் தொழில்நுட்பமானது தகவல்களை ஒரு மையத்தை நோக்கிக் குவித்தது. நிதி மூலதனமானது நிதியை ஒரு மையத்தை நோக்கிக் குவித்தது. தகவல் தொழில்நுட்பம் தகவலை அதாவது அறிவைத் திறந்துவிட்டது. நிதி மூலதனம் சந்தைகளைத் திறந்துவிட்டது. இரண்டும் சேர்ந்து தேசங்களின் எல்லைகளையும், கண்டங்களின் எல்லைகளையும் கரைத்து வருகின்றன. இவ்விதம் எல்லைகள் கரைந்துருவாகி வரும் பூகோளக் கிராமத்தில் எதுவும் தூயதாக இருக்க முடியாது. எல்லாமே ஒன்று மற்றதுடன் கலந்துதான் இருக்கமுடியும். இதில் தூய விடுதலையும் இல்லை. தூய இலட்சியங்களும் இல்லை. தூய தியாகமும் இல்லை. தூய துரோகமும் இல்லை. தூய வீரமும் இல்லை. தூய கோழைத்தனமும் இல்லை. எல்லாமே ஒன்று மற்றதிலிருந்து பிரிக்கப்படவியலாதபடி ஏதோவொரு விதத்திற்கு கலந்துதான் காணப்படுகின்றன. அதாவது கலப்பு நிறங்களின் யுகம் இது. அல்லது சாம்பல் நிற ஓரங்களின் யுகம் இது. தூயது என்று எதுவுமே தனித்து நிற்கமுடியாதளவுக்கு தொழில்நுட்பமும் நிதிமூலதனமும் உலகங்களை இணைத்துகொண்டுவருகின்றன.
இதனால் எதிலும் ஒற்றைப் பரிமாணம் என்பது நடைமுறைச் சாத்தியம் அற்றதாகி வருகிறது. அரசியல், பொருளாதாரம், அறிவியல், கலை, இலக்கியம் அனைத்திலுமே பல்பரிமாணம் அல்லது பல்லொழுக்கம் -மல்டி டிசிப்பிளின்- எனப்படுவதே முழுமையானது என்றாகி வருகிறது. எதிலும் பல்பரிமாணத்தை அல்லது பன்மைத்துவத்தை அல்லது கூட்டு ஒழுக்கத்தை ஏற்றுக்கொள்ளாத எவரும் முழுமைத்துவத்துக்கு எதிரானவர்களாக காணப்படுகிறார்கள். இப்பூமியில் எதுவும் ஏதோவொரு முழுமையின் தவிர்க்கப்படவியலாத ஒரு பகுதியாகவே காணப்படுகிறது. எனவே, முழுமைத்துவம் எனப்படுவது அதன் பிரயோக அர்த்தத்தில் பன்மைத்துவம்தான். பன்மைத்துவம் எனப்படுவது அதன் அரசியல் பிரயோகத்தில் ஜனநாயகம்தான். இந்த யுகமாற்றத்தை ஏற்றுக்கொள்ளாத எவரும் அரசியல்க் கூர்ப்பில் காலாவதியாகவேண்டியதுதான். பிரபாகரனுக்கும் இதுதான் நடந்தது.
கெடுபிடிப்போரின் குழந்தையான அவரால் கெடுபிடிப்போரின் பின்னரான ஒரு துருவ உலக ஒழுங்குடன் அனுசரித்துப்போக முடியவில்லை. எனவே அவர் காலாவதியாகி அரங்கிலிருந்து அகற்றப்பட்டார். அவரால் எதையுமே கறுப்பு வெள்ளையாகத்தான் பார்க்க முடிந்தது. அவரிடம் இரண்டே இரண்டு பெட்டிகள்தான் இருந்தன. ஒன்று கறுப்பு மற்றது வெள்ளை. இரண்டு பட்டியல்கள்தான் இருந்தன. ஒன்று தியாகிகளின் பட்டியல் மற்றது துரோகிகளின் பட்டியல். இந்த இரண்டுக்கும் வெளியே இந்த இரண்டுக்கும் இடையே சாம்பல் நிறத்திலும் பெட்டிகள் இருக்க முடியும் என்பதை ஏற்றுக்கொள்ள அவருடைய ஒற்றைப் பரிமாண ஒழுக்கம் விட்டுக்கொடுக்கவில்லை. பூமி சாம்பல் நிற ஓரங்களை நோக்கிச் சுற்றிக்கொண்டிருக்க பிரபாகரனோ கறுப்பு வெள்ளை அரசியலை நடத்த முற்பட்டார். முடிவில் அரங்கிலிருந்து அகற்றப்பட்டார்.
எனவே பிரபாகரனிடமிருந்து கற்றுக்கொள்வது என்பது சாம்பல் நிற ஓரங்களை ஏற்றுக்கொள்வதுதான். அது நிச்சயமாக புலிகளின் சாம்பலில் இருந்துதான் வரவேண்டியிருக்கிறது.
பிரபாகரன் எல்லாவற்றையுமே பிரித்து வைத்திருந்தார். அவர் இலங்கைத் தீவை மட்டும் பிரிக்க முயலவில்லை. முதலில் அவர் தமிழ் அறிவைத் தமிழ் வீரத்திலிருந்து பிரித்தார். பின்னர் சிங்கள முற்போக்குச் சக்திகளை தமிழர்களிடமிருந்து பிரித்தார். பின்னர் அவர் தமிழர்களை தியாகி; துரோகி; மாற்று இயக்கம் என்று கூறுபோட்டுப் பிரித்தார். பின்னர் முஸ்லிம்களைத் தமிழர்களிடமிருந்து பிரித்தார். பின்னர் கிழக்குத் தமிழர்களை வடக்கிலிருந்து பிரித்தார். இவை தவிர ரஜீவ் காந்தியைக் கொல்லுமாறு உத்தரவிட்டதன் மூலம் இந்தியாவைத் தமிழர்களிமிருந்து பிரித்தார். பின்னர் நாலாம் கட்டம் ஈழப்போருக்கான புறநிலமைகளை உருவாக்கியதன் மூலம் மேற்கு நாடுகளை தன்னிடமிருந்து பிரித்தார். பின்னர் நாலாம்கட்ட ஈழப்போரில் தன்னையும் தன்னுடைய அதிகாரங்களையும் பாதுகாப்பதற்காக அவர் முன்னெடுத்த ஆட்பிடி அரசியலும் அதன் தொடர் விளைவுகளும் அவரை அவருடைய ஆட்சிக்குட்பட்டிருந்த சுமார் மூன்று இலட்சம் மக்களில் பெரும்பாலாலனவர்களிடமிருந்து பிரித்தன. முடிவில் முள்ளிவாய்க்காலில் அவர் சுற்றிவளைக்கப்பட்டிருந்தபோது கவச குண்டலங்களை இழந்த கர்ணணைப்போலக் காணப்பட்டார்.
எனவே பிரபாகரனிடமிருந்து கற்றுக்கொள்வது என்பது என்னவெனில் தனது மெய்யான பலங்கள் எவையெவையோ அவற்றையெல்லாம் தன்னிடமிருந்து பிரித்துவைத்த அல்லது பிரிந்துபோகவைத்த ஒரு மனிதனின் வீழ்ச்சியைத்தான். எனவே, பிரபாகரனுக்குப் பின்னரான தமிழ் அரசியல் வெளி எனப்படுவது அவர் பிரித்துவைத்த எல்லாவற்றையும் ஒரு மெய்யான தேசிய அடித்தளத்தில் ஒன்றுசேர்த்து வைப்பதுதான்.
மேற்கத்தைய அறிஞர்களின் முடிவுகளின்படி தேசியம் எனப்படுவது ஜனநாயகத்தை அதன் உள்ளடக்கமாகக் கொண்டிருப்பது. இதன்படி கூறின் தேசியம் எனப்படுவது பன்மைத்துவத்தை அதன் உள்ளடக்கமாகக் கொண்டிருப்பது. அதாவது சாம்பல் நிற ஓரங்களைக் கொண்டதாக இருப்பது. எனவே பிரபாகரனுக்குப் பின்னரான தமிழ் அரசியல் எனப்படுவது சாம்பல் நிற ஓரங்களை உடையதொன்றாக உருவாகவேண்டும்;. தமிழர்கள் தமக்குள்ளும் தமக்கு வெளியே தீவு முழுவதும் தீவுக்கு வெளியே பிராந்திய மற்றும் சர்வதேச அளவிலும் சாம்பல் நிற ஓரங்களை உருவாக்கவேண்டும். அதாவது மையத்தில் நிறங்களின் தனித்துவங்கள் துலங்கும் அதேசமயம் ஓரங்களில் கலப்பு நிறங்களை அதாவது சாம்பல் நிற ஓரங்களைக் கொண்ட ஒரு முழுமை.
சாம்பல் நிற ஓரம் அல்லது சாம்பல் நிறத் தமிழ் அரசியல் வெளி எனப்படுவது, குறிப்பாக புலிகளின் வீழ்ச்சிக்குப் பின் அதைப்பற்றி உரையாடுவது என்று சிலருக்கு சரணாகதி அரசியலோ என்று தோன்றக்கூடும். அதாவது வென்றவர்களுக்கும் தோற்றவர்களுக்கும் இடையிலான கோழைத்தனமான ஒர் உடன்படிக்கைக்கான கோட்பாட்டு விளக்கமா இது என்று கேள்விகள் வரும்.
இல்லை. நிச்சயமாக இல்லை.
சாம்பல் நிறம் என்று இங்கு கூறப்படுவது எதுவும் தனது தனித்துவத்தை இழந்து மற்றதுடன் இரண்டறக் கரைந்து சங்கமாகிவிடுதல் என்ற அர்த்தத்தில் அல்ல. ஒன்று மற்றதுடன் கரைந்து எல்லாமும் ஒரே கலவையாக மாறிவிடுதல் என்பதும் ஒற்றைப் பரிமாண வாதம்தான். அது பன்மைத்துவத்துக்கு எதிரானதுதான். மாறாக, இங்கு சாம்பல் நிறம் என்று கூறப்படுவது எதுவெனில், எதையும் கறுப்பு வெள்ளையாக மட்டும் பார்க்கக்கூடாது என்ற அர்த்தத்தில்தான். எதுவும் தனது தனித்துவத்தை இழந்துவிடாமலிருக்கும் அதேசமயம் மற்றொன்றுடன் கலந்து வாழ்தலே இது. மையத்தில் நிறத்தின் தனித்துவம் துலங்கும் அதேசமயம் ஓரத்தில் கலப்பு நிறங்கள் (சாம்பல் நிறம்) காணப்படும். இதுதான் மெய்யான பன்மைத்துவம். அதாவது தனித்துவம் மிக்க இரண்டு சிறு முழுமைகள் ஒன்று மற்றதுடன் இணைந்து ஒரு பெரிய முழுமை உருவாகிறது. இதன்படி ஒன்று அது அதுவாக இருக்கும் அதேசமயம் ஒரு பெருமுழுமையின் தவிர்க்கப்படவியலாத ஒரு பகுதியாகவும் இருக்கும். தொழில்நுட்ப வார்த்தைகளில் இதுதான் இன்ரநெற் உலகம். அரசியல் அர்த்தத்தில் இதுதான் பன்மைத்துவம். இதுவே மெய்யான ஜனநாயகத்துக்கான தகர்க்கப்படமுடியாத அடித்தளமும்கூட. இதற்குத்தான் ஒப்பீட்டளவில் அதிகளவும் வீரம் தேவை. சுத்த வீரர்களால்தான் தமது தனித்துவங்களை இழந்துவிடாதிருக்கும் அதேசமயம் மற்றவர்களின் தனித்துவங்களையும் அங்கீகரிக்க முடியும்.
எனவே சாம்பல் நிற ஓரங்களின் அரசியல் எனப்படுவது அதன் பிரயோக இயக்கத்தில் பன்மைத்துவம்தான். ஒற்றைப் பரிமாண அரசியல் எதுவுமே பன்மைத்துவத்துக்கு எதிரானது. தமிழ் அரசியல் எனப்படுவது கடந்த சுமார் கால்நூற்றாண்டுக்கும் மேலாக பெருமளவுக்கு ஒற்றைப் பரிமாண அரசியலாகவே உருவாகி வந்திருக்கிறது. ஒற்றைப் பரிமாண அரசியல் எனப்படுவது அதன் பிரயோக வடிவத்தில் இராணுவ அரசியல்தான். தமிழ் மக்கள் கடந்த கால்நூற்றாண்டுக்கும் மேலாக இராணுவமயப்பட்டு வந்துள்ளார்கள்.
இதனால் தமிழ் அரசியலை பன்மைத்துவத்தை நோக்கிக் கொண்டு வருதல் என்பது அதை இராணுமயநீக்கம் செய்வதுதான். ஒரு சமூகத்தை இராணுவமயநீக்கம் செய்வது என்றால் அதை ஃபியர் சைக்கோஸிஸ் (அச்ச உளவியல்) இலிருந்து விடுவிக்கவேண்டும். ஏகப்பரிமாண அரசியலின் பிரதான தோற்றப்பாடே ஃபியர் சைக்கோஸிஸ்தான். எனவே ஃபியர் சைக்கோஸிஸ் இலிருந்து தமிழ்ச்சமூகத்தை முதலில் விடுவிக்கவேண்டும். அதற்கு சிவில் கட்டமைபுக்களை உருவாக்கவேண்டும்.
ஒரு சமூகத்தை ஃபியர் சைக்கோஸிஸ் இலிருந்து விடுவிப்பதென்றால் அங்கே மூடப்பட்டிருக்கும் எல்லாக் கதவுகளையும் திறக்கவேண்டும். மக்களை அவர்களுடைய பதுங்கு குழிகளை விட்டு வெளியே வருமாறு ஊக்குவிக்கவேண்டும். சுமார் கால்நூhற்றாண்டுக்கும் மேலாக ஏன் அதற்கு முன்பிருந்த தமிழர்கள் ஏதோவொரு பதுங்கு குழிக்குள்தான் வசித்துவருகிறார்கள். ஒன்றில் பண்பாட்டுப் பதுங்குகுழி அல்லது சாதிப் பதுங்குகுழி அல்லது பிரதேசவாத மற்றும் ஊர்வாதப் பதுங்குகுழி. இவற்றுடன் பிரபாகரன் கொண்டுவந்த இராணுவப் பதுங்குகுழி.
எனவே, தமிழர்களை முதலில் பதுங்குகுழிகளுக்குள் இருந்து வெளியே எடுக்கவேண்டும். அதற்குவேண்டிய எல்லாவிதமான உரையாடல்களுக்கும் சுயவிமர்சனங்களுக்குமான கதவுகள் அகலத் திறக்கப்படவேண்டும். பிரபாகரனின் ஆவியோடு உரையாட விரும்புவோர் முதல் தமது மனச்சாட்சிகளோடு உரையாடட்டும் அப்பொழுதுதான் ஒரு அறநெறி யுகத்தின் பிறப்பை அவர்களால் ஆமோதிக்க முடியும். அப்பொழுதுதான் சாம்பல் நிற ஓரங்களை அவர்களால் ஏற்றுக்கொள்ள முடியும். இது விடயத்தில் இலங்;கைத் தீவுக்குள்ளும் தீவுக்கு வெளியே தமிழ் நாட்டிலும், புலம்பெயர்ந்த நாடுகளிலும் உள்ள அனைத்து புத்திஜீவிகளும் கலைஞர்களும் அக்கறை கொண்ட எல்லாரும் ஒன்றுதிரளவேண்டும்.
கறுப்பு வெள்ளை அரசியல் எனப்படுவது நாடுகளையும், கண்டங்களையும், உலகங்களையும் மூடுவது.
ஆனால், சாம்பல் நிற ஓரங்களின் அரசியல் எனப்படுவது நாடுகளையும், கண்டங்களையும், உலகங்களையும் திறந்துவிடுவது:
கறுப்பு வெள்ளை அரசியல் அறிவின் எதிரி. சாம்பல் நிற அரசியலோ அறிவின் தோழன்.
கறுப்பு வெள்ளை அரசியல் ஒரு சமூகத்தை இராணுவமயப்படுத்தும். சாம்பல் நிற அரசியலோ ஒரு சமூகத்தை இராணுவமய நீக்கம் செய்து சிவில் கட்டமைப்புக்களை உருவாக்கும்.
கறுப்பு வெள்ளை அரசியல் ஏகப்பரிமாண அரசியலில் போய் முடியும். சாம்பல் நிற அரசியலோ பன்மைத்துவத்தை ஸ்தாபிக்கும்.
கறுப்பு வெள்ளை அரசியல் அச்ச உளவியலைப் பாதுகாக்கும். சாம்பல் நிற அரசியலோ மனித உரிமைகளைப் பாதுகாக்கும்.
கறுப்பு வெள்ளை அரசியல் கசப்பை, வெறுப்பை, வன்மத்தை, பழிவாங்கும் உணர்ச்சியைப் பேணும். சாம்பல் நிற அரசியலோ சகிப்புத்தன்மையையும், நல்லிணக்கத்தையும் பேணும்.
கறுப்பு வெள்ளை அரசியல் தன்னுடைய மெய்யான பலங்களைத் தன்னிலிருந்து பிரித்து முடிவில் எதிர்த்தரப்பின் நிகழ்ச்சி நிரலுக்குள் போய் வீழ்ந்துவிடும்.
ஆனால், சாம்பல் நிற அரசியலோ எல்லாத் தரப்பினரையும் தன்வசப்படுத்தி எதிர்ப்பையும் தனது நிகழ்ச்சி நிரலுக்குள் வந்துவிழச் செய்துவிடும்.
பிரபாகரனின் கறுப்பு வெள்ளை அரசியலாசை முடிவில் அவரது “பகைவர்களுக்கே” வெற்றியைப் பெற்றுக்கொடுத்துவிட்டது. 38 ஆண்டுகாலப் போராட்டத்தின் முடிவில் தமிழர்கள் பிச்சை வேண்டாம் நாயைப்பிடி என்ற இழிநிலைக்கு வந்து சேர்ந்திருக்கிறார்கள்.
ஆனாலும் வீழ்ச்சியுற்றிருப்பது பிரபாகரனிஸம் மட்டும்தான். நிச்சயமாகத் தமிழ் அரசியல் அல்ல. எனவே, பிரபாகரன் விட்ட தவறுகளிலிருந்து பெற்ற படிப்பினைகளின் அடிப்படையில் ஒரு புதிய தமிழ் அரசியல்வெளி உருவாக்கப்படவேண்டும்.
இனிப் பதுங்கு குழிகளும் வேண்டாம். புதை குழிகளும் வேண்டாம்.
தியாகிகள் பட்டியலும் வேண்டாம். துரோகிகள் பட்டியலும் வேண்டாம்.
வீரத்தை வழிபடப்போய் முடிவில் மரணத்தை மகிமைப்படுத்தி வாழ்வை நிராகரித்தது போதும்.
இனி அறிவை வழிபடுவதிற் தொடங்கி வாழ்வை ஆமோதிக்கும் ஒரு புதிய அரசியல் நாகரீகம் தேவை.
தான் சாகத் தயாராக இருந்த ஒரே காரணத்திற்காக பிற உயிர்களை ஒரு பொருட்டாகத்தானும் மதிக்காத ஒரு வீரமரபு இனி வேண்டாம்.
பதிலாக, தன்னுடைய உயிரின் பெறுமதி தெரிந்த காரணத்தினாலேயே பிற உயிர்களையும் தன்னுயிர்போல நேசிக்கும் ஒரு புதிய அரசியல் நாகரீகமே இனித் தமிழர்களுக்கு வேண்டும்
அதாவது புதிய சாம்பல் நிற அரசியல்வெளி ஒன்று வேண்டும்.
முக்கிய குறிப்பு
இந்தக்கட்டுரை நானெழுதிய கட்டுரை அல்ல.ஆனால் இந்த கட்டுரையில் சொல்லப்படுகின்ற உண்மைகள் நான் பேசவிரும்பியவை ஆனால் அதைப் பேசுவதற்கான இடத்தில் நான் இருக்கவில்லை என்பதால் பேசாமல் விட்டவை. இப்போது இந்தக்கட்டுரை இலங்கையின் அரச படைகளின் கட்டுப்பாட்டில் இருக்கிற ஒரு அகதிமுகாமின் தறப்பாளின் கீழிருந்து எழுதப்படுகிறது. இந்தக் குரலை நீங்கள் புறந்தள்ளமுடியாது. அவர்கள் இறுதிச் சாட்சிகள். என்னையும் சேர்த்து வெறுமனே அந்த அவலத்தின் பார்வையாளர்களாக இருந்தவர்களின் குரல் அல்ல இது. இறுதி வரை வன்னியில் இருந்த மனிதர்களின் வார்த்தைகள். புலி எதிர்ப்பு,புலி ஆதரவு,தமிழ்த்தேசியவாதி,அல்லது அதன் துரோகி.. இந்த மாதிரியான புடுக்கு வார்த்தைப் பிரயோகங்களை விட்டு விட்டு. இந்தக் குரலை மனசாட்சியோடு கேட்கத் தொடங்குவோம்.. அந்த முகாம்களில் இருக்கிற மக்களின் குரலாய் அந்த வாழ்க்கையைப் பற்றி கிஞ்சித்தும் அறியாமல் வெளியில் இருந்து ஒலிக்க நினைக்கிற குரல்களைப் போலல்ல இது. அந்த சுழலுக்குள் சிக்கி இருப்பவர்களின் வார்த்தைகள் நிஜத்தின் வார்த்தைகள். போரின் உண்மைச் சாட்சிகள். வன்னிமக்களின் குரல்கள்.

July 26th, 2009 at 9:51 pm
//தான் சாகத் தயாராக இருந்த ஒரே காரணத்திற்காக பிற உயிர்களை ஒரு பொருட்டாகத்தானும் மதிக்காத ஒரு வீரமரபு இனி வேண்டாம்.
பதிலாக, தன்னுடைய உயிரின் பெறுமதி தெரிந்த காரணத்தினாலேயே பிற உயிர்களையும் தன்னுயிர்போல நேசிக்கும் ஒரு புதிய அரசியல் நாகரீகமே இனித் தமிழர்களுக்கு வேண்டும்
அதாவது புதிய சாம்பல் நிற அரசியல்வெளி ஒன்று வேண்டும்.//
//இனிப் பதுங்கு குழிகளும் வேண்டாம். புதை குழிகளும் வேண்டாம்.
தியாகிகள் பட்டியலும் வேண்டாம். துரோகிகள் பட்டியலும் வேண்டாம்.
வீரத்தை வழிபடப்போய் முடிவில் மரணத்தை மகிமைப்படுத்தி வாழ்வை நிராகரித்தது போதும்.
இனி அறிவை வழிபடுவதிற் தொடங்கி வாழ்வை ஆமோதிக்கும் ஒரு புதிய அரசியல் நாகரீகம் தேவை.//
இந்தக் குரல்/கள் பலமாகட்டும்.
July 26th, 2009 at 9:56 pm
உன் குறிப்பில்சொல்லப்பட்டது நூறுவீதம் சரி நண்பா, நாம் எல்லாம் யார் அதைப்பர்றி பேசுவதற்கு. ஏன் எந்தங்கையே கேட்டாள் உங்களுக்கென்ன தெரியும் நாங்கள் பட்ட கஸ்ட்டம். எங்களால் உணர்ந்துகூடப் பார்க்கமுடியாத வலி அது. அவர்கள் வந்து சேர்ந்த கோலம் மட்டும்தான் என் கண்முன்னாலிருக்கிறது. அவர்களை வைத்துக்கொண்டு அரசியல் பேசும் மனிதன் தான் தமிழன். அவனால் மட்டும்தான் அதுவும் முடியும்
July 26th, 2009 at 10:37 pm
உண்மையின் குரலை கேட்டேன். நன்றி நண்பரே.
July 26th, 2009 at 10:49 pm
உண்மைகள் இதுவரை ஏதோ ஒரு நன்மை வரும் என்ற நம்பிக்கையயில் எல்லாரையும் மெளனமாக வைத்திருந்தது. தவறுகளையெல்லாம் நியாயப்படுத்திப் பழக்கப்பட்டது கூட விடுதலையென்ற ஒரு விருட்சத்தின் நிழலில் அமைதியாக வாழலாம் என்ற நம்பிக்கையுடன்தான். எல்லாம் கனவாகி ஒரு நீண்ட கனவிலிருந்து விழித்து….
அகிலன் நீங்கள் பேச நினைத்தது எவராலோ எழுதப்பட்டுள்ளது. அதை பகிர்ந்தமைக்கு நன்றிகள்.
சாந்தி
July 26th, 2009 at 11:22 pm
அகிலன் நன்றிகள்.
உங்கள் நண்பரை மேலும் எழுதச் சொல்லுங்கள்.
அவர்கள் இடம் இருந்து தெரிந்து கொள்ள எங்களுக்குப் பல விடயங்கள் இருக்கின்றன.
சில விடயங்களை ஊகிக்கவே முடிகிறது, மேலும் எல்லாவற்றையும் பிரபாகரன் தலைமேல் போடுவதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது.பிராபகரனோ புலிகளோ தமிழர்களிடம் இருந்தே உதித்தனர்.
பிரபாகரனைத் தெய்வம் ஆக்கியது ,தூய மரபு என்பவை எல்லாம் தமிழரின் குறிப்பாக தமிழ்ச் சைவ தூய மரபில் இருந்தே வருகின்றன.
மேலும் இந்த கறுப்பு வெள்ளை என்பதும் சாம்பல் என்பதுவும் என்ன சொல்ல வருகின்றது என்பதை என்னால புரிந்து கொள்ள முடியவில்லை. உலகமயமாதல் ,பன்மைத்துவம் என்பவை தூய இன வாதமானா சிங்களப் பேரினவாதத்தை ஏன் பாதிக்கவில்லை? சிங்கள இனவாதம் என்பது ஏன் கறுப்பு,வெள்ளையானது இல்லை?
பல தெளிவற்ற பார்வைகளை நான் இந்த சாம்பல் நிறம் என்பதனூடாகக் காண்கிறேன்.
கட்டுரையில் கூறப்பட்ட மற்றைய பல விடயங்களில் என்னால் ஒத்துப்போக முடியும்.
July 26th, 2009 at 11:38 pm
இன்னொரு பிரபாகரனின் வரவிற்காக காத்திருப்பதாக எழுதிய அற்புதன் தானே இவர்..?
July 27th, 2009 at 12:05 am
வணக்கம் உறவுகளே
இந்த கட்டுரை சரி இனி எழுதப்போகும் எந்த கட்டுரையும் சரி உண்மையில்லை
களத்தில் நின்ற உறவுகள் உங்களுக்கு என்ன சொன்னார்கள் என்பது முக்கியமில்லை அன்று 90வீதம் வென்று இருந்த விடுதலைப்புலிகளை நீங்கள் ஆதரித்தீர்கள் தலைவ்ா புகழ் பாடினீர்கள் இன்று ஒரு பின்னடைவு இந்த பின்னடைவு கூட ஒரு சதுர அடி எங்களிடம் இருந்திருந்தால் இப்ப கூட தலைவரை நம்பி தான் சொல்லுவீர்கள் அண்ணை எல்லாம் செய்வார் அடிப்பார் என்று எல்லாம் அண்ணை என்ன கடவுளா
உன் குடும்பம் சண்டை பிடி்டி விரும்பல என் குடும்பம் சண்டை பிடிக்க விரும்பல இப்ப கூட நீ இந்த தளத்தில் கட்டுரை தான் எழுதுகிறாய் நீ கடைசி நேரத்தில் மண்ணுக்காய் என்ன செய்தாய் அங்கு நின்ற மக்கள் பசி வெய்யில் கொடுமையால் கனரக ஆயுத பாவிப்பால் தப்பினால் காணும் என்று ஓடினார்கள் அது தான் உண்மை
இன்று கூட தலைவர் ஒரு சதுர அடியை வைத்திருந்தால் கூட இந்தளவு சனமும் அவருடன் தான் இருக்கும் உனக்கு அல்லது இதை எழுதுபவனுக்கு விளங்கவில்லையென்றால் கொஞ்சம் ஆவது யோசித்து எழுதுங்கள்
July 27th, 2009 at 12:06 am
மேலே உள்ள கட்டுரை பல கசப்பான உண்மைகளை சொல்லிநின்றாலும்..எத்தனையோபேர் சாம்பலாகிபோனபின்னரும் முல்லைத்தீவு வரை விடபட்டுபோனபின்னரும்.உசுப்பேத்தும் கட்டுரைகள் எழுதிக்கொண்டிருந்தவர்தானே…இந்தநபர்..
அதுவரைக்கும் அவரே எழுதிய ..வசனங்களான ..(பிரபாகரன் இலங்கைத் தீவை மட்டும் பிரிக்க முயலவில்லை. முதலில் அவர் தமிழ் அறிவைத் தமிழ் வீரத்திலிருந்து பிரித்தார். பின்னர் சிங்கள முற்போக்குச் சக்திகளை தமிழர்களிடமிருந்து பிரித்தார். பின்னர் அவர் தமிழர்களை தியாகி; துரோகி; மாற்று இயக்கம் என்று கூறுபோட்டுப் பிரித்தார். பின்னர் முஸ்லிம்களைத் தமிழர்களிடமிருந்து பிரித்தார்.
பின்னர் கிழக்குத் தமிழர்களை வடக்கிலிருந்து பிரித்தார். இவை தவிர ரஜீவ் காந்தியைக் கொல்லுமாறு உத்தரவிட்டதன் மூலம் இந்தியாவைத் தமிழர்களிமிருந்து பிரித்தார். பின்னர் நாலாம் கட்டம் ஈழப்போருக்கான புறநிலமைகளை உருவாக்கியதன் மூலம் மேற்கு நாடுகளை தன்னிடமிருந்து பிரித்தார். பின்னர் நாலாம்கட்ட ஈழப்போரில் தன்னையும் தன்னுடைய அதிகாரங்களையும் பாதுகாப்பதற்காக அவர் முன்னெடுத்த ஆட்பிடி அரசியலும் அதன் தொடர் விளைவுகளும் அவரை அவருடைய ஆட்சிக்குபின்னர் நாலாம்கட்ட ஈழப்போரில் தன்னையும் தன்னுடைய அதிகாரங்களையும் பாதுகாப்பதற்காக அவர் முன்னெடுத்த ஆட்பிடி அரசியலும் அதன் தொடர் விளைவுகளும் அவரை அவருடைய ஆட்சிக்குட்பட்டிருந்த சுமார் மூன்று இலட்சம் மக்களில் பெரும்பாலாலனவர்களிடமிருந்து பிரித்தன.) என்கிற வசனங்களில் கறுப்பு வெள்ளை பக்கங்கள் அவரது கண்ணிற்கு புலப்படவில்லையா?? அதுவரை வானவில்லாய் பலவர்ணத்திலிருந்த பிரபாகரனின் கோட்பாடுகள் இப்பொழுது மட்டும் கறுப்பு வெள்ளையாய் மாறிப்போனதா?? இறுதி யுத்தத்தில் எனக்கு பல விமர்சனங்கள் உண்டு ஆனால் அவையனைத்தும் பிரபாகரனிற்கே என்கிற வாதத்தில் எனக்கு உடன்பாடில்லை..அவற்றிக்கு விளக்கம் எழுததவும் இப்போ விரும்பவில்லை..நன்றி சாத்திரி..
July 27th, 2009 at 12:09 am
//இன்னொரு பிரபாகரனின் வரவிற்காக காத்திருப்பதாக எழுதிய அற்புதன் தானே இவர்..//
எல்லாவற்றையும் கறுப்பு வெள்ளையாகப் பார்ப்பது என்பது,இது தானோ? பிரபாகரனை உங்களைப் போலவே நாங்களும் பல கதைகளினூடாகவே அறிந்து இருக்கிறோம்.பிரபாகரன் என்பவர் பல உயரிய மனிதப்பண்புகளைக் கொண்டிருந்தார் என்பதாகவே நான் அவரைப் பார்க்கிறேன்.மற்றவர்களுக்காக தனது வாழ்வை அர்ப்பணிக்கும் எவரையுமே நான் அவ்வாறே பார்க்கிறேன். பிரபாகரன் தான் நினைத்தை நடாத்திக் காட்டுபவனாக ,சொன்ன சொற்படி நடப்பவனாக,உண்மையானவனாக இருந்திருக்கிறான்.இவை எல்லாம் எனது அகராதியில் உயரிய குணங்களே. மக்களுக்கான விடுதலைப் போராட்டமாகவே தமீழீழ விடுதலைப் போராட்டம் இருக்க வேண்டும் என்று நம்பினோம்.இவற்றை மறுக்கும் கதைகளும் இருக்கின்றன அவற்றையும் கேட்க வேண்டும், இவ்வாறான பல கதைகளையும் கேட்டு எது சரி எது பிழை என்பதை முடிவு செய்வோம்.ஒற்றை உரையாடல்களினூடகவோ அற்புதன் இப்படி எழுதினார் என்று அனாமதேயாகச் சொல்வதாலோ நீங்கள் எதனையும் சாதிக்கப் போவதில்லை.
அற்புதன் என்றுமே சுயமாகச் சிந்தித்து முடிவு எடுப்பவர்.பல கதைகளையும் கேட்கத் தயாராக இருப்பவர்.எல்லாமும் முடிந்த முடிபு என்று நம்புபவர் இல்லை.இப்போது நம்புவதை நாளை இல்லை என்று என்னால் மறுதலிக்க முடியும், அவறிற்க்கான சரியாண காராணங்களோடு.இதனை உங்களால் புரிந்து கொள்ள முடியாது என்றால் என்னால் ஒன்றும் செய்ய முடியாது.
நீங்கள் இதை அனாம தேயமாகச் சொல்ல வேண்டிய அவசியம் தான் என்ன?
July 27th, 2009 at 12:11 am
இன்னொரு பிரபாகரனின் வரவிற்காக காத்திருப்பதாக எழுதிய அதே அற்புதன் தான் .
ஒரு பிரபாகரன் வந்தே இவ்வளவு பேரழிவு .இன்னொரு பிரபாகரன் வேறு வர வேண்டுமா!!?
July 27th, 2009 at 12:14 am
அகிலன்,
பிரபாகரனின் மறைவிற்கு பிறகு நிகழும் விவாதங்களில் நான் வாசித்த மிகச் சிறந்த கட்டுரை. இனி நடக்கும் விவாதங்களுக்கும் இது தொடக்கப் புள்ளியாக அமையவேண்டுமென விழைகிறேன். இதை எழுதியவருக்கும், வெளிக்கொணர்ந்த உங்களுக்கும் மிக, மிக நன்றி.
July 27th, 2009 at 6:27 am
இப்போது நம்புவதை நாளை இல்லை என்று என்னால் மறுதலிக்க முடியும், அவறிற்க்கான சரியாண காராணங்களோடு.இதனை உங்களால் புரிந்து கொள்ள முடியாது என்றால் என்னால் ஒன்றும் செய்ய முடியாது.//
நல்லது அற்புதன். மே 28 இல் நான் பிச்சை வேண்டாம் நாயைப்பிடி என எழுதியபோது நீங்கள் “நேற்றுவரை புலிகளை ஆதரித்தவர்கள் இன்று திடீரென பிச்சை வேண்டாம் நாயைப்பிடி என எழுதுகிறார்கள்” என்ற கருத்துப்பட ஒரு கட்டுரை எழுதியிருந்தீர்கள். (இப்போது அதனைக் காணவில்லை. நான்தான் சரியாகத் தேடவில்லையோ நீங்கள் அழித்து விட்டீர்களோ தெரியாது. )
இதனை எழுதியபோது கூட.. இப்போது நம்புவதை நாளை இல்லை என்று என்னால் மறுதலிக்க முடியும், அவறிற்க்கான சரியாண காராணங்களோடு என்ற உங்களது கருத்தை என்னிலும் பொருத்திப்பார்த்திருக்க முடியும்.. சரி போகட்டும்..
உங்களுடைய அக்கட்டுரைக்கு நான் பதில் அளிக்க விரும்பவில்லை. ஏனெனில் என்னை வந்தடைந்த கதைகள் உங்களை வந்தடையவில்லை என்று நம்பினேன். அது உங்களையும் வந்தடையும் என தெரியும்.
எனது ஆதங்கம்.. இத்தனை ஆழமாக கறுப்பு வெள்ளை சாம்பல் நிறங்களோடு விளையாடவில்லை. அது மிக மேலோட்டமானது. அது புலிகள் தம் சொந்த மக்களுக்கு எதிராக தம் ஆயுதங்களைத் திருப்பினார்கள் என்பதை ஜீரணிக்க முடியாதது. முன்பும் திருப்பப்பட்டதுதான். அப்போது அவர்கள் துரோகிகளென்றும் அதற்குரிய காரணங்களும் சொல்லப்பட்டு.. அதை நாம் ஏற்றும் கொண்டோம்தான். இம்முறையும் துரோகிகளுக்கெதிராகவே ஆயுதம் திருப்பப்பட்டது என்று சொல்லலாம்தான். காரணமாக எதனைச் சொல்வது..? அவர்கள் புலிகளில் இணையாது விட்டதையா.. அல்லது புலிகளை விட்டு போக எத்தனித்ததையா.. (தாங்களும் துரோகிகளாக வேண்டி வந்து விடும் என்பதாலேயே.. இதுவரை நாளும் துரோகி பட்டங்களை வழங்கிவந்த புலிகள் அல்லாத பலரும் இது விடயத்தில் தம்மை அடக்கியிருக்கிறார்கள்)
–
எனது அப்பதிவிற்கு கொண்டோடியும் கருத்து தெரிவித்திருந்தார். அதாவது அத்தகைய வாக்குமூலங்கள் ஈழத்தமிழ் அரசியலுக்கு எதிராக இயங்குபவர்களுக்கு வாய்ப்பாகி விடுமென்பதால் எனதும் தமிழ்சசியினதும் பதிவுகள் ஆபத்து நிறைந்தவை என்றார் அவர். அவருக்கு அப்போது பதிலிட்டிருந்தேன். வன்னியில் இருந்து வந்தவர்கள் பேசத்தொடங்கினால்.. எனதும் தமிழ்சசியினதும் எழுத்துக்கள் காற்தூசியாகிவிடும் என குறிப்பிட்டிருந்தேன். அதை உணரமுடிகிறதல்லவா..
உண்மையை நேர்மையாகச் சொன்னால்.. புலிகள் மக்களை அடித்தார்கள் / சுட்டார்கள் என்பதை ரகசியங்களாக கேட்டு.. அவற்றை நழுவல் மொழியில் நெகிழ்வாக நான் எழுதியிருந்தபோதும் பேசியிருந்தபோதும்.. இப்படி பட்டவர்த்தனமாகவும் நேரடியாகவும்.. நீ.. சுட்டாய்.. நீ அடித்தாய் என சுட்டுகின்ற எழுத்தைப்படிக்கிற போது.. எனக்குள் இருக்கிற புலி ஆதரவாளன் சினமுறுகிறான். ஆனால்.. பதிலேதும் இல்லை என்பதால்.. இவர் மட்டும் என்ன பெரிய திறமோ என்ற வார்த்தைகள்தான் பதிலாக வருகிறது
July 27th, 2009 at 6:28 am
கட்டுரையாளர் யார் என அகிலனோ அல்லது இக்கட்டுரை வெளிவந்திருக்கிற வேறு இணையங்களிலோ குறிப்பிடப்படவில்லை. ஆனால் அதுயாரென தெரிகிறதுதான். விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டினில் இருந்தபோது அவரால் மிகப்பட்டவர்த்தனமாக நேரடியாக சிறிலங்கா அரசை தெளிவாக விமர்சிக்க முடிந்தது. அதே நேரம்.. புலிகள் முஸ்லீம்களைப் பிரித்தார்கள் என்றோ இந்தியாவிடமிருந்து தமிழர்களைப் பிரித்தார்கள் என்றோ அவரால் எழுத முடியாதிருந்தது. ஏனெனில் அவர் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்தார்.
அதே போல இப்போது சிறிலங்கா கட்டுப்பாட்டினில் இருப்பதால்.. புலிகளை தெளிவாக நேரடியாக விமர்சிக்க முடியும். ஆனால் சிறிலங்கா ராணுவ / அரசியலை அவரால் விமர்சிக்க முடியாதிருக்கும்.
ஏனெனில் அவருக்குத் தெரியும். மகிந்தவிடமும் 2 பெட்டிகள் தான் உள்ளன. அவை கறுப்பு வெள்ளை பெட்டிகள். மகிந்தவிடமும் 2 பட்டியல்கள்தான் உள்ளன. அது தேசத்துரோகிகள் / தேசப்பற்றுள்ளோர்கள் பட்டியல்.
எனது அரசியல் சந்தேகம் இதுதான்.
ஆம்.. சாம்பல் நிறப்பெட்டி அலாதியானதுதான்.. கேட்பதற்கு நன்றாகவும் இருக்கிறது. ஒருவித ஜென்டில்மென் தன்மையோடும் இருக்கிறது. ஆனால்.. தமிழர்களின் சாம்பல் நிறப்பெட்டி சிறிலங்காவின் கறுப்பு வெள்ளைப்பெட்டிகளோடு எப்படி அல்லாடப்போகின்றது..? எப்படி ஊடாடப்போகின்றது.. ? எப்படி எதிர்கொள்ளப்போகின்றது… ? என்பதே..
July 27th, 2009 at 7:21 am
இவர்களை எல்லாம் பக்கத்தில் வைத்துத் தலைவர் போராடியதால் வந்த விளைவு தான் இதுவாக இருக்கலாம். அவர் தமிழீழம் என்ற இலட்சியத்துக்காக எல்லோரும் பின்னால் அணி திரளுவார்கள் என்று எதிர்பார்த்தார்.. ஆனால்பொன்முடிச்சுக்காகப் புகழ்பாடும் புலவர்கள் போன்ற நிலையில் தான் கட்டுரையாளரும் பிழைப்புச் செய்திருக்கின்றார்.
பல சந்தர்ப்பங்களில் தலைவரைப் புகழோ புகழ் என்று புகழ்ந்து தள்ளியவர், இன்று எடுத்திருக்கின்ற முடிவை அன்று ஏன் எடுக்கவில்லை.. எதிர்க்க வேண்டாம்… மெளனமாக இருந்திருக்கலாமல்லவா….
தேசியத்தலைவர் இல்லாத தமிழ் அரசியல் பாதை எப்படிப் போகப் போகின்றது என்பதைக் கட்டுரையாளரும் பார்க்கத் தானே போகின்றார். அல்லது பொற்கிழிக்காகப் புகழ்பாடிக் கொண்டிருப்பாரோ??
July 27th, 2009 at 8:01 am
எட தம்பி முரளி..
//களத்தில் நின்ற உறவுகள் உங்களுக்கு என்ன சொன்னார்கள் என்பது முக்கியமில்லை //
ஓமடா புலத்தில இருக்கிற உங்கட விருப்பங்களும் அந்தச்சனங்களுக்கு இதுதான் தேவை எண்டு நீங்களே சொல்றதுதான் முக்கியம்..
ஒரு சதுர அடி தலைவர் இருக்கவே பத்தாதப்பு…பிரபாகரனே வந்து அந்தசனம் கடைசிநேரம் என்னை வெறுக்கிற அளவுக்கு நான் நடந்து கொண்டன் எண்டு சொன்னாலும் எங்க நீங்கள் நம்ப போறியள்..
பிணங்களுக்கு உயிரூட்டி ஒருமம்மி அரசியலை நடத்துங்கோ.. இல்லாட்டி கிளாடியெட்டரகளை மோதவிட்டு ரசிக்கிற ரோமாபுரி அரசர்கள் போல வன்னிச்சனத்தை யுத்தம் நடத்தச்சொல்லி
கொரில்லா யுத்தம் நடத்தச்சொல்லி ரசியுங்கோ…
புலிகளை எப்ப உள்ளுக்கவிட்டு அடிப்பார்கள் எண்டு நினைச்சியளோ அப்படியே இவர்களையும் உள்ளுக்க இருந்து அடிப்பார்கள் எண்டு நினையுங்கோ.. பாவம் அதுகள் ஒண்டுக்கிருக்கவே வரிசையில நிக்குதுகள்.. உங்களுக்கு உண்மை எப்படியிருந்தாலும் பறவாயில்லை பத்தி எரியோணும்..ம்..
July 27th, 2009 at 8:29 am
கவித்துவ அறம் ததும்பும் கட்டுரை. கட்டுரையாளர் யார் என்று அறிய இயலாதா?
July 27th, 2009 at 10:12 am
இது ஒரு சிறந்தக் கட்டுரை. இங்கு ஏற்கெனவே ஒருவர் சொல்லியிருப்பதுபோல மே 19-க்குப் பிறகு நான் படித்த தன்னளவில் ஒரு முழுமையான அரசியல் பார்வை கொண்டிருக்கிற எழுத்து. புறந்தள்ள முடியாத இந்த வன்னி சனங்களின் குரல்கள் உடைத்து சிதறடிக்கிற புனிதங்களின் வீச்சத்தை தாங்க நம் நாசிகளை தயார் படுத்திக்கொள்ள வேண்டும்.
July 27th, 2009 at 11:51 am
//கவித்துவ அறம் ததும்பும் கட்டுரை. கட்டுரையாளர் யார் என்று அறிய இயலாதா?//
ஆனால் துப்பாக்கிகள் எல்லாஇடங்களிலும் ஒரே வேலையைத்தான் செய்கின்றன..அதுதான் பிரச்சினை
July 27th, 2009 at 11:57 am
தோற்றுப் போனவர்கள் வாய்பொத்தியிருக்க வேண்டிய காலமிது என்பது தெரிகிறது.
சயந்தன்,
எனது பெயரைச் சுட்டி இங்கு நீர் பின்னூட்டியிருப்பதால் ஒருவியத்தைச் சொல்ல வேண்டும்.
உமது இடுகையில் நான் தெளிவாகவே சொல்லியிருந்தேன், அங்குள்ள மக்களைப் பேசவிடுங்கள் என்று. தேர்ந்தெடுக்கப்பட்ட சிலகுரல்கள் மட்டும் பேசுவதுதான் இப்போதைக்கு எனக்குச் சிக்கலே. சயந்தன், நம்புகிறீரோ இல்லையோ, நாங்களும் மக்களோடு பேசிக்கொண்டுதான் இருக்கிறோம்.
புலிக்கட்டுப்பாட்டிலிருந்து புலிகளுக்குத்தான் பாடமுடியும். சரி.
ஆனால் கட்டுரைக்கு ஏழாயிரம் பெற்றுக்கொண்டு தென்னிலங்கைப் பத்திரிகையில் முன்பு எழுதிய ‘கவித்துவ -அறநெறி’க் கட்டுரைகளை மீள வாசிக்க வேண்டும் போலுள்ளது. புலிக்கு எதிராகத்தான் எழுதியிருக்க முடியாது. ஆனால் எழுதியவைகள் கட்டாயத்தின் பேரில் எழுதப்பட்டவை என்று நீங்கள் யாரும் சொல்ல மாட்டீர்கள் தானே? தலையில் துப்பாக்கிவைத்துத்தான் அவை எழுதச் சொல்லப்பட்டன என்று சொல்வீர்களா?
என்மேல் பாயப் போவதற்கு முன் ஒரு குறிப்பு:
பிரபாகரனின் கடைசிக் காலத்தை விமர்சிப்பது தொடர்பில் எனக்கு எந்த விசனமுமில்லை. ஆனால் பிரபாகரனின் காலமே ஈழத்தமிழரின் போராட்டத்தில் ஒரு சாபக்கேடு என்று தொனிக்கும் பொருள் எனக்குக் குழப்பம்தான்.
அங்கே பிரபாகரன் காலம் முடிந்துவிட்டது. புலத்துப் புலியும், புலி அடிவருடிகளும் (அல்லது எழுத்தாளர் சொல்லும் கறுப்பு வெள்ளைப் பெட்டிக் காரர்) இப்போதைக்கு காத்திரமாக எதையும் செய்யப்போவதில்லை களத்தில். இது சாம்பல் பெட்டிக் காரருக்கான காலம்.
இலங்கைக்கு வெளியே, மற்ற நாடுகளில் இருக்கும் சாம்பல் தன்மையைக் குறித்தும் உரையாட வேண்டும். அப்படியொன்று இருக்கிறதா என்பதே எனக்குச் சந்தேகம்தான். நாங்கள் மட்டும் சாம்பலாய் (நிறத்தைச் சொல்கிறேன்) இருப்போம் என்று எங்களுக்குள் மட்டும் கதைத்துக் கொண்டிருப்து சரியா?
July 27th, 2009 at 2:02 pm
பிரபாகரனுக்குப் பின்னரான தமிழ் அரசியல் கட்டுரை படித்தேன். ஒரு சாட்சியப் பதிவு என்றளவில் சரி. அதற்கு மேல் விரிவாக விவாதத்திற்கு அது தானாகவே தடை ஏற்படுத்தி விடுகிறது கறுப்பு வெள்ளை பெட்டிகளும் சாம்பல் நிறப் பெட்டியும் கதையும் பிரபாகரனை மையப்படுத்தியே கட்டமைக்கப்பட்டிருக்கிறது.
மரபுகளைக் கேள்விக்குள்ளாக்கிய பாரதி சாம்பல் நிறப் ப+னைக்குட்டி பற்றி பாரதி எப்போதோ பாடி விட்டான். தவறு நம்மில் நமது மரபில் தானிருக்கிறது. தமிழ் மரபு அல்லது தமிழ் பண்பாடு எல்லாவற்றையும் கறுப்பு வெள்ளையாகத் தான் பார்த்து வருகிறது. இரண்டு எதிர்நிலைகளுக்கிடையே வரலாற்றையும் வாழ்க்கையையும் கட்டமைக்க முயல்கிறது.
அந்தத் தமிழ் மரபின் பண்பாட்டின் பிரதிநிதி தான் பிரபாகரன். பிரபாகரனுடன் இணைந்து தோற்றம் பெற் ற சிறிசபாரட்ணமும் உமாமகேஸ்வரனும். பத்மநாபாவும் பாலகுமாரும் கூட அந்த மரபிலிருந்து முறித்துக் கொண்டதான அரசியலை முன்வைக்கவில்லை. அதன்காரணமாக பிரபாகரனின் செயற்றிறனுக்கு முன்னால் தாக்குப் பிடிக்க முடியாமல் போயினர்.
பானையில் உள்ளது அகப்பையில் வருவது போல தமிழ் சமூகத்தின் பிரதிநிதியாக அவர் உருவானார். அவருடையதோ புலிகளுடையதோ அல்லது இந்த தமிழ் மரபின் பண்பாட்டின் தவறான பார்வை குறித்தோ கேள்விகள் எழுப்பப்படவில்லை. நாம் எல்லோரும் புலிகள் உருவாக்கி வந்த ‘வெற்றிக்’கட்டமைவின் பங்குதாரராக ஏதோ ஒரு வகையில் இருந்தோம்.
பிரபாகரனை அல்லது புலிகளை எதிர்த்தவர்கள் கூட இந்த கறுப்பு வெள்ளை அரசியலிலிருந்து வெளியே நின்று எதிர்க்கவில்லை. நிராகரிக்கவில்லை.
1990இலிருந்து கொழும்பிலிருந்து வெளிவந்த சரிநிகர் என்கிற பத்திரிகை கறுப்பு வெள்ளை அரசியல் மற்றும் தமிழ் பாரம்பரியம் தமிழ் பண்பாடு குறித்து பல கேள்விகளை எழுப்பியது. ஆனால் அதேநேரம் தமிழ் மக்களுடைய மற்றும் இலங்கையின் சிறுபான்மை மக்களுடைய அரசியல் அங்கீகாரத்தை அது கோரியது.
அன்று அதனை புலிகள் மட்டும் நிராகரிக்கவில்லை. தமிழ் சமூகத்தின் பெரும்பகுதி அதனை நிராகரித்தது. புலிகளின் பகுதியிலிருந்த புத்திஜீவிகள் படைப்பாளிகள் கூட சரிநிகர் தமிழ் தேசியத்திற்கு எதிரானது என்றும் அது தடை செய்யப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்கள்.
அது முன்வைத்த பன்முகத் தன்மையை கணக்கில் எடுத்திருந்தால் சில வேளைகளில் இந்தப் பிரச்சினைகைளப் புரிந்து கொள்ளவும் செயற்படவும் வலிவாக இருந்திருக்குமோ என்று இன்று எண்ணத் தோன்றுகிறது.
அற்புதன் குறிப்பிட்ட தமிழ் தூய சைவ மரபு பற்றியும் அது கேள்விகளை எழுப்பியிருந்தது இப்போது ஞாபகமாயிருக்கிறது.
என்னளவில் மறுதலையாகத் தான் யோசிக்கத் தோன்றுகிறது. தமிழ் மக்களுக்கு ஏதாவது வெற்றிகள் முன்னேற்றங்கள் கிடைத்திருப்பின் அது பிரபாகரனால் தான் ஆகியிருக்கும். தோல்விகளுக்கும் பின்னடைவுக்கும் தமிழ் சமூகமே முழுப்பொறுப்பு.
இது பிரபாகரனைப் புனிதராக்கும் வேலை அல்ல. தமிழ் சமூகத்தின் சமூகப் பொறுப்பு குறித்து கேள்வியெழுப்பும் வேளை.
அது ஒன்று மட்டுமே ஒரு புதிய அரசியல் நாகரீகத்தை உருவாக்கும்.
July 27th, 2009 at 3:23 pm
இதெல்லாம் ஒரு ஆய்வு கட்டுரை, இதுகள மீள்பதிவு செயிறதுல தங்களை முற்போக்கு சிந்தனையாளர் பட்டியல்ல சேர்த்திடுவார்கள் எண்ட நினைப்பு வேற. அவர் புலி போகும் மட்டும் காத்திருந்து கட்டுரை எழுதுவார், இவர் அதுகளை மீள்பதிவு செய்து பொழுதை கழிப்பார்.
அது சரி உங்கட மீள்பதிவுக்கும் பார்த்துப் போட்டுக்குடுக்க ஆக்கள் இருக்கேக்க யோசிக்க என்ன கிடக்கு பிரதர். “நாய் பிடித்து பெறப்பட்ட காசு குரைக்கவா போகுது” . நீங்க நடத்துங்க தல .
July 27th, 2009 at 3:54 pm
முதலில் மக்களை இப்போதிருக்கும் அவல நிலையிலிருந்து விடுவித்தால் தான் அடுத்த கட்டமாக அச்ச நிலையிலிருந்து மீ்ட்க முடியும். ஆனால் இன்றைய காலத்தில் அங்கு நடைமுறையில் இருக்கின்ற இராணுவக் கெடுபிடிகளும், சித்ரவதைகளும் இக்கட்டுரை எழுதியிருக்கும் ஆரம்பப்புள்ளியைக்கூடத் தொடமுடியாத நிலையையே தோற்றுவித்துக் கொண்டிருக்கிறது. இராணுவ மயமாக்கப்பட்ட முகாம்களுக்குள்ளும், பிரதேசங்களுக்குள்ளும் வாழும் மக்களை அச்சநிலையில் இருந்து மீட்க முடியுமா? அது சாத்தியமானதா? ஆழமான கட்டுரையாக இருக்கிறது. நடைமுறையில் தெரியும் சிக்கல்களுக்கு வழிகாட்டாமல் இக்கட்டுரை சொல்லும் சேதி “இக்கரை மாட்டுக்கு அக்கரை பச்சை” என்பதுபோல் இருக்கிறது. ஏனென்றால் இக்கரை மாட்டை அக்கரைக்கு கொண்டு செல்லவே முடியாமல் ஒரு கொடிய சதுப்பு நிலப்பகுதியால் சூழப்பட்ட நிலையில் இன்றைய காலமும், மக்களின் வாழ்நிலையும் உள்ளன.
July 27th, 2009 at 3:57 pm
//ஒரு பிரபாகரன் வந்தே இவ்வளவு பேரழிவு .இன்னொரு பிரபாகரன் வேறு வர வேண்டுமா!!?//
அழிவு பிரபாகரனால் ஏற்பட்டது என்று சொல்லும் நீங்கள் யார் என்பது தெரிகிறது.அது உங்களின் முடிவு எனது அல்ல.அழிவை யார் செய்தார்கள் என்பது பற்றி எனக்கு ஒரு முடிவு இருக்கிறது.
//நல்லது அற்புதன். மே 28 இல் நான் பிச்சை வேண்டாம் நாயைப்பிடி என எழுதியபோது நீங்கள் “நேற்றுவரை புலிகளை ஆதரித்தவர்கள் இன்று திடீரென பிச்சை வேண்டாம் நாயைப்பிடி என எழுதுகிறார்கள்” என்ற கருத்துப்பட ஒரு கட்டுரை எழுதியிருந்தீர்கள். (இப்போது அதனைக் காணவில்லை. நான்தான் சரியாகத் தேடவில்லையோ நீங்கள் அழித்து விட்டீர்களோ தெரியாது. )//
சயந்த்தன் நான் எதனையும் அழிக்கவில்லை.உங்கள் பிச்சை வேண்டாம் நாயைப்பிடி என்பது நிதானமற்ற ஒரு பார்வையாக எனக்குப்பட்டது இப்போதும் படுகிறது.சில விடயங்களை உங்களுக்குத் தெளிவு படுத்த விரும்புகிறேன்.
முதலில் போராடுவதா இல்லையா என்பதை போராடுபவர்களே தீர்மானிகிறார்கள்.வெறும் பார்வையாளர்களான நீங்களோ நானோ அல்லது தமிழ் சசிக்கோ இன்னொருவனைப் போராடதே என்று சொல்ல எந்த தார்மீக உரிமையும் கிடையாது.உங்களனிதும் சசியினதும் கட்டுரைகள் அவ்வாறே அமைந்திருந்த்தன என எனது நினைவில் இருந்து சொல்கிறேன்.இது தவறாக இருந்தால் மன்னித்துக் கொள்ளுங்கள்.
//அது புலிகள் தம் சொந்த மக்களுக்கு எதிராக தம் ஆயுதங்களைத் திருப்பினார்கள் என்பதை ஜீரணிக்க முடியாதது. முன்பும் திருப்பப்பட்டதுதான். அப்போது அவர்கள் துரோகிகளென்றும் அதற்குரிய காரணங்களும் சொல்லப்பட்டு.. அதை நாம் ஏற்றும் கொண்டோம்தான். இம்முறையும் துரோகிகளுக்கெதிராகவே ஆயுதம் திருப்பப்பட்டது என்று சொல்லலாம்தான். காரணமாக எதனைச் சொல்வது..? அவர்கள் புலிகளில் இணையாது விட்டதையா.. அல்லது புலிகளை விட்டு போக எத்தனித்ததையா.. (தாங்களும் துரோகிகளாக வேண்டி வந்து விடும் என்பதாலேயே.. இதுவரை நாளும் துரோகி பட்டங்களை வழங்கிவந்த புலிகள் அல்லாத பலரும் இது விடயத்தில் தம்மை அடக்கியிருக்கிறார்கள்)//
உலகில் எந்த மனிதனுக்குமே மரண தண்டனை வேண்டாம் என்று நான் என்னைப் புனித பிம்பமாக காட்டிக் கொண்டு வெகு பாதுகாப்பான சூழலில் இருந்து எழுதலாம்.ஆனால் அந்த அறம் மிகப் பொய்மையானது.ஏனெனில் உலகு அப்படி இயங்குவதில்லை.மரண தண்டனைகள் மனிதர்களால் பல்வேறு காரங்ணகளுக்காக வழங்கப் படுகின்றன.அது போர் இல்லாத ‘ஜன நாயகச்’ சூழலில் நீதிமன்றம், விசாரணை என்பதினூடாக வழங்க்கப்படுகின்றன.இதில் பயங்கரவாதி என முத்திரை குத்தப்படுபவருக்கு விசேடமான ஒரு ‘நீதி’யும் வழங்கப்படுகிறது.இவற்றை எல்லாம் ஏற்றுக் கொள்ளும் பொதுப் புத்தி, தமீழத் தேசியத்திற்கு எதிரான மரண தண்டைனைகளை மட்டும் ஏன் ஏற்றுக் கொள்வதில்லை? அமெரிக்காவுக்கு எதிராக இயங்கினால் மட்டும் மரணதண்டைகள் நீயாயமானைவையா? தமீழீழத் தேசத்திற்கு எதிராக இயங்கினால் அவை நீயாயமற்றவையா?
மேலும் இணையத்தில் பாவிக்கப்படும் துரோகிப்பட்டம் என்பது புலி வால்,புலி பினாமி , புலி மாபியா என்னும் பட்டப் பெயர்களை ஒத்ததே,எதிர்க் கருதாளர்களை நான் என்றும் அவ்வாறு விழித்தது கிடையாது.அவர்களின் கருத்துக்களுக்கு மறுப்புக்களை காரண காரியங்களுடன் எழுதி உள்ளேன்.
மேலும் புலிகள் சொந்த மக்கள் மேல் ஆயுதங்களைப் பிரயோகித்தார்கள் என்று சொல்லப்படும் நிகழ்வு எங்கு எப்போது நிகழ்ந்தது.அது 16 ஆம் திகதிக்குப் பின்னரா அல்லது முன்னரா நிகழ்ந்தது.16 ஆம் திகதிக்கும் பின் அவர் அவர் தங்களுக்கு உகந்தமுடிவுகளை எடுக்குமாறு அறிவுறுத்தப்பட்டதாக திரு நாவுக்கரசு அவர்கள் கூறி உள்ளார்.மேலும் பலர் தொடர்புகள் அற்று இருந்தனர் என்பதும் உண்மை.என்ன உண்மையில் நடந்தது என்பது இனி வரும் காலங்களில் மக்கள் வதை முகாம் களில் இருந்து வெளியேறிய பின்னரே அறியப்படலாம்.தற்போது வெளியால் தெரிவன , படைத் துறையால் கட்டுப்படுத்தப்படும் தகவல்களே.
பலரின் கதைகளில் இருந்தே நான் உணமைகளை அறிய விரும்புகிறேன்.ஆகவே தற்போது வெளியிடப்படும் ஒரு சிலரின் கதைகளில் இருந்து மட்டும் எந்த அவசரமான முடிவுக்கும் வர நான் தயாரில்லை.அவர்கள் தாம் இருக்கும் சூழலில் இருந்து தம்மை பாதுகாத்துக் கொள்ளக் கூட இவ்வாறன கதைகளைக் கூறக்கூடும்.இது புரிந்து கொள்ளக் கூடிய ஒரு உளவியல் நிலையே.
எல்லாவற்றையும் பிரபாகரனின் தலையிலும்,புலிகளின் தலையிலும் போட்டு விட்டுத் தப்பிக்க நினைப்பது கடைந்தெடுத்த போக்கிலித் தனம்.
July 27th, 2009 at 3:58 pm
ஐயா வணக்கம்
முப்பது ஆண்டுகளாக சூரியதேவன் புகழ்பாடி விட்டு இப்போது ஆறுமாத காலமாய் எல்லாத்துக்கும் அவரே காரணம் என்று சொல்கிறாரே இவரை என்னவென்பது? அதனை எழுத்து சிகாமணியென பிரசுரிக்கும் அகிலனை என்னவென்பது?
பெத்த பிள்ளையோடு பெண்கள் கட்டாயமாகவோ வேறுவழியில்லாமலோ ஆயுதம் துாக்கிநின்றபோது தப்பியோட வெளிக்கிட்டால் என்ன செய்வார்கள்?
அதுவும் 10 வருசமாக புலிகளின் ஊாதியத்தில் எழுத்தாளராக இருந்துவிட்டு தப்பியோட முற்பட்டால அங்கு நின்ற ஒருவனுக்காகவாவது இவரை தண்டிக்க வேண்டும் என நினைக்கமாட்டானா?
அடியுங்கோ குத்துங்கோ வெடியுங்கோ என கட்டுரை எழுதிவிட்டு பேப்பர் புலியாக இருக்க நினைத்தால் அவர் சந்தித்த சோதனைகள் தவிர்க்கமுடியாதவையே.
இன்னும் வேண்டுமானால் சொல்லலலாம். தேவையேற்படுமிடத்து மேலதிக விடயங்கள் வெளிப்படுத்தப்படும்.
நன்றி
July 27th, 2009 at 4:51 pm
அகிலன் இது நானும் பேச விரும்பிய விசயம் ஆனால் எப்படி பேசுவது என்று தெரியாமல் இருந்தேன்…
எனக்கிந்த சாம்பல்நிற பெட்டிகளின் மீது பிடிப்பு இருக்கிறது,அது எனக்கு யாழ்ப்பாணத்திலிருந்தே இருந்திருக்கிறது என்றுதான் சொல்லுவேன்.
இதில் இன்னொரு விசயம் சிங்கள இளஞ்சமுதாயமும் இதனை புரிந்து கொள்ள வேண்டும் என்பது.ஏனெனில் அவர்களும் இதுகாலம் வரையிலும் கறுப்பு வெள்ளை அரசியலில்தான் மூழ்கி இருக்கிறார்கள்.
July 27th, 2009 at 4:57 pm
பார்க்கலாம் இலங்கையின் சனங்கள் ஒரு சாம்பல் நிற அரசியலை எப்படி உருவாக்குகிறார்கள் என்பதை, இளைய சமுதாயம் எந்த அளவுக்கு பரிந்துணர்வோடு இருக்கிறதென்பதை.
July 27th, 2009 at 5:02 pm
http://aatputhan.blogspot.com/2009_06_01_archive.html
நன்றி அற்புதன். நான் மே மாதம் எழுதியிருப்பதனால் நீங்கள் மே அல்லது யூன் அல்லது யூலை அந்த பதிவை எழுதியிருக்கலாம். ஆனால் இங்கு என்னால் கண்டுபிடிக்கமுடியவில்லை. மீள ஒருதடவை வாசிக்க.. அந்த இணைப்பைத் தரமுடியுமா..?
ஆனால் பதிலாக மரமண்டைகள் என்ற கவிதைதான் உள்ளது. நல்லகவிதை. அதன் ஒரிடத்தில் இவ்வாறு எழுதியிருக்கிறர்கள்.
–இந்திய அரசு அரிசிப் பிச்சை போட்ட பொழுதுகளில்
நாம் கேட்பது சுதந்திரம் பிச்சை அல்ல என்று வீராப்புப் பேசியோர்
பிச்சை வேண்டாம் நாயைப் பிடியாம் –
–
இங்கேதான் நான் உங்களது பிரகடனத்தின்மீது கேட்கிறேன். இன்று நீங்கள் சரியெனச்சொல்வதை நாளை காரண காரியங்களோடு உங்களால் மறுக்க முடியுமானால்..
20 வருசத்துக்கு முதல் ஒருவருக்கிருந்த கருத்து அவருக்குரிய காரணகாரியங்களோடு மாற்றமடையலாம் அல்லவா..
—-
//முதலில் போராடுவதா இல்லையா என்பதை போராடுபவர்களே தீர்மானிகிறார்கள்.வெறும் பார்வையாளர்களான நீங்களோ நானோ அல்லது தமிழ் சசிக்கோ இன்னொருவனைப் போராடதே என்று சொல்ல எந்த தார்மீக உரிமையும் கிடையாது.உங்களனிதும் சசியினதும் கட்டுரைகள் அவ்வாறே அமைந்திருந்த்தன என எனது நினைவில் இருந்து சொல்கிறேன்.இது தவறாக இருந்தால் மன்னித்துக் கொள்ளுங்கள்.//
உங்களை நான் மன்னித்துக் கொள்கிறேன். ஏனெனில்.. மக்களை போராட வேண்டாம் என நான் எழுதியதில்லை. ஆனால் அவர்களே தீர்மானித்துக்கொள்ளட்டும் எனவும்.. நாங்கள் முடிவுகளை வெளியிலிருந்து திணிக்கத் தேவையில்லையெனவும் தான் எழுதியிருந்தேன்.
//மேலும் புலிகள் சொந்த மக்கள் மேல் ஆயுதங்களைப் பிரயோகித்தார்கள் என்று சொல்லப்படும் நிகழ்வு எங்கு எப்போது நிகழ்ந்தது//
புலம்பெயர்ந்த நாடுகளில் பெருமளவான மக்களின் உறவுகள் முகாம்களில் சிக்கியிருக்கிறார்கள். அவர்களில் பலர் தமது உறவுகளோடு ஏதோ வழிகளில் பேசுகிறார்கள். தொலைபேசியூடாகவும் பேசக்கிடைக்கிறது என்றால் நீங்கள் நம்புகிறீர்களோ தெரியாது. நான் பேசுகிறேன். நண்பர் கொண்டோடி கூட பேசுகிறார்.
உங்களுக்கு உறவுகள் முகாம்களில் இல்லாமல் இருக்கலாம். அது ஆறுதலான ஒரு விடயம்தான். இருப்பினும் நண்பர்கள் எவரேனும் இருக்கலாம். ஆகவே எப்போதாவது உங்களுக்கு நேரம் கிடைத்து அவர்களோடு பேசக்கிடைக்குமென்பதால்.. இதற்கு நான் பதில் சொல்லத் தேவையில்லை.
அதே நேரம் அவர்கள் சொன்னாலும் – தம்மைப்பாதுகாக்க அவர்கள் அவ்வாறு சொல்கிறார்கள் என நம்ப உங்களுக்கும் உரிமை உண்டுதானே..
நன்றி வணக்கம்.
July 27th, 2009 at 5:22 pm
ஆகக்குறைந்துஅல்லது ஆகக்கூடி தமிழ்ச்செல்வனோடை, நீங்கள் ஒப்புக்கொண்டிருக்கோணும் எல்லாம் போனபிறகும் இன்னும் தெளியல்லையே உங்களுக்கு. புலம்பெயர் விசிலடிச்சான் குஞ்சுகளுக்கான பின்னூட்டம் இது.
July 27th, 2009 at 6:43 pm
//–இந்திய அரசு அரிசிப் பிச்சை போட்ட பொழுதுகளில்
நாம் கேட்பது சுதந்திரம் பிச்சை அல்ல என்று வீராப்புப் பேசியோர்
பிச்சை வேண்டாம் நாயைப் பிடியாம் –
–
இங்கேதான் நான் உங்களது பிரகடனத்தின்மீது கேட்கிறேன். இன்று நீங்கள் சரியெனச்சொல்வதை நாளை காரண காரியங்களோடு உங்களால் மறுக்க முடியுமானால்..
20 வருசத்துக்கு முதல் ஒருவருக்கிருந்த கருத்து அவருக்குரிய காரணகாரியங்களோடு மாற்றமடையலாம் அல்லவா..
//
நன்று,
நாம் கேட்பது பிச்சை அல்ல சுந்திரம் என்று முன்னர் கூறியது இப்போது மாறி விட்டெதெனில், ஒன்றில் இப்போது சுதந்திரம் கிடைத்து இருக்க வேண்டும் அல்லது முன்னர் சுதந்திரம் வேண்டிப் போராடாமல் பிச்சையை மட்டுமே எதிர்பார்த்து இருக்க வேண்டும்.இதில் எது சரி என்பதை விளக்கினால், நாங்கள் எல்லாரும் சேர்ந்தே பிச்சை எடுக்கலாம்.
சயந்தன் ஒரு போராட்டம் இராணுவ ரீதியாகத் தோற்றுவிட்டது என்பதற்காக அந்தப் போராட்டதிற்க்கான அரசியற் காரணங்கள் பிழையானவை என்பது எனது புத்திக்கு ஏற்றுக் கொள்ளக் கூடிய காரண காரியம் அல்ல.உங்களுக்கு அவ்வாறானதாகப் பட்டால் அது உங்களைப் பொறுத்தது.ஆனால் சுதந்திரதிற்க்காகப் போராடாமால் பிச்சை எடுக்கலாம் என்று கூறுவது அதற்காகப் போராடுபவர்களை போராடியவர்களை இழுவு படுத்துவதாக நான் உணருகிறேன்.
உங்கள் கூற்று சுதந்திரதிற்காகாப் போராடுபவர்களின் சுதந்திரத்தை மறுப்பதாக அடிமைத் தனத்தை நியாயப்படுதுவதாக உள்ளது.அவ்வாறெனில் அடிமைத்தனதுக்கும், சுரண்டலுக்கும் எதிராக இந்த உலகில் எவருமே போராட முடியாது.அதனால் தான் சொல்கிறேன் நீங்கள் வேண்டுமானால் பிச்சை எடுங்கள், சுதந்திரதுக்காகப் போரடுபவர்களை,போராடியவர்களை இழிவு படுத்தாதீர்கள்.
//உங்களுக்கு உறவுகள் முகாம்களில் இல்லாமல் இருக்கலாம். அது ஆறுதலான ஒரு விடயம்தான். இருப்பினும் நண்பர்கள் எவரேனும் இருக்கலாம். ஆகவே எப்போதாவது உங்களுக்கு நேரம் கிடைத்து அவர்களோடு பேசக்கிடைக்குமென்பதால்.. இதற்கு நான் பதில் சொல்லத் தேவையில்லை.//
சயந்தன் எல்லாருக்கும் ஏதோ ஒரு வகையில் தொடர்புகள் இருக்கின்றன.உங்களுக்குத் தெரியுமோ தெரியாது வன்னியில் பலவகையான முகாம்கள் உள்ளன.முகாம்களுக்கிடையில் பல தரம் பிரிப்புக்கள் இருக்கின்றன.சில முகாம்களில் எவ்வித வசதிகளும் இல்லை.தொலைபேசி என்பது சில முகாம்களிலையே உள்ளது.இத்கைய முகாம்களுக்குள் அனுமதிக்கப்பட்டோர் இராணுவ புலானாய்வுப் பிரிவால் வடிகட்டப்பட்டோர்.அத்தோடு தொலைபேசி உரையாடல்கள் ஒருவரின் வடிகட்டலுக்கான அனுமதிச் சீட்டாகவும் பாவிக்கபடும். மேலும் உயிர் வாழ்வதற்காக பல முன்னாள் போராளிகள் கூட இரானுவப் புலனாய்வுப் பிரிவினருடன் இப்போது இயங்குகின்றனர்.இவை நான் கேள்விப்படும் கதைகள்.எல்லா உண்மைகளும் மக்கள் முகாம்களை விட்டு வெளியால் வர வரும் .
July 27th, 2009 at 7:00 pm
புரட்சியாளர்கள் தாமாகத் தோன்றுவதில்லை.
புது_எதிர்-எதிர்ப்புரட்சியாளர்கள் போஸ்டர் அடிக்கும்போது, பிட்நோட்டீஸாகத் தோற்றுவிக்கப்படுகிறார்கள்.
July 27th, 2009 at 7:02 pm
வர வர அறத்தைப் பற்றி முறங்கள் திறம் பேசும்போது அறளை எனக்கு கூழ்ப்பானை பற்றிப் புறம் பேசாமல் இருக்கமுடியுதில்லை.
July 27th, 2009 at 7:31 pm
.தொலைபேசி என்பது சில முகாம்களிலையே உள்ளது//
இது எந்த முகாமெண்டு தெரியா.. இதை எழுதினவரும் எந்த முகாமெண்டு தெரியா.. ஆனா யாழ்ப்பாணத்து முகாமில இருக்கிற 5000 மக்களில 1000 பேருக்கு கிட்ட கைத்தொலைபேசி வைச்சிருக்கினம். என்ரை பெயரிலும் நான் ஒரு KIT connection எடுத்து கொடுத்தனான்.
மற்றது நாங்கள் தீர்மானிப்பம் என்ன செய்யவேணுமெண்டு. அதனால நீங்கள் கொஞ்சம் அமைதியா இருங்கோ..
நாங்கள் 30 வருசமா புலிகளின்ரை தவறை ஏற்றுக்கொண்டு புலிகளை அங்கீகரிச்சம். ஆனா ஒருதடவை கூட புலிகள் தங்கடை தவறை ஏற்றுக்கொண்டதில்லை. எல்லாம் பிழைச்சுப்போச்சு.
நாங்கள் புலிகளுக்கு கொடுத்த அதிகாரத்தை அங்கீகாரத்தை அவை துஸ்பிரயோகம் செய்திட்டினம். இந்த முடிவை ஏதோ மனம் மகிழ்ந்து நாங்கள் ஏற்றுக்கொள்ளேல்லை. கசப்பான முடிவுதான் இது.
கொஞ்சம் எங்கடை கையிலும் பொறுப்புக்களை தாங்கோ.. நீங்களே எல்லாத்தையும் டிசைட் பண்ணி அனுப்பாமல்.. நாங்களும் செய்யப்பாக்கிறம்..
July 27th, 2009 at 7:59 pm
கட்டுரையை வாசிக்க தந்தமைக்கு நன்றி அகிலன்!
July 27th, 2009 at 8:45 pm
அனாமதேயம் உங்கட கையில் என்ன பொறுப்பை யார் தாறது?
நீங்கள் தானே பொறுப்பா இனி எல்லாத்தையும் செய்யலாமே? ஏன் இன்னும் இல்லாத புலிகளை எதிர்பார்த்துக் கொண்டு இருக்கிறியள்?
நீங்கள் ஏன் புலியிளிட்ட பொறுப்பை கொடுத்தனியள்? எவனோ போராடிச் செத்து உங்களுக்கு விடுதலை வாங்கித்தருவான் எண்டு நினச்சனியளோ? அனாமதேயமாப் போட்டாலும் நீங்கள் யார் எண்டு உங்கட எழுத்து காட்டிக் கொடுக்குது.காம்பில நல்லா உங்கட வியாபாரம் போகுது போல.இப்ப ஒருதருக்கு என்ன ரேட் படி வெளியால எடுத்து விடுறியள்?
July 27th, 2009 at 9:42 pm
காட்டிக்கொடுக்கும்தான்..
அந்தளவுக்கு அற்புத மான எழுத்தல்லவா
புலம்பெயர்ந்த நீங்கள் எல்லோரும் சேர்ந்து மக்களை முகாம்களில் இருந்து வெளியேற்றி அவர்கள் கொண்டாட்டத்தில் திளைத்துக்கொண்டிருக்கின்ற போது நமக்கெங்கே பிசினஸ்..? டல்தான்..
எவனோ போராடிச் செத்து உங்களுக்கு விடுதலை வாங்கித்தருவான் எண்டு நினச்சனியளோ?
ஓ.. அப்போ என்னை இயக்கத்துக்கு போயிருக்க வேண்டும் என்கிறீர்கள் என்ன.. ? நல்லது..
இயக்கத்தோடு இல்லாதவனுக்கு இயக்கத்தை பற்றி கதைக்க அருகதை இல்லையென்றால் மக்களோடு நில்லாதவனுக்கும் மக்களைப் பற்றி கதைக்க அருகதையில்லை
July 27th, 2009 at 9:53 pm
//மற்றது நாங்கள் தீர்மானிப்பம் என்ன செய்யவேணுமெண்டு. அதனால நீங்கள் கொஞ்சம் அமைதியா இருங்கோ.. //
தீர்மானிக்க நீங்கள் யாரு அண்ணை? அதுவும் அனாமதேயமா எழுதிப்போட்டு, நீங்கள் வன்னிக்க எந்தக் காம்பில இருந்து பின்னூட்டம் போடுறியள்?
July 27th, 2009 at 9:54 pm
//மக்களோடு நில்லாதவனுக்கும் மக்களைப் பற்றி கதைக்க அருகதையில்லை//
உண்மை தான், நீங்கள் எங்க நிக்கிறியள் அண்ணை?
July 27th, 2009 at 10:15 pm
தீர்மானிக்க நீங்கள் யாரு அண்ணை? //
சூப்பரு.. இதே கேள்விய நீங்க வன்னி முகாம் மக்களை பார்த்தும் கேட்பீங்களா சார்?
நீங்கள் வன்னிக்க எந்தக் காம்பில இருந்து பின்னூட்டம் போடுறியள்?–
அநாமதேயங்களுக்கு பதில் சொல்வதில்லை
அதே போல நீங்களும் பதில் சொல்லவேணாம். ஏன்னா நானும் ஒரு அநாமதேயம்தானே ..
July 27th, 2009 at 10:39 pm
//சூப்பரு.. இதே கேள்விய நீங்க வன்னி முகாம் மக்களை பார்த்தும் கேட்பீங்களா சார்? //
இல்லையண்ணை
July 28th, 2009 at 9:31 am
சிரிக்காம பகிடிவிடரான்கள் பாருங்கோ. இவர் கடைசி மட்டும் வன்னியில் இருந்தவராம். ஏற்றுக்கொள்ளுகிறோம். பாதிக்கப்பட்டவராம், நிச்சயமாக. புலி மீது கோவம் காரணமாக பொங்கி எழுந்திட்டார். ஆனால் புலிகள் நியாயமாக நடந்தார்கள் என்று அறிந்தும் அவற்றை வெளியில் சொல்ல முடியாமல் எத்தனை பேர் மனதுள் புழுங்கியபடி அதே முகாம் தரப்பாளுக்குக் கீழே இருப்பார்கள். இவர் மாதிரி அவர்களுக்கும் தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்த முடியுமா? இதெல்லாம் இந்த பதிவை இடும், மீள்பதிவிடும் பதர்களுக்கு தெரியுமா அல்லது நல்ல பதிவு என்று ஒத்தூதும் புழுக்களுக்கு தெரியுமா?
தங்களின் சுய பாதுகாப்பைஇட்டு தமிழர்களுக்கு நடந்த கொடுமைகளை மற்றும்
அநியாயங்களை வெளிப்படுத்தும் நூல்களைக்கூட ஆவணப்படுத்த பயப்படும் தம்பிக்கு நிச்சயம் விளங்கும்.
கனக்க கதை விடும் நீங்க இறுதி நாளில் வன்னியில் நடந்த கொடுமையை வெளிப்படுத்தி ஒரு பதிவை தன்னும் இடாமல் இருப்பதன் மர்மம் என்னய்யா? மகிந்த கூட்டணி செய்த தில்லுமுல்லுகளை, தாடியாளர் வேசங்களை பதிவிடாமல் இருப்பதன் காரணம் என்னய்யா? முகாமில் நடக்கும் ஆள்கடத்தல் கொலை கற்பழிப்பு தெரியாதா அல்லது அப்படி நடக்கவே இல்ல எண்டு நீங்களும் சொல்லுறேங்களா ?
ஒருவர் இல்லை எண்டா என்னவும் எழுதலாமா, என்ன
கடைசியாக ஒன்று தம்பி, ஆஸ்திரேலியாஇருந்தாலும் வன்னியில் இருந்தாலும் நாட்டுப்பற்று நாட்டுப்பற்று தானையா. அங்கு உள்ளவர் வேதனையை அறியாமல் இருக்க நாங்க ஒன்றும் வேற்றுக்கிரகத்தில் வாழ்ந்தவர்கள் அல்ல.
July 28th, 2009 at 11:21 am
பன்மைத்துவத்தை ஏற்ப்படுத்தி ஜனநாயகத்தை கட்டி எழுப்பி தமிழ் மக்களின் இழந்த வாழ்வை மீட்க அனைத்து தரப்பினரையும் ஒத்துழைக்கும்படி யாழ் பல்கலைக்கழக மாணவர்களாகிய நாம் வேண்டி நிற்கிறோம். அரை நூற்றாண்டுக்கு மேல் அனைத்து போராட்ட வழிமுறைகளிலும் பேராடிய ஈழத்தமிழ் மக்கள் இன்று நிலை மாறும் கட்டத்திற்குள் பிரவேசித்துள்ளார்கள். தமிழ் மக்களின் கடந்த கால போராட்ட அனுபவங்களை பாடமாகக் கொண்டு நிகழ்காலத்திற்கும் எதிர்காலத்திற்கும் உரியதான புதிய அரசியல் வழி முறைகளை மேற் கொள்ள வேண்டி அவசியத்தில் தமி;ழ சமூகம் இன்றுள்ளது.
இதில் முதலாவதாக தகவல் யுகத்தில் எல்லா வகையான தொடர்புர்;களையும் துண்டிக்கப்பட்டிருக்கும் வன்னி அகதி மக்கள் மீள் குடியேற்றம் செய்யப்படவேண்டும்., அடுத்து முஸ்லீம் மக்கள் உள்ளடங்களாக தமது சொந்த வாழ்விடங்களை விட்டு வெளிறே;றப்பட்ட சகல மக்களும் மீள் குடியேற்ற வேண்டும். அதற்கான நடவடிக்கையை முன்னிருத்தியும் தமிழ் மக்களினுடைய கல்வி அபிவிருத்தி பாதுகாப்பு மனித உரிமைகள் என்ற அனைத்து வகையான உரிமைகளையும் உள்ளடக்கிய அரசியல் அதிகாரத்தை எற்படுத்த வேண்டிய தேவை இன்றிருக்கிறது.
இழக்க முடியாதவற்றை இழந்து சிந்த முடியாதளவு குருதியை சிந்தி உலகத்தி;ன் இரத்த சாட்சியங்களாக இருக்கின்ற எமது வன்னி மக்களது பாதுகாப்பு நலன் என்பவற்றில் அக்கறை கொண்டு செயற்படுமாறு அனைத்து தமிழ் கட்சிகளையும் கோருகிறோம்.
தமிழ் சூழலில் பன்மைத்துவத்தiயும் ஜனநாயகத்தையும் கட்டி எழுப்பம் தேவைக்கு பல்கலைக்கழகத்தை தமிழ் அரசியல் கட்சிகள் பயன்படுத்தலாம். எங்கள் கதவுகளை நாங்கள் திந்தே விட்டுள்ளோம். நடைமுறை ரீதியாவும் யதார்த்த பூர்வமாகவும் மக்களின் தேவைகளுக்கும் பிரச்சினைகளுக்கும் தீர்வு காண வேண்டும்., அவ்வாறு தீர்வு காண்போரையே மக்கள் தமது அரசியல் தெரிவாக எடுத்துக்கௌ;ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம். வன்னி அகதி மக்கள் தொடர்பாக யாழ் பல்கலைக்கழக மாணவர் பிரதிநிதிகளுடன் தமிழ் கட்சிகள் மனந்திறந்து பேசவும் அடுத்த கட்டத்திற்கு செல்லவும் எங்கள் முழுமையான ஒத்துழைப்பை வழக்க தயாராக இருக்கின்றோம்.
எங்களிடமிருந்த வன்முறை அரசியலாலும், விட்டக் கொப்பின்மையினாலும், முரண்பாடுகளாலும் எமது மக்களே அனுபவிக்க முடியாதளவு துயரங்களை அனுபவித்து இன்று முட்கம்பிச் சிறைகளுக்குள் வைக்கப்பட்டுள்ளார்கள். எமது மக்களை கவனிக்காது அவர்களை பார்வையிடாது மீட்பதற்கு எந்தச் சிறு நடவடிக்கையும் எடுக்காது வாக்குகளை கேட்க வருகின்ற தமிழ் கட்சிகள்மீது எமக்கு கடுமையான விமர்னசம் உண்டு. தமிழ் தேசியக் கூட்டமைப்பில் உள்ள சில பாராளமன்ற உறுப்பினர்கள் வன்னி மக்களின் உடனடிப் பிரச்சினைகளில் எந்தக் கவனமும் செலுத்தாமல் நடைமுறைச் சாத்தியமான நடவடிக்கைகளில் இறங்காமல் இருப்பது எமக்கு கடும் அதிருப்தியை தந்துள்ளது.
ஓட்டுமொத்த தமிழ் மக்களினதும் இன்றைய உடனடிப் பிரச்சனையாக இருப்பது வன்னி மக்கள்தான். அதுவே தாயகத்து மக்களினதும், தமிழக மக்களினதும், புலம்பெயர் மக்களினதும் நெருக்கடி நிலையாக உள்ளது. எனவே முதலில் வன்னி மக்களின் உடனடிப் பிரச்சினையை தீர்த்து அவர்களை தடுப்பு முகாங்களிலிருந்து விடுவித்து மீள் குடியேற்றம் செய்ய வலியுறுத்த வேண்டிய அவசியம் உடனடித் தேவையாக உள்ளதை தமிழ் அரசியல் கட்சிகள் புரிந்து கொள்ளவேண்டும். எமது மக்களின் இன்றைய மனிதாபிமான பிரச்சினையை அவலத்தை முடிவுக்கு கொண்டு வந்த பிறகு அரசியல் தீர்வை ஏற்படுத்த வலியுறுத்துங்கள். சுயநலமான அரசியல் நோக்கங்களுக்காக வன்னி மக்கைளை பயன்படுத்துவது கண்டு சில தமிழ் கட்சிகள்மீது அதிருப்தி அடைகிறோம்.
வன்னி அகதி மக்களின் விமோசனத்திற்காக நடைமுறையில் இறங்குபவர்களை வன்னி மக்களே தமது பிரதிநியாக தெரிவு செய்வார்கள். அவர்களையே புலம்பெயர் மக்களும் தமிழகத்து மக்களும் நிரதிநிதியாக ஏற்றுக் கொள்வார்கள். தமிழ் மக்கள் சிந்திய குருதி வீண்போகாத வகையிலும் அவர்களுக்கு நல்ல வாழ்வுச் சூழலை கட்டி எழுப்ப நேர்மையான நடவடிக்கையில் இறங்குங்கள். தமிழ் மக்களை இனியும் தோற்கடிக்காமல் ஏகபிரதிநிதித்துவ வாத்தின் வன்முறை அரசியலி;ன் அழிவில் தமிழ் மக்களுக்கு தேவைப்படுகிற, உலகத்தின் பொதுப்போக்கான பன்மைத்தவ அரசியல் சூழலையும் மக்கள் ஜனநாயகத்தையும் கட்டி எழுப்ப மனதாரச் செயற்படுங்கள். அனைவரும் ஒன்றினைந்து வன்னி மக்களின் நலன் சார்ந்த விடயங்களை அசாங்கத்திற்கும் சர்வதேசத்திற்கும் எடுத்து கூறுவோம்.
மக்கள் நலன் தொடர்பாக அனைத்து தமிழ் கட்சிகளுடனும் பேசுவதோடு நேர்மையாக, மக்கள் நலனுக்காக அர்பணித்து செயற்படுகிற அரசியல் முனைப்பக்களை நாம் வரவேற்பதுடன் அதன் பின் நின்று முழுமையான எங்கள் ஒத்துழைப்பை தருவதற்கு தயாரக உள்ளோம் என்ற யாழ் பல்கலைக்கழக மாணவர்களின் நிலைப்பாட்டை யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தெரிவித்துக்கொள்ளுகின்றது.
நன்றி.
இவ்வண்ணம்,
பா.பிரதீபன் அ.பிரசன்னா
………………………….. ……………………….
செயலாளர் தலைவர்
28.07.2009 இரவு8.00
————————
இந்த அறிக்கை என்ன சொல்கின்றதென்றால்.. அங்கேயிருக்கின்ற மக்கள் தமது தலைவிதியை தாமே தீர்மானிக்கப்போகின்றார்கள் என்பதை.. என்ன கொழுப்பு அவர்களுக்கு… தாங்கள் தங்கட பிரதிநிதியை தேர்ந்தெடுப்பினமாம். அதை புலம்பெயர்ந்த தமிழர்கள் ஏற்றுக்கொள்ளுவினமாம். ங்கொய்யால.. அதெல்லாம் நாங்கள் ஏற்றுக்கொள்ளேலாது.
July 28th, 2009 at 3:25 pm
//யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தெரிவித்துக்கொள்ளுகின்றது.//
யாழப்பாணப்பல்கலைக்கழகமோ…
எப்ப வந்தது உந்த ஞானம்
//kumar on July 28th, 2009 at 9:31 am //
குமார், எனக்கு எனக்கு நல்லா வாயுல வருது…!
July 30th, 2009 at 9:49 am
We need to learn from mistakes
August 2nd, 2009 at 8:42 am
Hello,
Please think rationally then write without bias and do not misguide people by using controversial terminology.
Anpan
August 2nd, 2009 at 2:13 pm
akilan oonkada kadurai sampanthama kathikkinum ippa onndukkum avasarappada
vendam en enda sinkalavan innum thirunththve illai. enakku mail anuppunko/ je
August 2nd, 2009 at 11:49 pm
pongadaa akilan ,nee oru shobashakthi’in uruvamaga varukiraai. neeye kadduraiyai ezhuthividdu vanniyilirunthu yaaro ezhuthiyathaaga kathai vidukiraai.
August 3rd, 2009 at 10:46 am
As a person had been living in the last days in the hell of the combat zone [ yes in Maththalan], I fully agreed the view of the article writer. Its a untold story and we have to save it to covey to our forthcoming generation that will never imagine how our peoples suffered in this ‘freedom Fighting’ under a leader who has no idea to lead a freedom fighting. ‘ Thesiya Thalaivar’ stated one of his interview that he is a follower of ‘history’. varalaru Enathu Valikaddy. I would like to know which History was followed up by him to destroy our nations and our earnings. All Vannians are now beggars. How they will recover their lost life? Pls think positively.
August 11th, 2009 at 2:45 pm
ஆளாளுக்கு எழுத எங்கடை புனிதப் போராட்டம் தான் கிடைச்சுதா? முடியாட்டி வை பொத்து விடுப்பு பார்க்கிறதை விட்டுடு???? ஒருத்தரும் இல்லை என்று என்னவும் கதைக்கலாமோ?????
August 12th, 2009 at 10:23 am
”ஆளாளுக்கு எழுத எங்கடை புனிதப் போராட்டம் தான் கிடைச்சுதா? முடியாட்டி வை பொத்து விடுப்பு பார்க்கிறதை விட்டுடு???? ஒருத்தரும் இல்லை என்று என்னவும் கதைக்கலாமோ?????”
Still there are idiots like this around the world. How our people get ‘Vimosanam’?. I would like to know the meaning of ‘Punitham’ in our freedom struggle? Killing innocents or recruiting women when they are taking path or hiding food articles when our people are hungry?. I like to say one thing to these type of Idiots that talk with a person who came from Vanni in the last days. then you can talk whatever you like.
August 31st, 2009 at 10:55 am
இந்த கட்டுரையாளர் 90களில் இருந்தே புலிகளுக்கு உண்மையை உரக்க எழுதமுற்பட்டு புலிகளால் குழப்பவாதியாக கருதி அவரின் எழுத்துக்கள் புலிகளின் பத்திக்கு தேவையில்லை என ஒரங்கட்டப்பட்டார். ஆனாலும் அவரின் முயற்சியில் ப்ல்வேறு கலைவெளிப்பாடுகள் வந்துகொண்டுதான் இருந்தது. ஒரு பொழுது பிரபாகரனே இவரது ஒரு புத்தகத்துக்கு மனமார புகழ்ந்தார். இருந்தாலும் உள்ளூர பயம். பின்னர் சமாதானத்தின் பின்னர் மீண்டும் இவர் புலிகளால் பயன்படுத்தப்பட்டார். ஆனாலும் இவர் தனது எழுத்துக்களில் தணிக்கை செய்யப்படுவதை விரும்புவதில்லை. அப்படியிருந்தும் சிலசமயங்களில் தணிக்கைக்குட்பட்டே வருவதுண்டு. இவர் ஒரு போதும் பிரபாகரனை தேசியதலைவர் என்றோ அண்ணை என்றோ தலைவர் என்றோ அழைப்பது அரிது. பிரபாகரன் என்று விழித்தே கதைப்பவர். இவரை விமர்சிப்பவர்கள் யாராகினும் இவரது தனிப்பட்ட ஒழுக்கத்தை விமர்சிக்கலாம் ஆனால் இவர் கொண்ட அரசியலை விமர்சிக்க முடியாது. இங்கும் நான் இவரது பாதுகாப்புகருதி பெயரை குறிப்பிடவிரும்பவில்லை. சிலர் சொல்கிறார்கள் இவர் ஒரு மாற்றுதரப்பினருடன் சேர்ந்து இயங்குவதாக அதில் எனக்கு நம்பிக்கையில்லை. இதில் அவர் சொன்ன கறுப்பு,வெள்ளை,சாம்பல் என்பதை அவர் ஒரு குறியீடாகவே கட்டுரையில் குறிப்பால் உணர்த்தியிருக்கிறார். இதில் அவர் தனது குறியீட்டுப்பாணியை மிகத்திறமையாக கையாண்டுள்ளார். எதுஎப்படியிருப்பினும் அவர் சொல்லிய அனைத்தும் 1000வீதம் நேர்மையானது.
September 6th, 2009 at 7:40 pm
CAN YOU CALL ME AT 647-829 7574 .I AM ANTON .I LIKE TO TALK WITH YOU ABOUTE THIS ARTICAL
September 11th, 2009 at 1:37 pm
வணக்கம் நீங்க எனது மின்னஞ்சல் வழியாகத் தொடர்பு கொள்ளலாமே அன்ரன்.. எனக்கு ஒரு நான்கைந்து அன்ரன்களைத் தெரியும் அவர்களில் எனது தொலைபேசி இலக்கம் தெரியாத அனன்ரன் யாரும் இல்லை.. மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள்..
September 12th, 2009 at 10:19 am
வணக்கம் நீங்க எனது மின்னஞ்சல் வழியாகத் தொடர்பு கொள்ளலாமே அன்ரன்.. எனக்கு ஒரு நான்கைந்து அன்ரன்களைத் தெரியும் அவர்களில் எனது தொலைபேசி இலக்கம் தெரியாத அனன்ரன் யாரும் இல்லை.. மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள்..//
என்ன விசர்கதை கதைக்கிறீர்..
வெளிநாடுகளில இருந்துகொண்டு எனக்கொருக்கா கோல் பண்ணும் என்று வந்தால் நீர் பண்ணத்தான் வேணும். ஏனென்டால் அவை மேலயெல்லோ இருக்கினம். இப்பிடித்தான்.. ஓடர்கள் போடுவினம்.
November 10th, 2009 at 2:59 pm
வன்னியில் வாழ்ந்தவனுக்குதான் தெரியும் புலிகள் எப்படிப்பட்டவர்கள், அவர்களது சுய மூபம் என்ன எனபது? வெளிநாடுகளிலும் வன்னிக்கு வெளியிலும் இருந்து கொண்டு ‘அண்ண விடார்’ கனவில் இருப்பவர்களுக்கு இக்கட்டுரையின் உண்மைத் தரிசனத்தை ஏற்றுக்கொள்ள இயலாது. ஏனெனில் அவர்களது பிழைப்பு கெட்டுவிட்டது. வன்னி மக்களின் சாவில் பிழைத்தவர்கள் அல்லவா இத்தகையவர்கள்?
February 17th, 2010 at 9:08 pm
அகிலன் உன்னைப்பற்றி தெரியும் இவ் ஆய்வுரை எழுதிய நிலாந்தன் பற்றியும் தெரியும் .நீ சிலவேளைகளில் என்னை மறந்து இருக்கலாம்
மறந்து இருந்தால் வன்னி tech ஐ நினைவு படுத்திபார். சிலவேளைகளில் நினைவு வரலாம் .நிலாந்தன் 2004 -2005 காலப்பகுதியில் எழுதிய ஆய்வுகளில் புலிகள் பற்றி எப்படி எழுதி இருந்தார் என்று நீ அவற்றை வாசித்து இருந்தால் தெரியும் அல்லது அதையும் நீ மறந்து விட்டாயோ தெரியாது. இப்போது அவர் எப்படியான நிலையில் இருந்து கொண்டு இப்படி எழுதினாரோ எனக்கு தெரியவில்லை..அவர்களும் மனிதர்கள் தான் பிழை விட்டு இருக்கலாம்.இறந்தவர் மீது வசை பாடாமல் விட்டுவிடுதல் நலம். இதற்கு மேலாக எம் எல்லோர் கைகளிலும் அவர்களின் இரத்தம் இருக்கிறது.
எனது குடும்பமும் வன்னியில் தான் இருந்தது.
நிறைய எழுத நினைக்கிறேன் ஆனாலும் …….என்னுடன் ஒன்றாக படித்ததனால் நீ என்று அழைத்துவிட்டேன் மன்னித்து விடு
May 23rd, 2010 at 5:31 am
// இப்போது இந்தக்கட்டுரை இலங்கையின் அரச படைகளின் கட்டுப்பாட்டில் இருக்கிற ஒரு அகதிமுகாமின் தறப்பாளின் கீழிருந்து எழுதப்படுகிறது //
….உண்மை இதிலிருந்தே தெரிந்துக்கொள்ளுங்கள் தோழர்களே !!!
இலங்கைப் படைகளின் கட்டுப்பாட்டில் இருக்கும் எவர் வேண்டுமானாலும் இதுபோல் எழுத முடியும்….
உங்களது சிகப்பு வரிகளை படிக்கும் போது….
இதுவரை நான் எழுதியதை தயவு செய்து நம்பி விடுங்கள் என்று கெஞ்சுவது போல் உள்ளது…
இக்கட்டுரை ஏன் ஓர் நிர்ப்பந்தத்தின் கீழ் எழுதப்பட்டிருக்கக்கூடாது ??
ஆக,. எம் உறவுகளை அழித்த சிங்களன் நல்லவன்.
முள்வேலி என்ற பெயரில் சித்ரவதை செய்துக்கொண்டிருக்கும் சிங்களன் மனிதன்.
புலி அடிப்பட்டதும், பின்னோக்கி ஓடுகின்ற சிலரைப் பார்த்தால் சிரிப்பு தான் வருகிறது.
ஏனோ,
இதுபோல் வரும் சில ‘ கதைகளை’ கூட கேட்பதற்கு ஒரு கூட்டம் உள்ளது.
இதற்கு மேல் பேச நா எழவில்லை……
தொடரட்டும் …..