படகில் நுழையாக் கடல்

Posted by த.அகிலன் on Apr 21st, 2010
2010
Apr 21

refuge

அத்தனை எளிதன்று
அகதியாதலும்
அதனின்று விடுபடலும்.

நீண்ட அலைதலின் முடிவில்
நதி மருங்கில் தேங்கிய
துரும்பைப் போலவோ
அல்லது
கடல் வீசியெறிந்த
தகரப் பேணியைப்போலவோ
எறியப்பட்டிருக்கிறது வாழ்வு.

துரும்பைத் திரும்பவும்
அலைகளில் எறியும் அறியாச்சிறுவனின்
எத்தனங்களோடிருக்கிறது உலகம்.
அலைதலும் தொலைதலும்
எறியப்படுதலின் வலியும்
துரும்பே அறியும்.

திடுக்கிட்டு விழிக்கும்
எல்லாக்கனவுகளும்
விசாரணையிலேயே தொடங்குகிறது.

நான் ஓர் அகதி
என்னிடமிருப்பதோ
அவளைச் சேர்வதான எத்தனங்களும்
விசாரணைக்கான பதில்களும்
கொஞ்சக் காகிதங்களும்

திரும்பவும் திரும்பவும்
பெருகும் விசாரணைக்கேள்விகள்
செவிகளில் நுழைகையில்
நான் நினைக்கத் தொடங்குவேன்
படகில் நுழையாக் கடலைக்குறித்து.

அத்தனை எளிதன்று
அகதியாதலும்
அதனின்று விடுபடலும்.

01.

25.02.2009 (முன்)

நமது தொலைபேசி

உரையாடலை

கேட்டுக்கொண்டிருக்கின்றன

நமக்குச் சொந்தமற்ற செவிகள்.

பீறிட்டுக்கிளம்பும்  சொற்கள்

பதுங்கிக் கொண்டபின்

உலர்ந்து போன வார்த்தைகளில்

நிகழ்கிறது.

நீ உயிரோடிருப்பதை அறிவிக்கும்

உன் ஒப்புதல் வாக்குமூலம்.


வெறுமனே

எதிர்முனை இரையும்

என் கேள்விகளின் போது

நீ

எச்சிலை விழுங்குகிறாயா?

எதைப்பற்றியும்

சொல்லவியலாச்

சொற்களைச் சபித்தபடி

ஒன்றுக்கும் யோசிக்காதே

என்கிறாய்..

உன்னிடம்

திணிக்கப்பட்ட

துப்பாக்கிகளை நீ

எந்தப்பக்கமாகப் பிடிப்பாய்

வாய் வரை வந்த

கேள்வியை விழுங்கிக்கொண்டு

மௌனிக்கிறேன்.

தணிக்கையாளர்களாலும்

ஒலிப்பதிவாளர்களாலும்

கண்டுகொள்ளமுடியாத

ஒருதுளிக்கண்ணீர் புறங்கையில்

உதிர்கிறது..

தொலைபேசிகளை

நிறைக்கிறது

ஒரு நிம்மதிப்பெருமூச்சு..

நீ நிம்மதியாப் போ..

02.

05.03.2009 (பின்)

அவனது பெயரில் அழகிருந்தது..

அன்பும் கூட
அவனோடு எப்போதுமிருக்கும்
அவனது மென்புன்னகையைப் போலவும்

அவனது புன்னகை ஒரு வண்டு.
மற்றவர்களின் இதயத்தை
மொய்த்துவிடுகிற வண்டு.

அவனுக்கு இரண்டு பெயர்கள் இருந்தன..
செல்லமாய் ஒன்றும்
காகிதங்களில் ஒன்றுமாய்
எதைக்கொண்டு அழைத்தாலும்
அவனது புன்னகை
ஒரே மாதிரியானதுதான்..
மாற்றமுடியாதபடி…

அவனுக்கு மூன்றாம் பெயரை
அவர்கள் வழங்கினர்
அந்த மூன்றாம் பெயர்
அவனது புன்னகையைப்
பிடுங்கிவைத்துக்கொண்டு
துவக்குகளைப் பரிசளித்தது.
அவனது விருப்புகளின்
மீதேறிநின்று பல்லிளித்தது.
அவனது தாயைப் பைத்தியமாயத்
தெருவில் அலைத்தது.

அம்மா மூன்றாம் பெயர்
அவனைக் கொன்றுவிடுமெனப்
புலம்பியபடியிருந்தாள்.
அவனது முதலிரண்டு பெயர்களையும்
திரும்பத் திரும்பச்
சொல்லிக்கொண்டிருந்தாள்..
மந்திரங்களின் உச்சாடனம்போல..

இறுதியில் அந்த மூன்றாம் பெயர்
அவனைக் கொன்றது.
அம்மா பேச்சை நிறுத்தினாள்..
யாருமற்ற வெளியில்

அலைந்துகொண்டிருக்கிறார்கள்
முதலிரண்டு பெயர்களும்
மரணத்தால் எடுத்துச்செல்லமுடியாத
அவனது புன்னகையும்.. அம்மாவும்


(தம்பி அன்பழகனுக்கு)
நன்றி – எதுவரை (செப்-அக் 2009)

Next »

FireStats icon Powered by FireStats