வீடெனப்படுவது யாதெனில் பிரியம் சமைக்கிற கூடு…..

கூரையின்
முகத்தில் அறையும்
மழையைப் பற்றிய
எந்தக் கவலைகளும் அற்றது
புது வீடு
இலைகளை உதிர்த்தும்
காற்றைப் பற்றியும்
இரவில் எங்கோ காடுகளில்
அலறும் துர்ப்பறவையின்
பாடலைப் பற்றியும்
எந்தக்கவலைகளும்
கிடையாது
புது வீட்டில்..
ஆனாலும் என்ன
புது வீட்டின்
பெரிய யன்னல்களூடே நுழையும்
நிலவிடம் துளியும் அழகில்லை..
இந்தக் கவிதையை நாங்கள் அக்காவின் லண்டன் காசில்.. அல்லது லண்டன் கடனில் கட்டிய புதுவீட்டிற்கு குடிபோன அன்றைக்கு எழுதினேன். (இதைக் கவிதை என்று ஏற்றுக்கொள்வதும் விடுவதும் உங்கள் முடிவுக்கு விடப்படுகிறது).. நாங்கள் முதலில் ஒரு சின்ன அறையும் ஒரு பெரியறையும் (சாமியறை)ஒரு விறாந்தையும் கொண்ட வீட்டில் குடியிருந்தோம்.. தனித்தனி அறைகள் கிடையாது.. [...]

மரணத்துக்கு முன்னும் பின்னுமான குறிப்புகள்.

01.
25.02.2009 (முன்)
நமது தொலைபேசி
உரையாடலை
கேட்டுக்கொண்டிருக்கின்றன
நமக்குச் சொந்தமற்ற செவிகள்.
பீறிட்டுக்கிளம்பும்  சொற்கள்
பதுங்கிக் கொண்டபின்
உலர்ந்து போன வார்த்தைகளில்
நிகழ்கிறது.
நீ உயிரோடிருப்பதை அறிவிக்கும்
உன் ஒப்புதல் வாக்குமூலம்.

வெறுமனே
எதிர்முனை இரையும்
என் கேள்விகளின் போது
நீ
எச்சிலை விழுங்குகிறாயா?
எதைப்பற்றியும்
சொல்லவியலாச்
சொற்களைச் சபித்தபடி
ஒன்றுக்கும் யோசிக்காதே
என்கிறாய்..
உன்னிடம்
திணிக்கப்பட்ட
துப்பாக்கிகளை நீ
எந்தப்பக்கமாகப் பிடிப்பாய்
வாய் வரை வந்த
கேள்வியை விழுங்கிக்கொண்டு
மௌனிக்கிறேன்.
தணிக்கையாளர்களாலும்
ஒலிப்பதிவாளர்களாலும்
கண்டுகொள்ளமுடியாத
ஒருதுளிக்கண்ணீர் புறங்கையில்
உதிர்கிறது..
தொலைபேசிகளை
நிறைக்கிறது
ஒரு நிம்மதிப்பெருமூச்சு..
நீ நிம்மதியாப் போ..

02.
05.03.2009 (பின்)
அவனது பெயரில் அழகிருந்தது..
அன்பும் கூட அவனோடு எப்போதுமிருக்கும்அவனது மென்புன்னகையைப் போலவும்
அவனது புன்னகை ஒரு வண்டு. மற்றவர்களின் இதயத்தைமொய்த்துவிடுகிற வண்டு.
அவனுக்கு இரண்டு பெயர்கள் இருந்தன.. செல்லமாய் ஒன்றும்காகிதங்களில் ஒன்றுமாய் எதைக்கொண்டு அழைத்தாலும்அவனது புன்னகை ஒரே மாதிரியானதுதான்..மாற்றமுடியாதபடி…
அவனுக்கு [...]