01.
மரணமும் அது குறித்தான சேதிகளும் ஒரு கொடு நிழலைப்போல் என்னைப் பின் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. ஒப்பாரிகளையும் துப்பாக்கி வெடிக்கும் ஓசைகளையும் கடந்து வந்து விட்டேன் என்கிற எனது கனவுகளை அந்தக்கிழவர் இன்றைக்குத் தகர்த்துவிட்டார். எனது புன்னகையைத் தன்கையில் எடுத்து வைத்துக்கொண்டு அது வெறும் புன்னகை மெழுகு பூசப்பட்டிருக்கும் துயரத்தின் பொம்மை என்று எனக்குணர்த்திவிட்டார். எப்போதுமே எனது புன்னகையின் ஆயுள் குறைவாயிருக்கிறது. நான் கடந்து வந்துவிட்டதாய் நினைத்துக்கொண்டிருந்த போர். அதன் வலியும் குரூரமும் கொஞ்சக் கூடக் குறையாமல் வாழ்ந்து கொண்டிருக்கிறது தன் அரூபமான வடிவத்தில். போரும் ஆதியும் அந்தமும் இல்லா அரும் பெரும் சோதி போல, போர் கூடுகளைப் பிரித்து வீச திசைக்கொன்றாய் பறந்து வேறு கிளைகள் வேறு மரங்கள் என்றாகிவிட்ட பின்னரும் குருவிகளின் பயண வழித்தடங்களில் எழுதப்பட்டிருக்கிற போரின் குரூரமும் வலியும் அவற்றை அச்சமூட்டி நடுங்கச் செய்து கொண்டேயிருக்கிறது அவற்றின் வெளிமுழுதும்.
துப்பாக்கிகளின் மெளனத்தோடு போர் ஒருபோதும் ஓய்ந்து போவதில்லை என்றைக்கும் மனிதர்களின் மனங்களில் வாழ்ந்து கொண்டேயிருக்கிறது. இரத்தமும் சதையுமான, துயரும் வலியுமான,சொந்த,மற்றும் அரசியல் கதைகளின் பெயரால் துயர்தரும் அதன் கொடுமைகளின் பெயரால் அது ஜீவித்திருக்கிறது நிரந்தரியாய்.
போருக்கு மரணம் கிடையாதா? நான் பிறக்குபோதும் என்னூரில் போர் இருந்தது. விமானங்கள் வட்டமிட்டுக்கொண்டிருந்த மாலைப் பொழுதொன்றில்த்தான் என்னைப் பிரசவிப்பதற்காக தான் வைத்தியசாலைக்குப் போனதாக அம்மா நினைவுகளை மீட்டுவாள். இதோ இப்போது மிருக்கிறது அந்தப் போர். கொஞ்சமும் வேகம் குன்றாமல் மாறாக முன்னிலும் அதி தீவிரத்தோடு. இதோ இந்தப் பெரியவரின் எதிரில் அமர்ந்திருக்கிற இந்தக் கணத்திலும் என்னூரில் யாரோ ஒருவர் மரணமடையலாம் என்பது எனக்கு மேலும் மேலும் அச்சத்தையும் அதைவிட ஒருபடிமேலாய் போர் பற்றிய சலிப்பையும் ஏற்படுத்துகிறது. போர் பற்றி அலைந்து கொண்டிருக்கிற, அல்லது அதற்காக சொல்லப்படும் விடுதலை வீரதீரக் கதைகளிற்குமப்பால் கீறப்பட்ட மனங்களில் வடிந்து கொண்டிருக்கும் குருதியின் பசியதுயரம் என்னை மேலும் மேலும் அச்சமடையச் செய்கிறது. பிறகு அச்சமடைந்து அச்சமடைந்து அது சலிப்புற்று என்னை வெறுமையான மனவெளிகளில் தள்ளுகிறது.
இதோ கந்தகமும் மரண ஓலமும், அவைகளை பார்த்தேயிராத இந்தக் கடல்கடந்து பெருநகரங்களின் தெருக்களிலும் என்னை விடாது துரத்துகிறது. எதைக் கடந்து வந்துவிட்டதாய் நான் எண்ணிக்கொண்டிருந்தேனோ அது என்னைத் துரத்துகிறது. களத்தை விட்டு வெளியேறிய பின்னும் துரத்தி வருகின்ற பெருந்துயரம், மரணங்களின்,பிரிவுகளின்,ஏமாற்றங்களின் மாறாப் பெரும் கதையாய் மனங்களில் இறுகிக் கிடக்கிறது. இதோ வெறும் அரை மணி நேரத்திற்கு முன்பு அறிமுகமான ஒரு சின்னப் பெடியனின் எதிரில் உதிர்ந்து விழுகிறது இந்தப்பெரியவரின் நரைத்த கண்ணீர்.
கருணாகரன் அண்ணை சொல்லியிருக்காவிட்டால் நான் அவரைச் சந்தித்திருக்க மாட்டேன்.அவர் ஓவியர் என்று சொல்லியிருந்தார் கருணாகரன். உண்மையைச் சொன்னால் இலங்கைக்காரர்கள் வீட்டிற்கு போவதற்கு இரண்டு காரணங்கள் மட்டுமே உண்டு. ஒன்று ஊர்ப்பாசம். மற்றது சென்னையில் அதிகம் தேய்காய்ப்பால் விடாத உணவுகளைச் சாப்பிட்டுச் சாப்பிட்டுச் செத்துப்போன நாக்கிற்கு ஒரு வேளையாவது ஊர்ச்சாப்பாடு கிடைக்கும். வயிற்றுக்குள் உணவு போகாத நேரங்களில் தான் செவிக்கெல்லாம் உணவு.
‘நீங்கள் இங்க வந்து எவ்வளவு காலம் அப்பன்’? அவர் இப்படித்தான் உரையாடலைத் தொடங்கினார். நான் ஒரு மாதிரி நெகிழ்ந்து போனேன். பெரும் பாலும் பிறத்தியாரை அது வயசில் மிகவும் சின்னப்பெடியனை இவ்வளவு நெருக்கத்தோடு அழைக்கிற சமூகமாய் எங்கள் சமூகம் இல்லை. அது ஒரு வகைத் திமிரும் தடிப்பும் கொண்ட சமூகம். ஒண்டு நீ என்று அழைப்பார்கள் இல்லை எதிரில் இருக்கிறவன் கொஞ்சம் மரியாதை கொடுக்கக் கூடிய பெடியன் என்றால் நீர் என்று விளிப்பினம். ‘அப்பன்’ என்கிற அவரது நெருக்கம் எனக்குப் பெரியம்மாவை நினைவு படுத்தியது. பெரியம்மா என்னை அப்படித்தான் கூப்பிடுவா அதுவும் முழுசா அப்பன் என்று சொல்வதில்லை ‘அப்பு’. கன நாளைக்குப் பிறகு என்னை அப்பன் என்று ஒருவர் அழைத்திருக்கிறார். அதுவும் அவரது இதயத்திலிருந்து வந்த அன்பான அழைப்பு அது என்று தோன்றிற்று. ‘கருணாகரன் எப்படியிருக்கிறார்’? என்று கேட்டார். யுத்தநிலத்தில் வாழும் ஒருத்தர் நல்லாயிருக்கிறார் என்று எப்படிச் சொல்லமுடியும். ஆனாலும் நல்லாயிருக்கிறார் என்று சொன்னேன். அவர்தான் உங்களைப் போய்ப் பார்க்கச் சொன்னவர் என்றும் சொன்னேன். கிளிநொச்சியை விட்டு பத்து வருடங்களிற்க முன்பு அவர்கள் வெளியேறிய போதிருந்த மனிதர்களையும் இடங்களையும் பற்றி அவர் கேட்டுக்கொண்டிருந்தார். அவர் கேட்வர்களின் பெரும்பாலனவர்களை எனக்குத் தெரியாதிருந்தது. தெரிந்த சிலரிலும் ஓரிருவர்தான் இப்போது உயிருடன் அல்லது ஊரில் இருக்கிறார்கள். அவருக்கு சிலரது மரணங்கள் அப்போதுதான் தெரியவந்து தனது துயரத்தை வெளிப்படுத்திக்கொண்டிருந்தார். நான் அவர் எங்கே சண்டையைப் பற்றிப் பேச்செடுத்து விடுவாரோ என்று பயந்துகொண்டிருந்தேன். எனக்கு வெளிநாடுகளில் பத்திரமாக இருந்து கொண்டு சண்டையைப் பற்றி அதன் வெற்றிதோல்விகளைப் பற்றி அலசி ஆராய்ந்து துவைத்து தொங்கப்போடுபவர்களைக் கண்டால் பற்றிக்கொண்டு வருகிறது. ஏதோ கிரிக்கெட் போட்டிகளின் வெற்றி தோல்வியைப் பற்றிப்பேசுவதைப்போல சரியா அடிக்கவில்லை. சரியா வெடிக்கவில்லை என்று தாக்குதல் திட்டங்கள் வகுத்துக்கொண்டிருப்பினம். அவர் அப்படி எதுவம் பேசவில்லை என்பதே எனக்கு ஆறுதலாயிருந்தது.
நாங்கள் பேசிக்கொண்டிருக்கையில் அவரது மனைவி அறைக்குள் இருந்து வெளியே வந்தார். வன்னியில் இருந்து வந்திருக்கினம் அவர் அவாவிடம் கொஞ்சம் சத்தமாகவே சொல்லவேண்டியிருந்தது அதை. வன்னி என்கிற அந்த வார்த்தை அவர் மனைவியின் முகத்தின் தளர்வில் ஓடிச் சுடர்ந்து பிரகாசத்தை முகத்தில் ஏற்றிவைத்தது. நான் அங்கிருந்து வெளியேறும் வரை அந்தச் சுடர் அணையாதே இருந்தது. கொஞ்சம் அழகான பெண்ணொருத்தி திடீரென்று குசினுக்குள்ளிருந்து எங்களுக்குத் தேத்தண்ணி கொண்டு வந்து வைத்துவிட்டுப் போனா. உற்றுப்பார்க்க வைக்கிற அழகுதான். தேத்தண்ணியை வைத்து விட்டுத் திரும்ப உடன உள்ள போயிற்றா. அவர் குடியுங்கோ என்று விட்டு சொன்னார் அவா எங்கட மருகள்தான் பிரான்சில மாப்பிள்ளை வாற ஆவணி மாதம் வாறார். அதான் வந்து நிக்கிறார் எண்டு சொன்னார். நான் என்னொரு வெளிநாட்டுப் பார்சல் என்று நினைத்துக்கொண்டேன்.
அவருடைய மனிசிதான் முதல் கேட்டா. ‘உமக்கு ரூபனைத் தெரியுமா’? நான் யார் என்று சொல்லாமல் மொட்டையா ரூபன் எண்டால் எப்படிச் சொல்கிறது என்கிற மாதிரிப் பார்த்தேன். “எங்கட மகன் தம்பி ஒரே ஒரு மகன் இயக்கத்தில இருக்கிறான் மகள் சுவிசில இருக்கிறா. விசுவமடு ஏரியாப் பொறுப்பாளரா இருந்தவன் உங்களிற்குத் தெரிஞ்சிருக்கும்” என்றார் அவரது மனைவி. தொடர்ந்து நல்ல சிவந்த உயரமான ஆள் அவன். அவர் பரவசத்தோடு தன் மகனின் அங்க லட்சணங்களை விபரிக்கத்தொடங்கினார். நான் அவர் சொன்னவற்றைக் கூட்டிக் கழித்து ஒரு உருவத்தைக் கற்பனை பண்ணமுயன்று தோற்றுப்போனேன். ஆனால் அவர்கள் நான் எப்படியும் அந்த உருவத்தைக் கண்டு பிடித்துவிடவேண்டும் என்று உறுதியாய் இருந்தார்கள். நான் தெரியும் என்று சொல்லுகிற ஒரு பதிலையே அவர்கள் விரும்பினார்கள். ஆனால் எனக்கு அவர்களது மகனை நினைவு கொள்ள முடியவில்லை. அவர்களிற்கு சந்தோசம் துக்கம் இரண்டும் ஏற்படாதமாதிரி இரண்டுக்கும் நடுவால இப்படியும் இல்லாத அப்படியும் இல்லாத ஒரு லுக்கை வெளிப்படுத்தினேன். அவர் கடைசியாக எம்.டி.90 மோட்டசைக்கிள்ள திரிவான் தம்பி எண்டார். எனக்கு அவரைப் பார்க்கப் பாவமாக இருந்தது. எம்.டி.90 எல்லாம் எங்க போனதெண்டே தெரியாதய்யா இப்ப எல்லாம் ஹீரோ கொண்டாவாப் போச்சு என்று சொல்லநினைச்சு உள்ளுக்குள்ளயே அடக்கிக் கொண்டன். கடைசியில் நான் உறுதியாகத் தெரியாது என்கிற உண்மையை அவர்களிடம் சொல்லவேண்டியதாயிற்று.அவர்கள் முகம் வாடிப்போனது.
ஒரு பெருத்த ஏமாற்றம் அவர்களின் விழியில் வழிந்தது. ஆனாலும் அவர் சமாளித்துக் கொண்டு கருணாகரனோடு அவன் நல்ல சினேகம் தம்பி அவரோடு அவனுக்குத் தொடர்பிருக்கும் எண்டார். எனக்குத் தெரியா தெண்டாலும் எனக்குத் தெரிந்த கருணாகரன் அண்ணைக்கு அவரது மகனைத் தெரியும் என்று சொல்வதன் மூலம் அவரது மகனோடு என்னை நெருக்கினார். நான் ஏன் உங்களிற்கு அவரோடு தொடர்பில்லையோ என்று கேட்டேன். அது ஒரு பெரிய கதை தம்பி எண்டார் அவர். வீட்டுக்குள்ள புட்டுக் கொத்துற சத்தம் எனது மனசுக்கு கொஞ்சம் ஆறுதலாயிருந்திச்சு நான் அவர் கதையைக் கேட்கத் தயாரானேன்.
02.
இப்பிடித்தானப்பு 96 ல ஒரு நாள் விசுவமடுவில இருக்கையுக்குள்ள இந்த நேரம்தான் இருக்கும் சீ இதைவிட கொஞ்சம் முதல் ஒரு ஆறரை மம்மலுக்கு இரண்டு பெடியள் வீட்ட வந்தாங்கள். நேரங்காலம் இல்லாம வீடுவழிய வாறவங்கள் தானே. வேற ஏதோ அலுவலா வாறாங்களாக்கும் எண்டு நினைச்சன். என்னப்பு எண்டன். இரண்டு பேரும் மாறி மாறி ஒருத்தனை ஒருத்தன் பாத்தாங்கள் பிறகு ஐயா உங்கட மகன் வீரச்சாவு எண்டு சொன்னான் அதில ஒல்லியாய் உம்மப்போல இருந்த ஒருத்தன். எனக்கு அஞ்சும் கெட்டு அறிவும் கெட்டுப்போச்சு. இவா வீட்டுக்க இருந்து வந்தவா குழறிக்கொண்டு மயங்கி விழுந்திட்டா. பொடி() கூட வரேல்லயப்பு. படம்தான் கொண்டு வந்து தந்தாங்கள். நினைவுக்கல் வெள்ளிக்கிழமை நாட்டுவம் எண்டு சொன்னாங்கள். என்ர இப்ப சுவிசில் இருக்கிற மகள் வந்தவன்ர சேட்டைப் பிடிச்சு அடிக்கத் தொடங்கியிற்றா என்ர தம்பியைக் கொண்டு போட்டியளேடா எண்டு. அவங்கள் இரண்டு பேரும் விழுற அடிகளைத் தடுக்கக் கூட இல்லை பேசாமல் நிண்டாங்கள். அதுகள் யார் பெத்த பிள்ளையளோ. இனிமே என்ன செய்யிறது ஆ…. ஒரே ஒரு ஆம்பிளைப் பிள்ளையப்பு. நல்ல கெட்டிக் காரனப்பு எப்பயும் முதலாம் பிள்ளையா வருவான். இன்சினியரா வருவான் எண்டு நினைச்சபெடி, இந்தா இந்தப் பிள்ளையத்தான அவனுக்கு கலியாணம் கட்டுற எண்டு ஒரு கதைஇருந்தது அப்ப.(இதை அவர் சொல்லும்போது குசினிக்கால ஒரு தலை வெளிய வந்து போனது) கடைசியா அவனை வெறும் நடுகல்லா நட்டுப்போட்டும் வந்திட்டம்.
அவரது மனைவி இப்போது கதைக்கத் தொடங்கினார். நான் அப்பவே நம்பேல்ல. அவனுக்கு ஒண்டும் நடந்திராது எண்டு உள் மனசு சொல்லிக்கொண்டேயிருந்திச்சு ஆனால் அவங்கள் வந்து உறுதியாச் சொன்னவங்கள் செத்துப்போனது அவன்தான் எண்டு. ஆனாலும் எனக்கு நம்பிக்கை இருந்திச்சு என்ர பிள்ளை எங்கையெண்டாலும் உயிரோடு இருப்பான் எண்டு. நாங்கள் வைரவர் கோயில் வைச்சுப் பராமரிச்சனாங்கள் தம்பி என்னஇருந்தாலும் வைரவர் எங்கட பிள்ளையைச் சாகவிடுவாரோ சொல்லும் பாப்பம். அவர் தொடர்ந்து பேசமுடியாமல் உணர்ச்சிவசப்பட்டார்.
அவர் தன்னைக் கட்டுப்படுத்திக்கொண்டு தொடர்ந்தார். இவா முதலே அவனுக்கு ஒண்டும் நடந்திராதெண்டு உறுதியாச் சொன்னவா. அவன்ர பொடிகூடக் கிடைக்கேல்லத்தானே. நாங்கள் நடுகல்லெல்லாம் நட்டுப்போட்டு வந்திட்டம். அதுக்குப் பிறகும் மனசு கேக்காம அவன்ர சாதகக்குறிப்பைக் கொண்டு போய் ஊரில இருக்கிற சாத்திரிமாரிட்ட எல்லாம் கேட்டம் ஆள் இப்ப ஒரு பெரிய சிக்கல்ல மாட்டியிருக்கு எண்டு சொல்லிச்சினம் ஆனால் ஆள் உயிரோட தான் இருக்கெண்டு உறுதியாச் சொன்வை. இரண்டு இடத்தில நாங்கள் கட்டும் கேட்டுப்பாத்திட்டம் அதிலயும் உறுதியாச் சொன்னது அவன் உயிரோட சிறைமாதிரி ஒண்டுக்க இருக்கிறானாம் எண்டு. மைபோட்டுப் பாத்தம் அவன் உயிரோட இருக்கிறான் எண்டு திசையெல்லாம் கூடச் சொன்னவை. அதுக்குப்பிறகும் நாங்கள் நம்பாம இருக்கேலுமோ தம்பி சொல்லும் பார்ப்பம்? அவர் இதை ஒரு கேள்வியாக் கேட்டு நிறுத்தினார். எனக்கு இப்போது என்ன செய்வது எண்டு தெரியவில்லை உண்மையாகவே சோகமாக இருக்கும் என்று கருதிக்கொண்டு ஒரு புன் முறுவலை முன்வைத்தேன்.
நான் பேசாமல் இருக்கவும். ஒரு பெரு மூச்சோடு அவரே தொடர்ந்தார். பிறகு நாங்கள் விசுவமடுவில இருந்து ஸ்கந்தபுரத்திற்குப் போய்ற்றம். அவனுக்கு நாங்கள் ஸ்கந்தபுரம் போனது தெரியாது தானே ஒருநாள் நாங்கள் விசுவமடுவில இருந்த வீட்டிற்குப் போய் இந்த வீட்டில இருந்தாக்கள் எங்க எண்டு விசாரிச்சிருக்கிறான். அதுகளிற்கு எங்கட விலாசம் தெரியாததால சொல்லயில்லை. பிறகு நாங்களும் பலவழியலால அவனைத் தொடர்பு கொள்ள முயற்சி செய்தம் ஆனா முடியேல்ல. பிறகு ஒருக்கா இவான்ர தமக்கைக் காரியின்ர பேத்தீன்ர புருசன் முள்ளியவளைத் தயிலுமில்லத்தில அவன் நிக்கிறதைக் கண்டவனாம் ஆனால் அவர் போய் இவனிட்ட நீ ரூபன் தானே எண்டு கேக்க அவன் இல்லை எண்டு சொல்லிப்போட்டுப் போய்ட்டானாம். அதுக்குப்பிறகு எங்கட மகளுக்கு கலியாணம் பேசினதோட நாங்கள் இந்தியாக்கு வந்திட்டம். எங்கயிருந்தாலும் பிள்ளை உயிரோடு இருக்கிறான் எண்டு மனசுக்கு ஒரு நிம்மதி. இனிமேலைக்கு அவனுக்குச் சாவே கிடையாது தம்பி ஏனெண்டா உயிரோட இருக்கும் போதே அவனுக்கு நடுகல் இருக்கு ஹா ஹா ஹா அவர் சிரிக்க முயன்று கொண்டிருந்தார்.
கருணாகரனுக்கு இந்தக் கதையெல்லாம் தெரியும் கருணாகரனோடு உமக்குத் தொடர்பிருக்கா என்று அவர் கேட்டார்.
ஓம்
அப்ப எனக்கொரு உதவி செய்வீரே
கட்டாயம்
எங்கட மகனைப் பற்றி ஒருக்கா அவரிட்ட இருந்து தகவல் அறிஞ்சு சொல்லுவீரே?
அவரது குரல் எவ்வளவு இளகி ஒலிக்க முடியுமோ அவ்வளவு இளகி ஒலித்தது. அவர் என்னிடம் இரக்கும் ஒரு மனிதனைப்போல கேட்டார். தனது மகனை இரக்கும் ஒரு தந்தையாக தெரிந்தார். நான் அவரிடம் சொன்னேன் நான் இண்டைக்கே அவருக்கு மெயில் போடுறன். அவர் என்ன சொல்றார் எண்டு அடுத்த சனிக்கிழமை வந்து சொல்வதாகச் சொன்னேன். அவருடைய மனைவி என்னை ஆர்வமாகப் பாத்துக்கொண்டிருந்தா இப்போது அவர்களுடைய பார்வையில் நான் அவர்களது மகனைப் பற்றிய சேதிகள் கொண்டு வரப்போகும் தேவதூதன் ஆகியிருந்தேன். அவரது மனைவி என்னிடம் திடீரென்று எத்தினை வயசப்பன் உங்களுக்கு எண்டு கேட்டார். நான் 24 என்று சொன்னேன் ம் அவனை விட ஆறு வயசுக்கிழமை எண்டு சொன்னர். எனக்கு அதற்கு மேல் அங்கிருக்க முடியவில்லை நான் அவர்களுடைய மகனது நினைவுகளைக் கிளறிக்கொண்டிருக்கிறேன் என்று தோன்றியது. புட்டுத் தொண்டையில் இறங்க மறுத்தது. விடைபெற்று வருகையில் அவரது மகனைப் பற்றியே எண்ணங்கள் சுழன்று கொண்டிருந்தது. அவன் உயிரோடிருக்கிறானா இல்லையா? அவனுக்கு நினைவுக்கல் இருக்கிறது இன்னமும் அகற்றப்படாமல். ஆனால் கலையாடிகளும் சாத்திரக் காரர்களும் அவன் உயிரோடிப்பதாய்ச் சொல்கிறார்கள். இப்போது எதை நம்புவது. நடுகல் சொல்வதையா சாத்திரக் காரர்கள் சொல்வதையா?
மின்னஞ்சல் 01.
அன்புடன் கருணாகரன் அண்ணைக்கு.
எப்படியிருக்கிறீர்கள்?
நீங்கள் சொன்ன சம்பந்தன் அண்ணையைச் சென்று பார்த்தேன். மிக்க அன்பானவர்கள். உங்களைப் பற்றி மிகவும் அக்கறையோடு விசாரித்தார்கள். அவர்கள் தங்களுடைய மகனைக் குறித்த கவலையோடு இருக்கிறார்கள். உங்களிற்கு அவனோடு தொடர்பிருக்குமென்றும் அவனைப் பற்றிய செய்திகளை உங்களிடம் கேட்டுச் சொல்லச் சொல்லி என்னிடம் கேட்டார்கள். உங்களிற்கு அவர்களது மகனோடு தொடர்பிருக்கிறதா? அவர்களோடு அவனைத் தொடர்பு கொள்ளச் சொல்லுங்கள்;. விபரங்களை விரைவாக அறியத்தரவும். மனசைப் பிசைகிற சந்திப்பு அது. போர் எப்படியெப்படியெல்லாம் மனிதர்களை வதைக்கிறது இல்லையா? உங்கள் பதிலுக்காக காத்திருக்கிறேன்.
அன்புடன்
தம்பி
மின்னஞ்சல் 02.
அன்புடன் தம்பிக்கு.
மிக்க மகிழ்ச்சி. எனக்கு இன்னும் நிறைய இலக்கிய நண்பர்கள் அங்கிருக்கிறார்கள். அவர்களையும் சென்று சந்திக்கவும். ஏதாவது உதவிகள் தேவைப்படுமிடத்து செய்வார்கள். வருமானத்திற்கு முதலில் ஒரு வழியைப் பார் பிறகு மற்ற விசயங்களைப் பற்றிப் பார்க்கலாம். அக்காவை மட்டும் நம்பிக்கொண்டிராதே. அவா எவ்வளவு நாளைக்கு உதவி செய்வா எண்டு சொல்ல முடியாது. சொந்தக் காலில் நிற்பது நல்லம்.
சம்பந்தன் அண்ணையைப் பற்றி என்ன சொல்வது. அவர் நல்ல மனிதர்தான். நல்ல குடும்பம் அவரது மகனையும் எனக்கு நல்லாத் தெரியும் கெட்டிக்காரப் பெடியன். ஆனால் அவன் 96ல் இறந்து விட்டான் என்பதுதான் உண்மை. அவர்கள் அதை நம்புவதாயில்லை. என்ன செய்வது பெற்ற மனங்கள். தமிழரின் தலைவிதி இதுவாக இருக்கிறது. காலத்தின் கொடுமையை யார் தடுக்கமுடியும். இங்கே பிள்ளைகளைப் பெற்றவர்களுக்கெல்லாம் இதுதான் தலையெழுத்துப் போல. அவனது பொடி சிதறிப்போனதால அவனது பொடி குடுபடயில்லை. இவர்கள் அதில் இருந்து தான் தங்கள் நம்பிக்கைகளைக் கட்டியெழுப்புகிறார்கள். என்ன செய்ய…
மற்றபடி சந்தோசமாயிரு. ஒண்டுக்கும் யோசியாதை.
அன்புடன்
அண்ணா.
03.
கடைசியில் எதிர் பார்த்த மாதிரியே நடந்து விட்டது. அவரது மகன் செத்துவிட்டான். காலம் கொன்று கொண்டேயிருக்கிறது மனிதர்களை. அது ஒரு பிணந்தின்னிப் பிசாசு. கடைசியில் அந்தப் பிசாசின் வாய்க்கு அவரது மகனும் பலியாகிவிட்டான். இப்போது நான் என்ன செய்ய வேண்டும் என்பது புரியவில்லை. நான் துயடரர்ந்த முடிவும் அகலமும் அற்ற பெரும் பள்ளத்திற்குள் கால் பாவமுடியாமல் வீழந்து கொண்டிருப்பதைப்போல உணர்ந்தேன்.
சனிக்கிழமை காலையிலேயே அவர் போன் பண்ணிவிட்டார். நான் அவர்கள் வீட்டிற்குப் போனேன். இலங்கைச் சாப்பாடு தட்டில் இரத்தமும் சதையுமாக மனித இறைச்சி படைக்கப்பட்டிருப்தைப்போல இருந்தது. நான் சாப்பாட்டை கஸ்டப்பட்டு மிண்டி விழுங்கிக்கொண்டிருந்தேன். அவர்கள் நான் சாப்பிட்டு முடிக்கும் வரை தங்கள் கேள்விகளை முழுங்கிக் கொண்டிருந்தார்கள். அவரின் நோயாளி மனைவியைப் பார்த்தேன் அவர்கண்களில் தேர்வு முடிவுகளைப் பார்க்கப் போகின்ற மாணவியொருத்தியின் கண்கள் பொருத்தப்பட்டிருந்தன.
ரூபனைப் பற்றி தகவல் ஏதும் கிடைச்சுதே தம்பி. அவர்கள் அடக்கி வைத்திருந்த கேள்வியை அலிழ்த்தார்கள். அந்தக் கேள்வி மாட்டுவண்டிச் சவாரிக்கு முதல் சாராயம் குடிச்ச மாடு மாதிரி திமிறிக்கொண்டு என்னை விரட்டியது. நான் அதற்குப் பயந்து கொண்டு பொய் சொல்லத் தொடங்கினேன். என்னுடைய பொய் அந்த நோயாளிக்கிழவியை இந்தப் பூமியில் இன்னும் கொஞ்சநாள் நம்பிக்கையோடு வைத்திருக்கும். அந்தக் கிழவரின் துயர ஓவியங்களில் படிந்துள்ள மென் புன்னகையைத் தக்கவைத்துக் கொள்ள உதவும். நான் மெதுவாய்ச் சொன்னேன் அங்க இப்ப திரும்பவும் சண்டை தொடங்கீற்றுத்தானே அதால இன்ரநெற் வேலை செய்யேல்லப் போல கருணாகரன் அண்ணை பதில் போடயில்லை ஆனால் கட்டாயம் பதில்போடுவார் நான் போட்டோண்ண சொல்றன். அவர் தான் எதிர்பார்க்காத பதில் வந்ததில் துன்பமுற்றவராக ஒரு புன்னகையை உதிர்த்தார். அவருடைய மனைவி சட்டென்று எதுவும் பேசாமல் எழுந்து உள்ளே போய்விட்டார்.
எனக்குள் குற்ற உணர்ச்சி பெருகியது. என்னை ஒரு கொலைகாரனைப் போல உணர்ந்தேன். கருணாகரன் அண்ணை சொன்னார் என்பதற்காக இவர்களது வீட்டிற்கு வந்திருக்கக் கூடாது. நான் இங்கே வந்திருக்காவிட்டால் அவர்களிற்கு அவர்களது மகனின் நினைவு இவ்வளவு உக்கிரமாய் வந்திருக்காது. நான் கிளிநொச்சிக்காரன் என்பது அவர்களுக்கு அவர்களுடைய மகனது தொடர்பு கிடைக்கும் என்பதற்காக நம்பிக்கைகளை அதிகமாக்கி விட்டது. அவர் எங்களுடைய அமைதியைக் குலைத்தார். என்ன செய்யிற தம்பி இதெல்லாம் ஒவ்வொருத்தற்ற தலை விதி என்றார். நான் அங்கிருந்து வெளிக்கிட முடிவெடுத்தேன். அந்தச் சூழ்நிலை என்னை கலவரப்படுத்தியது அங்கிருந்து விடுபட்டு தலைதெறிக்க ஓட விரும்பினேன். அவர் என்னிடம் தம்பி அடிக்கடி வாங்கோ ஊர்க்காரரைப் பார்க்கிறது ஒரு சந்தோசம் தானே என்று சொன்னார். நான் ஓம் என்று சொல்லிவிட்டு வந்தேன். ஆனால் அங்கிருந்து புறப்படும் போதே இனிமேல் அவர்களைச் சந்திக்கவே கூடாது என்கிற முடிவுக்கு வந்திருந்தேன். என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. கனபரிமாணம் கொண்ட ஈட்டியாய் எனக்குள் சொருகப்படுகிற துயரின் பெரும் வலியை கடப்பது இயலாத காரியமாயிருக்கிறது. அவர்களோடான சந்திப்புக்குப் பின் அவர்களிற்கு துரோகமிழைத்து விட்டேனோ என்கிற குற்றவுணர்வால் மனம் துடித்த படியிருந்தது. அவர் தானும் கடைவரைக்கும் ஒரு அலுவலிருப்பதால் என்னோடு வருவதாய்ச் சொன்னார்.
இருவரும் ஒன்றாகவே அந்த வீட்டை விட்டு வெளியேறினோம். நான் அமைதியாக அவரோடு கூட நடந்தேன். அவர் தம்பி திருவான்மியூர் பீச்சிற்கு வந்திருக்கிறீங்களா என்று கேட்டார். நான் இல்லை என்றேன். நிறைய சிலோனாக்களை சந்திக்கலாம் எண்டு சொன்னார். கடல் எப்பவுமே மனதுக்கு ஆறுதலளிக்கிற விசயம் தானே என்றார். நான் ஆமோதித்தார். எனக்கும் அப்படித்தான் தோன்றியது. கடல் மனிதர்களின் துயரங்களைத் தானே வாங்கிக் கொள்கிறது. கடலிடம் நிரம்பியிருக்கும் வேதனைகள் திமிறத்திமிறி பூமியில் பாய அலையெனத் திமிறிக்கொண்டிருக்கிறது. அவர் வாங்கோவன் இப்டியே கடற்கரைக்குப் போய்ட்டுப் போவம் என்றார். ஆரும் உங்களிற்குத் தெரிஞ்சாக்களும் நிற்பினம் எண்டார்.
நான் அவரோடு எதுவும் பேசாமல் நடந்தேன். கடற்கரையில் மனிதர்கள் கும்பலாக இல்லாத ஒரு இடத்தில் அவர் அமர்ந்தார். கடல் இரைந்து கொண்டிருந்தது. அவர் பேசாமல் அலையை வெறித்துக்கொண்டிருந்தார். நானும் பேசாமல் இருந்தேன். அவர் திடீரென்று சொன்னார் “அவன் உயிரோடு இல்லை எண்டு எனக்குத் தெரியும் தம்பி”. நான் அவர் என்ன சொல்கிறார் என்று புரியாமல் முழித்தேன் சில வினாடிகள். “அவன்ர ஆயுள் அவ்வளவுதான் அவாவும் நானும் அந்தக்காலத்திலயே காதலிச்சுக் கல்யாணம் கட்டினாங்கள் தம்பி. மகன்ர பிரிவால அவா ஒரு நோயாளியாப் போனா அதால தான் நானும் அவன் உயிரோட இருக்கிறான் எண்டு நம்பிற மாதிரிக் காட்டிக்கொள்ளுறன்.” கிழவர் சொல்லிவிட்டு மெளனமானார். நான் சொற்களற்றுச் சிக்கிக்கொண்டேன். அவர் உடல் மெல்லக் குலுங்கிக் கொண்டிருப்பது கடலில் இருந்து கவிந்த மெல்லிய ஒளியில் தெரிந்தது. எல்லாரது துயரையும் கடல் வாங்கிக்கொள்ளும் ஆனால் கடலாலும் வாங்கிக் கொள்ள முடியாத் துயரங்களும் இருக்கின்றன என்று நான் நினைத்துக் கொண்டேன். கரையில் கடல் யாரோ ஒருவனின் துயரத்தை ஓங்கிக் கரையில் அடித்துக் கொண்டிருந்தது…

