ஜேசுதாஸ் ஏன் அழுதார்?
“நா ஆட்டோக்காரன் ஆட்டோக்காரன்
நாலும் தெரிஞ்ச ரூட்டுக்காரன் நல்லா பாடும் பாட்டுக்காரன்” எஸ்.பி.பி சும்மா சக்கை போடு போட்டுக்கொண்டிருந்தார்.பாட்சா படம் வந்தபோது நான் எட்டாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தேன். அப்போது இதுதான் மிகவும் பிரபலமான பாடல் எனக்கு பிடித்த பாடலும் கூட.நான் படத்தை பிறகு நான்கைந்து வருடம் கழித்து தான் பார்க்கமுடிந்தது.
பாட்டுக்களை கேட்பது எப்படி என்றால் அது ஒரு பெரிய புதினம் ஒரு சைக்கிளை கவிட்டுப்போட்டு அதிலிருக்கும் டைனமோவை இயக்கி கிடைக்கும் மின்சாரத்தில் தான் றேடியோ போடுவது. எவ்வளவு வேகமாக சுத்துகிறோமோ அவ்வளவு அதிகமாக மின்சாரம் கிடைக்கும். கூட கரண்ட வந்தால் தான் றேடியோ பெரிசாகப்படிக்கும் இல்லாவிட்டால் ஓய்ங் ஓய்ங்……. என்று இழுபட்டு இழுபட்டு படிக்கும். றேடியோ என்று சொல்வது (2 இன் 1) கசட் பிளேயரும் இருக்கும் கசட்டில பாட்டுப்போட்டா அது ஒரு பிரச்சினை இல்லாமல் படிக்கும் ஆனா ஏதாவது ஸ்ரேசன் பிடிக்க றேடியோவை இயக்கினால். அவ்வளவுதான் ட்ர்ர்ர்ர்ர்ர் ஒரே இரைச்சல் மயம்தான்.
FM என்றால் ஒரே இரைச்சல் மயம் தான். MW என்றால் பரவாயில்லை. நான் எங்கேயாவது விளையாடிக்கொண்டிருப்பேன் எந்த வீட்டு ரேடியோவிலாவது எனக்கு விருப்பமான பாட்டுகள் கேட்டாலும் உடனே வீட்டுக்கு ஓடிச்சென்று அந்த மீற்றரை பிடித்து சவுண்டை கூட்டி விட்டு கேட்பேன்.(எந்த ரேடியோ என்றாலும் என் வீட்டு ரேடியோ போல வருமா என்ன)அம்மா பேசுவா ஏன்ரா இப்பிடி சவுண்டை கூட்டி வைச்சிருக்கிறாய் எண்டு. நான் கேட்டால் தானே பாட்டு முடிய ஒரே ஓட்டம் விளையாட்டுக்கு.
சிலபேர் டைனமோக்கெண்டே ஒரு சில புதிய உபகரணங்களை உருவாக்கத் தொடங்கினார்கள். பழைய சைக்கிள் பார் எடுத்து அதை கட்டையில் இறுக்கு இறுக்கெண்டு இறுக்கி இன்னும் ஏதோதோ செய்து கீழே படத்தில் இருப்பது மாதிரி ஒன்றை செய்து வைத்து ரேடியோக் கேட்டார்கள். அநேகமாக தமிழர் பிரதேச வீடுகளில் றேடியோக் கேட்டது இப்படித்தான்.

ஒளிப்படம் அமரதாஸ்
( வாழும் கணங்கள் புகைப்படத் தொகுப்பிலிருந்து)
எங்களை வீட்ட இருக்கிற ஒலிபரப்பு நிலையமாக கருதிக்கொண்டுதான் எங்கள் பெரியம்மா மாமா க்களின்ர அண்ணாக்கள் மச்சாள் மார் எல்லோரும் நினைச்சினம். அப்பிடியெ மச்சாள் களும் அக்காக்களும் அவையள் மாறி மாறி பேன் பார்த்துக்கொண்டிருக்கும் போது தம்பி இந்தப்பாட்டு ஒருக்கா போடமாட்டியே என்று கேப்பினம் எங்களுக்கு புழுகம் எங்களையும் ஒரு மனுசரா மதிச்சு கேக்குதுகளே எண்டு நாங்களும் மாஞ்சு மாஞ்சு சவுண்டை கூட்டி விட்டு சுத்துவம்.

(ஒளிப்படம் கானாபிரபா)
எங்கட வீட்டதான் அந்த ஏரியாவில் எல்லோரும் குடிதண்ணி அள்ள வருவினம். பெரியம்மான்ர ஜீவன் அண்ணா பக்கத்து வீட்டு பவானி அக்கா தண்ணி அள்ள வரேக்க மட்டும் ஒரு சோகப்பாட்டு கசட்டை குடுத்து இதைப்போடு தம்பி என்று சொல்லுவார். பாட்டுகளில் ஜேசுதாஸ் அழுவார் “ஏலேலங்கிளியே என்னைத்தாலாட்டும் இசையே” என்று. எனக்கு ஏன் அண்ணா இப்பிடிச் செய்யிறார் என்று விளங்கவில்லை. இருந்தாலும் ஏதோ விசயமிருக்கு எண்டு நினைச்சு ஒரு நாள் போடமாட்டேன் என்று ஸ்ரைக் பண்ணினேன். அவர் டக்கெண்டு காமதேனுவுக்கு கூட்டிக்கொண்டு போறன் எண்டு சத்தியம் பண்ணினார். எனக்கு யார் எப்பிடிப்போனா என்ன காமதேனு தானே முக்கியம் (ம் அப்ப காமதேனு மட்டும் தான் வன்னியில் இருந்த ஒரே ஒரு கூல்பார்) அதை விட யாருக்கும் மனம் வருமே. எனக்கு ஜஸ்கிரீம்தான் முக்கியம். ஜீவன் அண்ணாக்கு பவானி அக்கா என்ன செய்ய… சைக்கிளை கவுட்டுப்போட்டு சுத்தும் போது இப்பிடி சில நல்ல விசயங்களக்கு உதவியிருக்கிறம் எண்டு நினைக்கும் போது பெருமையாக் கிடக்கு (சீ என்னை அப்பிடி கேவலமாப் பாக்காதேங்கோ)
அப்போதெல்லாம் வீட்டிலிருக்கும் பெரியவர்கள் எல்லாச்செய்திகளும் கட்டாயம் கேட்பார்கள். நாட்டு நிலைமை அப்படி அதிகமாக லண்டன் பி.பி.சி. வெரித்தாஸ் போன்ற வானொலிகள் அதிகம் கெட்கப்படும். இரவு 7.30 வெரித்தாஸ் வானொலியில் நிகழ்ச்சிகள் தொடங்கும் என்று நினைக்கிறேன். இப்போது இளையராஜாவுடன் சேர்ந்து திருவாசகம் இசையமைப்பு பணிகளில் இயங்கினாரே ஜெகத் கஸ்பார் அடிகளார் அவர்தான் வெரித்தாஸ் வானொலிக்கு பொறுப்பாக இருந்தார். தமிழர் தரப்பு நியாயங்களை உலகிற்கு சொன்னதில் வெரித்தாசின் பங்கு குறைவில்லாதது என்றே சொல்ல வேண்டும். அந்த வானொலியையும் நாங்கள் சைக்கிளை கவிட்டுப்போட்டு சுத்தியே கேட்டோம். வெரித்தாஸ் வானnhலி தனது வெள்ளி விழாவை யொட்டி போட்டியே நடத்தியது. சைக்கிளில் சுத்தி றேடியோ கேட்பது மாதிரி புகைப்படம் எடுத்து அனுப்பும் படி வெரித்தாஸ் வானொலி போட்டி வைத்தது.
இப்படித்தான் நாங்கள் எல்லாவற்றையும் கேட்டோம் 1994 ல் சந்திரிகா எனக்கு நினைவு தெரிந்த பிறகு முதல்முதலாக இலங்கையில் சமாதானம் என்று பேசிக்கொண்டு தேர்தலில் நின்றார். நாங்கள் அப்போது சந்திரிகா ஆட்சிக்கு வரவேண்டும் என்று வைக்காத நேத்தியெல்லாம் வைத்தோம் சந்திரிகாவுக்கு எதிராக நின்ற காமினி திசநாயக்கா தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் குண்டு வைத்து கொல்லப்பட்டார். தேர்தலன்று இரவு டைனமோவை சுத்தி சுத்தி தேர்தல் முடிவுகளை கேட்டுக்கேட்டு ஒரு கொப்பியில் குறித்துக்கொண்டிருந்தேன் சந்திரிகாவின் கட்சி எந்தந்த மாவட்டங்களில் எவ்வளவு ஒட்டு வித்தியாசத்தில் ஜெயித்தது என்பதையும் மொத்தமாக நாட்டில் எவ்வளவு ஒட்டு அவர்களுக்கு அதிகமாக கிடைத்தது என்பதையும் நான் எழுதிக் குறித்து வைத்தேன். பிறகு நான் பாதுகாத்து வைத்த அந்தக் கொப்பியையும் விட்டு விட்டு ஓடும்படி சந்திரிகாவே செய்தார். நாங்கள் ஊரை விட்டு ஓடினோம்.
1996 ல் சந்திரிகா சமாதானம் என்று சொல்லிக்கொண்டிருந்த காலத்தில் எனக்கு நினைவு தெரிந்த நாளில் முதல் முதலாக இலங்கை வானொலி தமிழில் கிரிக்கெட் நேர்முக வர்ணணை செய்தது. அரவிந்த டீ சில்வா லாகூரில் அவுஸ்ரேலியர்களை பின்னியெடுத்தபோது முரளி முறித்துக்கொட்டியபோது அர்ஜூன ரணதுங்க உலகக் கிண்ணத்தை எந்தி புன்னகைத்தபோது நான் சைக்கிளை கவிழ்த்துப்போட்டு சுற்றிக்கொண்டிருந்தேன்.
ஒவ்வொரு சிக்சருக்கும் சுற்றல் வேகமெடுக்கும் . அவுட்டென்றால் கை ஓய்ந்து போகும் மறுபடியும் யாராவது வாணவேடிக்கை நிகழ்த்த கை வெகமெடுக்கும் றேடியோவின் வழியாக லாகூரை காதுக்குள் கொட்டிக்கொண்டிருந்தார் எழில்வேந்தன். என் எதிரே வெறித்த படி இருந்த ஜன்னல் காணமல் போய் அப்டியெ மைதானமாகி டீ சில்வா நானாகி அப்டியே சிக்சரும் பவுண்டரிகளுமாய் கனவுகள் விரிய அப்பிடியே ஒய்ங்.. ஒய்ங்.. என்று குரல் இழுபட்டு தேய்ந்து கொண்டிருப்பார் எழில் வேந்தன். அடுத்தநாள் எல்லாரும் தென்னை மட்டைகளை சீவிக்கொண்டு கிரிக்கெட் ஆட கிளம்பிவிடுவோம்.
இப்படி சைக்கிளை கவிழ்த்துப்போட்டு சுற்றி றேடியோக் கேட்ட அனுபவம் மைதானம் வரை விரியும். ம் இப்போது மறுபடியும் சமாதானம் வந்து மின்சாரம் வந்து இணையம் வந்து எவ்வளவு வசதியாக இருந்தம். ஒரு நாலுவருசம் தான் இப்ப மறுபடியம் பொருளாதாரத் தடை கரண்ட இல்லை எனக்கு ஒரே யோசினையாகக் கிடக்கு மறுபடியும் சைக்கிளைக் கவுட்டுப்போட்டு சுத்த வேண்டி வருமோ என்று….
த.அகிலன்

October 25th, 2006 at 3:30 pm
அகிலன் உங்கடை எழுத்து எனக்கு மீளவும் என்னுடைய ஆரம்ப கால வலைப்பதிவு எழுத்துக்களையும் வசந்தனின் எழுத்துக்களையும் நினைவு படுத்துகின்றன. ஏதேது.. நீங்களும் வசந்தனும் ஒண்டு தான் எண்டும் சிலநேரம் ஆரும் சொல்லுவினம்..
October 25th, 2006 at 6:53 pm
//பெரியம்மான்ர ஜீவன் அண்ணா பக்கத்து வீட்டு பவானி அக்கா தண்ணி அள்ள வரேக்க மட்டும் ஒரு சோகப்பாட்டு கசட்டை குடுத்து இதைப்போடு தம்பி என்று சொல்லுவார்//
ஜீவன் அண்ணா இந்தப் பதிவைப் பார்க்க மாட்டார் என்ற நம்பிக்கை இருக்குப் போல
துயரத்துள் வாழ்ந்த அனுபவத்தை நகைச்சுவையுடன் பதிவு செய்திருப்பது அருமையாக உள்ளது.
October 25th, 2006 at 10:57 pm
hi akilan unkada kanavukal super super. enahu kadanthha kalamum unkalaal gpakam vanthathu. thanks. im very happy.thodarththu eahir paarkirom. elathugnkal………….thanks s.b.m.vazanth. madhu.manner.
October 26th, 2006 at 12:50 pm
வழக்கம் போல் நம்மூர் நினைவுகளைத் தந்திருக்கிறீர்கள், நன்று.
டைனமோப் படத்துக்கு நன்றி போட்டது போல் ஜேசுதாஸ் படத்துக்குப் போடக் கஷ்டமாக இருக்குப் போல:-)
October 27th, 2006 at 6:32 am
நன்றி கானா பிரபா அண்ணா இப்ப ஓகே தானே என்ன.
அன்புடன்
த.அகிலன்
October 27th, 2006 at 7:31 am
//1993 ல் சந்திரிகா எனக்கு நினைவு தெரிந்த பிறகு முதல்முதலாக இலங்கையில் சமாதானம் என்று பேசிக்கொண்டு தேர்தலில் நின்றார்.//
That is end of 1994.
October 27th, 2006 at 9:39 am
when the going gets tough, the tough gets going என்று ஆங்கிலத்தில் சொல்வார்கள். அதன்படி வேறுவழியே இல்லை என்று நினைத்த பொழுதிலும் எப்படியாவது ஒரு வழி கண்டுபிடிக்கவே வேண்டும் என்ற வேகம் வரும். அந்த வேகத்தில்தான் அதுவரை பயன்படாதவை கூடச் சிறப்பாகப் பயன்படும். அதுதான் இங்கும் நடந்திருக்கிறது. அதை அழகாகச் சொல்லியிருக்கின்றீர்கள்.
சைக்கிள் டயர் பக்கத்தில் அமர்ந்திருப்பது நீங்களா?
October 27th, 2006 at 4:48 pm
சும்மா வேடிக்கைக்காகத் தான் கேட்டனான்,குறை விளங்காதையும்:-) போடாட்டாலும் ஒன்றுமில்லை.
October 28th, 2006 at 6:56 am
//கானா பிரபா said…
சும்மா வேடிக்கைக்காகத் தான் கேட்டனான்,குறை விளங்காதையும்:-) போடாட்டாலும் ஒன்றுமில்லை.//
ம் இதிலென்ன குறை நான் சின்னப்பையன் அப்பப்ப குட்டவேண்டியது உங்கள் கடமைதானே பிரபா அண்ணா
அன்புடன்
த.அகிலன்
October 28th, 2006 at 9:00 am
டைமமோ சுத்தி வானொலி கேக்கிறது, ஜாம் போத்தல் விளக்கு என்பன இல்லாமல் எங்கள் வாழ்க்கையில் ஒரு தசாப்தம் இல்லை.
கூடவே இரட்டைச் சூட்டடுப்பையும் சேர்க்கலாம்.
சயந்தன்,
உப்பிடி புரளி கிழப்பியே கொஞ்சக்காலம் ஓட்டியாச்சு. இனியுமா?
October 28th, 2006 at 10:29 am
//சயந்தன்,
உப்பிடி புரளி கிழப்பியே கொஞ்சக்காலம் ஓட்டியாச்சு. இனியுமா? //
ம் சயந்தன் ஏதாவது பதில் சொல்லுங்க?நான் என்ன சொல்லலாம் என்று யோசித்துக்கொண்டிருந்தேன்.
அன்புடன்
த.அகிலன்
November 4th, 2006 at 8:45 am
கண் கலங்கிவிட்டது அகிலன்.
November 19th, 2006 at 8:22 pm
நன்றிகள் அகிலன் என் பழைய நினைவுகளை மீட்டித்தந்ததற்கு, நாமும் டைனமோசுத்தித்தான் உலகக்கிண்ணம் பார்த்தது. என்னதான் சிங்களவன் குண்டுபோட்டாலும் அதனுடன் வாழப்பழகிய ஊரடங்கு வாழ்க்கை மறக்கமுடியாது, கிளிநொச்சி கொத்து ரொட்டிக்கடைச் சத்தமும் மறக்கமுடியாது.
கொழும்பிலிருந்து வந்தியத்தேவன்
December 9th, 2006 at 1:22 pm
உங்களது எழுத்து வீச்சு அபாரமாக இருக்கிறது அகிலன்..
சம்பவங்களை வர்ணிக்கும் விதம் கவர்கிறது.
காதலுடன்
ராஜா
June 23rd, 2007 at 3:20 pm
dear agilan,
i agree u r a good commercial writer. is my first exp. with ur writing.,
congrats
by,
arun.a
June 26th, 2007 at 11:36 am
அகிலன் சின்ன வயதில் பெரிய கானபிரபா அண்ணா போன்ற அண்ணாக்களுக்கு பின்னால பழைய டைனமோக்களை தூக்கிகொண்டு போன 90 ஆம் நினைவுகள் எனக்கு நிரைய இருக்கு.அண்ணாமாரிட்ட பழைய டனைமோக்களைக் குடுத்தால் ஏதோ செய்து இயங்க வைப்பினம்.
உண்மையில உங்கட எழுத்தில் எமது அவல அனுபங்கள் அருமையா இருக்கு.அதுசரி சயந்தன் கடசியில நகைச்சுவைப் பதிவர் ஆன மாதிரி நீங்களும் போயிடாமல் தீவிர எழுத்துகளையும் பயனுள்ள விதத்தில தரவேணுமெண்டு மலைநாடன் அங்கள் சொல்லுறான்.உங்கட பதிவில எவ்வளவு நகைச்சுவை சேர்கோணும் எண்டு மலை அங்கிளிட்ட கேட்டு செய்யுங்கோ.
May 15th, 2008 at 9:10 am
[...] என் ஆரம்ப நாள் பதிவுகளில் ஒன்றான யேசுதாஸ் ஏன் அழுதார் என்கிற பதிவில் குறிப்பிட்டு [...]