ஹலோ!
வணக்கம் யார் இது.
நான் சாவகச்சேரியில் இருந்து ஞானதிரவியம் கதைக்கிறன்.
உங்களை திரவியம் எண்டு கூப்பிர்றதோ ஞானம் எண்டு கூப்பிர்றதோ?
ஹி ஹி ஹி அது உங்கட விருப்பம்.
ஆ திரவியம் சொல்லுங்கோ யாருக்கு வாழ்த்துச் சொல்லப்போறீங்க?
போனமாசம் 4ம் தேதி என்ர மச்சாளுக்குப் பிறந்தநாள் அவாக்கு வாழ்த்துச் சொல்லவேணும் அவாக்காக கல்யாணந்தான் கட்டிக்கிட்டு ஓடிப்போலாமா எண்ட பாட்டுப் போடுங்கோ
யார் யாரெல்லாம் கேக்கிறீங்க..
மச்சாள் அன்னபூரணி அவான்ர தங்கச்சி கோமளவல்லி சித்தப்பா டூ….ட் டூ….ட்.
இதோ ஞானதிரவியத்திற்காக அவர்விரும்பிக் கேட்வர்களுக்காககவும் அந்தப்பாடல்…..

உரையாடலின் இடையில் அறிவிப்பாளர் அடிக்கடி இதைச் சொல்லுவார். உங்கட வானொலிப் பெட்டியின் சத்தத்தை குறைச்சு வையுங்க ( வால்யூமைக் கம்மி பண்ணுங்க)…… குறைக்காட்டி கட் பண்ணிருவன்……(இந்த இடைவெளி அவசியம் விடப்படும்); லைனை.

எவ் எம் றேடியோக்களின் இவ்வாறான உரையாடல்களால். நிம்மதியாக பாரில் உட்கார்ந்து தண்ணி அடிக்கக் கூட முடியவில்லை என்று யாரோ ஒருவருடைய பதிவில் படித்ததாக நினைவு. யாருக்குத்தான் கடுப்பாகாது. இப்படியான வெறுப்பேற்றும் உரையாடல்களை எத்தனை மணிநேரம் தான் தொடர்ச்சியாக கேட்டுக்கொண்டிருக்க முடியும். இது போதாதென்று போன் பண்ணுகிறவர்களில் பலபேர் தாங்கள் பாட்டுப்படித்து விட்டுத்தான் போவேம் என்று அடம்வேறு. வானொலிகள் நேயர்களைக் கட்டிப்போட்டிருந்து காலம் என்றொண்டுண்டு.

நான் சென்னைக்கு வந்ததும் என்னைச் சந்திக்கிற நண்பர்கள் யாரும் இலங்கை வானொலியையும் அதன் அறிவிப்பாளர்களைப் பற்றியும் பேசாமல் இல்லை. அவ்வளவு தரமான நிகழ்ச்சிகளை அவர்கள் வழங்கிக்கொண்டிருந்தார்கள் அதனால்தான் இவ்வளவு காலம் அந்த அறிவிப்பாளர்களால் கடல்கடந்தும் நினைவில் நிற்க முடிகிறது. இப்போதிருக்கிற வானொலிச் சூழல் குறிப்பாக இலங்கையில் எப்படியிருக்கிறது என்பது குறித்து தனது கருத்துக்களை எங்களோடு பகிர்ந்து கொண்டார் இலங்கைவானொலியின் மூத்த ஒலிபரப்பாளர் எஸ். எழில் வேந்தன். இவரைப் பற்றி என் ஆரம்ப நாள் பதிவுகளில் ஒன்றான யேசுதாஸ் ஏன் அழுதார் என்கிற பதிவில் குறிப்பிட்டு எழுதியிருக்கிறேன். நண்பர்கள் அதையும் படிக்கலாம். இனி அவருடனான உரையாடல்.

Photobucket

1. அறிவிப்பாளராக ஆகும் வரையான எழில் வேந்தன் பற்றிய குறிப்புகள்?

கிழக்கிலங்கையில், மட்டக்களப்பு – கல்முனை பிரதான வீதியில் மட்டக்களப்பிலிருந்து 22 மைல் தொலைவிலுள்ள ஒரு சிறு கிராமம் பெரிய நீலாவணை. பெரிதாக அறியப்படாத கிராமம். அதுவே என் தந்தையின் ஊர். நான் பிறந்து வளர்ந்தது இங்குதான். என் ஊர் அப்போது பெரிதாக அறியப்பட்டிருக்கவில்லை. (அண்மையில் ஏற்பட்ட சுனாமியின்போது அதிக அழிவைச் சந்தித்ததால் இவ்வூர் சற்று அதிகம் பேசப்பட்டது வேறு கதை). ஊரின்மேல் கொண்ட பற்றுக் காரணமாக “நீலாவணன்” என்று பெயர் சூட்டிக்கொண்ட கே.சின்னத்துரை என் தந்தை. தாயார் அழகேஸ்வரி என அறியப்பட்ட அழகம்மா. இருவரும் ஆசிரியத் தொழில் பார்த்தவர்கள். இவர்களின் காதல் மணத்தின் அறுவடையாகக் கிடைத்த ஐந்து பிள்ளைகளில் தலைச்சன் பிள்ளை நான். மூன்று தங்கைகள். ஒரு தம்பி. தம்பி வலது குறைந்தவன்.

அம்மாவின் ஊரான பாண்டிருப்பில் உள்ள நாவலர் வித்தியாலயத்தில் ( அப்போது அது பாண்டிருப்பு அரசினர் மெதொடிஸ்த பாடசாலை என அழைக்கப்பட்டதென நம்புகிறேன்) பாலர் கல்வி. பின்னர் சொந்த ஊரான பெரியநீலாவணையில் உள்ள இரு பாடசாலைகளில் ஆரம்பக் கல்வி. தொடர்ந்து மட்டக்களப்பு சிவானந்த வித்தியாலயம், மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரி ஆகியவற்றில் இடைநிலை மற்றும் உயர் கல்வி. இதுவே என் இளமைக்காலம். எல்லோரையும் போலப் பாடசாலை நாட்களில் நாடகம், கலை நிகழ்ச்சிகள், போட்டிகளில் கலந்து கொண்டதும், பரிசுகள் பெற்றதும் உண்டு.

மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரியின் உயிரியல் விஞ்ஞான மன்ற உருவாக்கத்தில் ஒருவனாய் இருந்தேன் என்பதும் இம்மன்றத்தின் சார்பில் வெளியிடப்பட்ட “உயிர்” என்ற கல்விச் சஞ்சிகையின் முதல் ஆசிரியர் என்பதும் சற்றுப் பெருமையான விஷயங்கள்.

பள்ளியில் படித்த காலத்திலேயே தந்தையார் 1975ல் மரணமடைந்துவிட உயர்தரப் பரீட்சை எழுதுவதற்கு 4 மாதம் இருந்த வேளையில் “எக்ஸ் கதிராளர்”அதாவது “Radiographer” தொழில் வாய்ப்புக் கிடைத்து கொழும்பு வருகை. கொழும்பில் பேராசிரியர் மௌனகுரு மூலம், நாடக இயக்குனர் தாசீசியஸ் அவர்களின் அறிமுகம் கிடைக்க, அவரின் தயாரிப்பில் உருவான கவிஞர் மஹாகவி மாமாவின் “புதியதொரு வீடு” மேடை நாடகத்தில் சிறு பாத்திரத்திலும், தொடர்ந்து நா. சுந்தரலிங்கம் அவர்களின் இயக்கத்தில் “விழிப்பு” மேடை நாடகத்தில் சிறு பாத்திரத்திலும் நடிக்கும் வாய்ப்புகள் கிடைத்தன. அரங்க ஆற்றுகையில் துறை போன இருவரின் நெறியாள்கையில் நடித்த அனுபவமே, 1977 தேசிய நாடக விழாவில் இடம்பெற்ற எஸ். சித்திரவேலின் “செவ்வானத்தில் ஒரு “ என்ற நாடகத்தில் முக்கிய பாத்திரமொன்றில் நடிக்கும் தைரியத்தையும், நாடக இயக்கத்தில் துணை செய்யும் துணிவையும், தலை சிறந்த துணை நடிகர் என்ற விருதையும் தந்தது.

இக்காலத்தில்தான் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தினூடு எஸ்.வாசுதேவன் தொகுத்தளித்த “சங்கநாதம்” – இளைஞர் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் வாய்ப்பும் கிடைத்தது. இதுவே என் வானொலிப் பிரவேசத்தின் பிள்ளையார் சுழி. ஒலிபரப்பாளரும் நடிகருமான ஜோக்கிம் ஃபெர்ணாண்டோவின் “இருட்டினில் குருட்டாட்டம்” மேடை நாடகத்தில் நடிக்கும் வாய்ப்புக் கிடைத்ததும், நாடகத்தின் கருப்பொருள் காரணமாக இரகசியப்பொலிசாரின் விசாரணைக்கு ஆளானதும் இக்காலகட்டத்தில்தான்.

“சங்கநாதம்” நிகழ்ச்சியின்மூலம், பாடகர்கள் ரீ. கிருஷ்ணன், எஸ்.சத்தியமூர்த்தி ஆகியோரின் அறிமுகம் கிடைத்தபோது அவர்களின் “மெல்லிசைப்பாடல் – அரங்கேற்றம்” நிகழ்ச்சிக்கு பாடல்கள் எழுதிக் கொடுத்ததால் ஒரு பாடலாசிரியரானேன். ஒலிபரப்பாளர் அருணா செல்லத்துரையின் அறிமுகம் இதன்போதே கிடைத்தது.”சூரியா ரெக்கொர்ட்ஸ்” உரிமையாளராக இருந்த பொப் பாடகர் “ஷண்”ணின் அரங்கேற்றம் நிகழ்ச்சிக்கு, அருணா செல்லத்துரையின் அறிமுகத்தின் காரணமாக, பாடல் எழுதுகின்ற வாய்ப்பும், ஷன் தன் கையால் கொடுத்த 500ஃஸ்ரீ ரூபாய் சன்மானமும் (என் மாதச் சம்பளமே அக்கால கட்டத்தில் 450ஃஸ்ரீ ரூபாதான்) கிடைத்ததும் அப்போதுதான். என் எழுத்துக்கு முதன்முதலில் கிடைத்த “சன்”மானம் “ஷன்” மூலமே கிடைத்தது. இக்கால கட்டத்தில்தான். வானொலிக்கலைஞர் தெரிவில் கலந்துகொண்டு கிழக்கு மாகாணப் பேச்சு வழக்கில் ஒலிபரப்பாகும் நிகழ்ச்சிகளிலும் உரைச்சித்திரம் நிகழ்ச்சிகளிலும் கலந்துகொள்ளும் ஒரு வானொலிக் கலைஞனென்ற தெரிவையும் அங்கீகாரத்தையும் பெற்றேன். இவையெல்லாம் நடக்கும்போது நான் வானொலி ஊழியன் அல்லேன்.

2. வானொலி என்கிற ஊடகம் எப்படி பயன்படுத்தப் பட வேண்டும்? இப்போது அது அவ்வாறு கையாளப் படுகிறதா?

வானொலி என்பது ஒரு விரிந்த ஊடகம். அது விரைவாக மக்களைச் சென்றடையக் கூடியது. தொலைக்காட்சிபோல எங்களை கட்டுக்குள் வைத்திருக்கும் ஓர் ஊடகமல்ல. தொலைக்காட்சியை நெருக்கமான ஊடகம் (ஊடழளந ஆநனயை) என்பார்கள் இன்றைக்கு ஒருசில ரூபா செலவிலேயே ஒரு வானொலிப்பெட்டியை நாம் வாங்கிவிடலாம். வானொலிப்பெட்டியை உற்றுப் பார்க்காமலே, எந்த வேலையைச் செய்து கொண்டும் நாம் வானொலியைக் கேட்கலாம். அதேபோல் ஒரு கையடக்கத் தொலைபேசியை வைத்துக்கொண்டே வெளிக்களத்திலிருந்து ஒரு நேர்முக வர்ணனையை அல்லது ஒரு கலந்துரையாடலை ஒலிபரப்பிவிடலாம். இத்தகைய உன்னத சாதனத்தை வெறும் பாடல் ஒலிபரப்பும் சாதனமாகப் பயன்படுத்துவதில் எனக்கு உடன்பாடில்லை. முன்னர் நான் சொன்னதுபோல வானொலியை அறிவூட்டும், தகவல் தரும், களிப்பூட்டும் ஒரு சாதனமாகப் பயன்படுத்தவேண்டுமே தவிர, பாடல்களுடன், தமிழ்த் திரைத் தாரகைகள் தினமும் எத்தனை மணிக்குக் காலைக் கடன் கழிப்பார்கள் அல்லது கடைசியாக அவர்கள் எப்போது காலைக் கடன் கழித்தார்கள் என்பன போன்ற சங்கதிகளை எமக்கு அறிவிக்கும் சாதனமாக அதைப் பயன்படுத்தக்கூடாது. நடிகர் ஒருவருக்குப் பிறந்திருக்கும் குழந்தைக்கு என்ன பெயர் வைப்பார்கள் என்று கருத்துக்கணிப்புப் போட்டி நடத்திய வானொலிகளையும் நாம் கண்டிருக்கிறோம். நாம் அத்தகைய ஒரு காலகட்டத்தில் வாழ்ந்தோம் என்பதை அவமானத்துடன் பதிவு செய்கிறேன்.

3. தமிழ் வானொலிச் சூழல் பற்றி தங்களுடைய தற்போதைய அவதானிப்புக்கள் இலங்கை அளவில் என்னவாயிருக்கிறது? அதோடு உலகளாவிய ரீதியில் எதுவாயிருக்கிறது?

இலங்கையின் தமிழ் வானொலிச்சூழல் தற்போது மிகுந்த கவலைதரும் ஒன்றாகவே மாறிவிட்டது. வானொலி நிலையங்கள் தம் பிரதான பணிகளான அறிவூட்டல், தகவல் தருதல், களிப்பூட்டல் என்ற நிலையிலிருந்து விலகி தனியே களிப்பூட்டிக்கொண்டிருக்கின்றன. இன்று இலங்கையில் வானொலிகள் தென் இந்தியத் திரை உலகப் பிரமுகங்களின் பிறந்தநாளை யார் சிறப்பாகக் கொண்டாடுவது என்பதில் போட்டி போட்டுக் கொண்டு செயலாற்றுகின்றன. அவை தென் இந்திய அல்லது இந்தியத் திரைத் தகவல் களஞ்சியங்களாக மாறிவிட்டன. மட்டுமன்றி தென்னிந்தியச் சஞ்சிகைகளின் வாசிப்பு அரங்காகவும் மாற்றம் பெற்றுவிட்டன. மொழி, உச்சரிப்பு, என்பவை தொடர்பான எவ்வித பிரஞ்ஞையுமின்றி, ஒலிபரப்பாளர்கள் தாம் நினைத்ததை நினைத்தபடி பேசிவிட்டுப் போகும் ஒரு நிலை தோன்றிவிட்டது. அண்மையில் ஓர் அறிவிப்பாளர் “ அம்மா என்றாலே நிறைய வரும். கொட்டிக்கொண்டு வரும்” என்றார். எது வரும்? எது கொட்டும்? எனச் சொல்லுவார் எனக் கேட்டுக்கொண்டேயிருந்தேன். அவரும் சொல்லவில்லை. நானும் இன்றுவரை யோசித்துக் கொண்டேயிருக்கிறேன். இது ஓர் உதாரணம். இன்னுமோர் ஒலிபரப்பாளர் ஒரு பெண் நேயரிடம் “உங்களுக்கு எத்தனை பிள்ளைகள்?” எனக்கேட்கிறார். நேயரும் “ஒரு பிள்ளை. ஒரே மகன்” என்கிறார். ஒலிபரப்பாளரின் அடுத்த கேள்வி “ உங்களுக்குத் திருமணமாகி விட்டதா?” . எனக்கோ பலத்த சந்தேகம். கர்ணனின் தாயார் குந்திதேவியுடனா இந்த அறிவிப்பாளர் உரையாடிக்கொண்டிருக்கிறார் என்று. இப்படிப் பல உதாரணங்களைச் சொல்வேன்.

அடுத்தது, புதிய பாடல் ஒலிபரப்பும் போட்டி. புதிய பாடலொன்றை ஒலிபரப்பிவிட்டு இந்தப் பாடலை முதலில் ஒலிபரப்பியது நாமே என்றோ இப்பாடலை ஒலிபரப்பும் உரிமை எமது நிலையத்துக்கு மட்டுமே உண்டு என்றோ அபத்தமாகக் கூறும் நிலை தற்போது தோன்றியுள்ளது. இப்பாடலை எழுதிய கவிஞரோ, இசையமைத்த இசையமைப்பாளரோ, பாடிய பாடகரோ, பாடல் காட்சியை இயக்கிய இயக்குனரோ, இவர்கள் அனைவருக்கும் அப்பால் கந்து வட்டிக்கு கோடி கோடியாகக் கடன் வாங்கிப் படத்தைத் தயாரித்த தயாரிப்பாளரோ கூட இந்தப் பாடலுக்கு இத்தனை உரிமை கொண்டாடுவார்களா தெரியாது. இத்தனைக்கும் இப்பாடல் இணயத்திலிருந்து தரவிறக்கப்பட்டிருக்கும்; அல்லது ஒரு 80ஃஸ்ரீ ரூபா செலவில் வாங்கப்பட்ட திருட்டு இறுவட்டிலிருந்து ஒலித்திருக்கும். பாடல் ஒலிபரப்புவதற்காக உரிமத்தொகை ஒன்றுள்ளது என்பதைக் கூட இவர்கள் அறிந்திருக்க மாட்டார்கள்.

இன்னும் சொல்வேன். எழுவாய் பயனிலை இல்லாத வசனங்களும் பன்மையில் ஆரம்பித்து ஒருமையில் முடியும் வசனங்களும் தாராளமாகவே காற்றலை ஏறுகின்றன. ல, ள, ழ பேதங்கள் கிடையாது. ன, ண, ந வித்தியாசம் தெரியாது. சுசந்திகா என்பது சுசன்திகா என்றே எழுதப்படுகிறது;வாசிக்கப்படுகின்றது.’ ந் ‘, ‘ற்’ போன்ற எழுத்துக்கள் தமிழில் இருப்பதே சிலருக்குத் தெரியாது. இது இவ்வாறிருக்க குற்றியலுகர, இகரங்கள் பற்றியெல்லாம் இவர்கள் தெரிந்து வைத்திருப்பார்கள் என்று எதிர்ப்பார்ப்பது அதிகப்படி. பேசப்படும் சொற்களில் 50%ற்கும் அதிகமானவை ஆங்கிலச் சொற்களாகவே உள்ளன. அதுவும் பொருத்தமற்ற இடங்களில் ஆங்கிலச்சொற்கள் வலிந்து கலக்கப்படுகின்றன. ஊரில் பாட்டிமார் பழமொழியொன்று சொல்வார்கள் “காகம் அன்னநடை நடக்கப் போய் தன்னடையும் கெட்டதென”. அதன் பொருளை இப்போது நேரில் காண முடிகின்றது. இந்தியத்தமிழ் பேச முயன்று அது இந்தியத் தமிழுமின்றி இலங்கைத் தமிழுமின்றி ஒரு புதிய “இலந்தியத் தமிழ்” உருவாகி கர்ண கடூரமாக ஒலித்துக் கொண்டிருக்கின்றது. இலங்கையில் வானொலிகளை இவ்வாறு புலம்பிக் கொண்டுதான் கேட்கவேண்டியுள்ளது. அதனால் இப்போதெல்லாம் நான் வானொலி கேட்பது குறைவு.

மாறாக புலம்பெயர்ந்த நாடுகளில் எம் ஒலிபரப்பாளர்கள் எவ்வித சமரசங்களும் செய்துகொள்ளாமல் இன்றும் நல்ல வானொலி நிலையங்களை நடத்திக் கொண்டுதான் உள்ளனர். இங்கிலாந்து, ஜேர்மனி,ஃப்ரான்ஸ், நோர்வே போன்ற ஐரோப்பிய நாடுகளிலும், அவுஸ்திரேலியா, கனடா போன்ற தேசங்களிலும் நல்ல தமிழ் வானொலி நிலையங்கள் ஒலிபரப்பைச் செய்கின்றன. இலங்கை இனப் பிரச்சினை எமக்கு எத்தனையோ பாதிப்புகளை ஏற்படுத்தியிருந்தாலும் இன்று உலகெங்கும் நல்ல தமிழ் ஒலிக்கவும் வழி வகுத்துவிட்டது. தமிழ் நாட்டு வானொலிகள் பற்றி நான் ஒன்றுமே கூறவரவில்லை . தமிழ் தொலைக்காட்சிகள்மீது சுமத்தப்படும் அத்தனை குற்றச்சாட்டுகளையும் இவர்கள்மீதும் சுமத்தலாமா தெரியவில்லை.

மொத்தத்தில் என்னைப்பொறுத்தவரையில் தனியார் வானொலிகளின் வருகையென்பது தமிழ் மொழிக்கு ஏற்பட்ட சாபக்கேடு என்றே கூறுவேன். ‘வானொலி முதலாளிகளின்’ சுய விருப்பு வெறுப்புகளுக்குத் தீனிபோடும் கருவிகளான் இந்த வானொலிகள், தமிழ் மொழிக்கு வெகு விரைவில் பாடை கட்டிவிடுமோ என அஞ்சுகிறேன். ஒரு சில நல்ல, திறமையான ஒலிபரப்பாளர்களும் இந்த வலையில் சிக்கிக்கொண்டு வெளியேற முடியாமல் தவிப்பதுதான் இதில் வேதனையான விஷயம்.

4. மொழி குறித்தான பிரக்ஞை இப்போது இருக்கிற இளந் தலைமுறை அறிவிப்பாளர்களிடம் இருக்கிறதா? ஒரு அறிவிப்பாளருக்கு அது எந்த அளவுக்கு இருக்க வேண்டும்?

ஒருசிலரைத்தவிர ஏனையோரிடம் இல்லை என்றே சொல்வேன். ஒருமை – பன்மை , இறந்த காலம் – நிகழ்காலம்- எதிர்காலம், ல-ள-ழ- அல்லது ன-ண-ந வேற்றுமை என்ற தமிழ்மொழியின் மிக அடிப்படை அறிவில்லாதவர்களே இன்று பெரும்பாலான வானொலிகளில் பணியாற்றுகின்றனர். சொல் வளம் இல்லாமல் சொற்களுக்கு தட்டுப்பாடு ஏற்படும்போது ஆங்கிலச் சொற்களைக்கொண்டு இட்டு நிரப்புகின்றனர். ‘Quick காச் சொல்லுங்கோ” “ஆருக்கு dedicate பண்ணுறீங்கள்” என்பதெல்லாம் இப்போது தமிழ் வானொலிகளில் சர்வசாதாரணம். ‘Hello’, bye, ‘jolly’ என்பனவெல்லாம் தமிழ்ச் சொற்களாகவே ஆகிவிட்டன.

மொழி தொடர்பான சந்தேகங்களைத் தீர்க்க வானொலி கேட்கலாம் என்றிருந்த காலம் போயே போய் விட்டது. தன் சொந்த மொழியில் (அதற்குத் தாய் மொழி என்று வேறு பெயரும் சூட்டிக் கொண்டு) சரளமாக, சரியான உச்சரிப்புடன் அறிவிக்க முடியாதவருக்கெல்லாம் ஏன் அறிவிப்பாளர் தொழில்? இப்போது அறிவிப்பாளருக்குத் தேவையான அடிப்படைத் தகுதி தொலைபேசியில் அபத்தமாக உரையாடத் தெரிந்திருத்தல் மட்டுமே. என்னிடம் ஓர் ஆசிரியை ‘ஆயிரத்தித் தொளாயிரத்தி அறுபத்தி நாலு’ என்பது சரியா? அல்லது ‘ஆயிரத்துத் தொளாயிரத்து அறுபத்து நான்கு’ என்பது சரியா? என எழுதிக்கேட்டிருந்தார். காரணம், ஓர் அறிவிப்பாளர் ‘ஆயிரத்தித் தொளாயிரத்தி அறுபத்தி நாலு’ என்று அறிவித்ததைக் கேட்ட தன் மாணாக்கரில் ஒருவர், அவ்வாறே கூற முயன்றதாகவும் தான் அதனைத் திருத்தப்போக இந்த அறிவிப்பாளர் இப்படித்தானே அறிவிக்கிறார் என வாதிட்டதாகவும் எழுதியிருந்தார். இதை இங்கு நான் கூற வந்ததன் நோக்கம் பள்ளிச் சிறுவர்களிலிருந்து படித்துப் பட்டம் பெற்றவர்கள்வரை தம்மைக் கேட்டுக்கொண்டிருக்கிறார்கள் என்பதை ஓர் அறிவிப்பாளன் உணர்ந்திருக்க வேண்டும் என்பதையும் எமது இளந்தலைமுறையினரை மொழிதொடர்பாக வழிநடத்துவதில் ஒலிபரப்பாளருக்கும் பாரிய பங்குள்ளது என்பதையும் உணர்த்தவே.

அறிவிப்பாளன் தன் மொழி குறித்த நல்ல இலக்கண அறிவு பெற்றிருக்கவேண்டும். மட்டுமின்றி மொழியைச் சரியாக, எவ்விதத் தவறுமின்றி உச்சரிக்கத் தெரிந்திருக்க வேண்டும். ‘பிரபல திருடன்’, ‘பிரபல கொள்ளைக்காரன்’ போல ‘பிரபல அறிவிப்பாளர்’ ஆக முயற்சி செய்யாமல் தயவுசெய்து ‘புகழ்பெற்ற’ அறிவிப்பாளராக முயற்சி செய்யவேண்டும். அதற்கு மொழி அறிவு மிக முக்கியம்.

5. இப்போது அவர்கள் பாவித்துக் கொண்டிருக்கிற மொழி நடையும்,அறிவிப்புப் பாணியும் உங்கள் காலத்திலிருந்து எவ்வாறு வேறு படுகிறது? மாற்றம் ஆரோக்கியமானதாக இருக்கிறதா?

இப்போது அறிப்பாளர்களால் கையாளப்படும் தமிழ் தறிகெட்டு ஓடுகின்றது. நாம் எமது இளைய சமுதாயம் குறித்து மிகுந்த அவதானத்துடன் பணியாற்றினோம். மொழி குறித்த நல்ல அறிவு அவர்களுக்குக் கிடைக்கவேண்டுமென்பதில் மிகுந்த அக்கறை காட்டினோம். அதேசமயம் எமது ஒலிபரப்பைக் கேட்டுக்கொண்டிருக்கும் அறிஞர்களும் புலமை மிக்கோரும் எம்மில் பிழை கண்டுபிடிக்கக்கூடாது என்ற கவனத்துடன் இருந்தோம். அப்போது படித்தோரும் புலமை மிக்கோரும் வானொலியைக் கூர்ந்து செவிமடுத்தனர். ஒரு சிறு தவறையும் உடனே சுட்டிக் காட்டினர். இப்போதெல்லாம் வானொலியைச் செவிமடுப்போர் யார் யார் என்பதை நீங்கள் ஒரு மணி நேரம் வானொலியைக் கேட்டுக் கொண்டிருந்தாலே இலகுவில் கணிப்பிட்டுவிடலாம். மொழி தொடர்பாக மிகுந்த பிரஞ்ஞையுடனிருந்தோம். நிறைய வாசித்தோம்.தெரியாதவற்றைக் கேட்டுத் தெரிந்துகொண்டோம். பிறமொழி வானொலிகளைச் செவிமடுத்தோம். அதன்மூலம் பிறமொழிப் பிரயோகங்கள் பற்றிய அறிவைப் பெற்றோம். மூத்த ஒலிபரப்பாளர்களுடன் நல்ல உறவைப் பேணினோம். அவர்களுடன் கலந்துரையாடினோம். விமர்சனங்களை ஏற்றுக்கொண்டோம். பிறர் எம் தவறுகளைச் சுட்டிக்காட்டினால் அவற்றை ஏற்று எம்மை நாமே திருத்திக் கொண்டோம். தமிழ்மொழி தொடர்பான அறிவை வளர்த்துக்கொண்டோம். தமிழை நாம் வளர்க்காவிட்டாலும் குறைந்தது சிதைக்காது பார்த்துக்கொண்டோம். நிகழ்ச்சிகளுக்கு தமிழில் பெயரிட்டோம். தாய் மொழியைச் சிதைப்பது தாயைச் சிதைப்பதற்குச் சமனானது என்பதை உணர்ந்து ஒலிபரப்புச் செய்தோம்.

இன்று நிகழ்ச்சிகளின் பெயர்களையே பாருங்கள். ஒரு தமிழ் வானொலி தன் காலை நிகழ்ச்சிக்கு, ‘Breakfast Show என்கிறது. மற்றொரு வானொலி அதற்கும் ஒரு படி மேலே போய் ‘Morning Breakfast Show என்கிறது. காலையில் Breakfast ‘ சாப்பிடாமல் இரவிலா ‘Breakfast ‘சாப்பிடுவார்கள்?  முதல்வர் கலைஞர், தமிழ்ப் பெயர் சூட்டும் தமிழ்ப்படங்களுக்கு வரி விலக்கு அளித்ததுபோல், வன்னியில் குழந்தைகளுக்குத் தூய தமிழ்ப்பெயர் சூட்டுவோருக்குப் பரிசளிப்பதுபோல், வானொலியிலும் நிகழ்ச்சிகளுக்குத் தமிழ்ப் பெயர் சூட்டுவோருக்குப் பரிசளிக்கும் காலமொன்று உருவானால் ஆச்சர்யப்படுவதற்கில்லை. இன்றைக்கும் நான் பெருமையுடன் கூறுவேன். நான் சூட்டிய  சில நிகழ்ச்சிப் பெயர்கள் இந்தப் புதிய சூறாவளியிலும் தாக்குப் பிடித்து நிலைத்து நிற்கின்றன. ‘சந்தன மேடை’, ‘தங்கக் கொழுந்து’, ‘வணக்கம் தாயகம்’ ‘வளையோசை’ (இப்பெயரை ஒரு வானொலி கைவிட மற்றொரு வானொலி பிடித்துக்கொண்டது), ‘குட்டிச் சுட்டி’, ‘அரும்புகள்’ ‘வயலோடு வசந்தங்கள்’, ’முத்துக்கள் பத்து’, இவை சில உதாரணங்கள். இன்னும் உள்ளன.

இதில் வேடிக்கை என்னவென்றால் ஒரு தமிழ் ஒலிபரப்பின் மிக உயர் பதவியிலுள்ள, அதாவது பிரதம நிறைவேற்று அதிகாரியான ஒரு பெண்மணி “எனக்குத் தமிழிலும் பேசத் தெரியும். வாரும் பேசிப் பார்ப்போம்” என, தனக்குக் கீழே பணிபுரிந்த ஒரு தமிழ் ஆர்வலரிடம் ஆங்கிலத்தில் சவால் விடும் நிலைதான் தற்போதுள்ளது. அவர் தமிழில் பேசி நான் கேட்டது குறைவு. அவர் அதிகமாகப் பேசும் தமிழ் “ச்சொல்லுங்கோ”. நிலமை இவ்வாறிருக்க அவர் தனக்குக் கீழே பணிபுரிவோரின் தமிழ்மொழி தொடர்பான தவறுகளை எவ்வாறு திருத்துவார்?

பொதுவாகப் பார்க்கும்போது  இன்றைய அறிவிப்புப் பாணி என்பது சாதாரண சந்தைப் பேச்சுத்தான். இது ஆரோக்கியமாக இருக்கும் என நான் கருதவில்லை. இது வெகு விரைவிலேயே தமிழையும் தமிழ் ஒலிபரப்பையும் படுக்கையில் போட்டுவிடும்.  இலங்கையில் இத்தகைய கொச்சைப் பேச்சுமொழிக் கலாசாரத்தை  தமிழ் வானொலிக்கு அறிமுகப்படுத்தியவர் வெற்றுமொழி பேசும் ஒரு ‘வானொலி முதலாளி’. அவர் தமிழைக் கொச்சைப்படுத்த வேண்டுமென்றே இந்தக் கைங்கரியத்தில் இறங்கினாரா தெரியவில்லை. கடைசியில் அந்த ‘வானொலிக் கடையை’ இழுத்து மூடவேண்டிய நிலைதான் ஏற்பட்டது. கவலைதரும் ஒரு விஷயமென்னவென்றால் அந்த ‘வானொலிக் கடைக்கு’ எதிர்க் கடை போடப் புறப்பட்டதால் இன்று எல்லா ‘வானொலிக் கடைகளும்’ அப்படியே ஆகிவிட்டன.

Photobucket

6. ஆனால் தங்களுடைய மொழியும் பாணியும் நேயர்களோடு தங்களை நெருக்கி வைக்க உதவுகிறதாய் இப்போதைய அறிவிப்பாளர்கள் கருதுகிறார்கள்?

சாதாரண பேச்சுத் தமிழில் உரையாடுவதால் நேயர்கள் தம்மோடு நெருக்கமாவதாக தற்போதைய தமிழ் ஒலிபரப்பாளர்கள் கருதுகிறார்களென்றால் இந்த மாற்றங்கள் ஏற்படுவதற்கு முன்னர் இருந்த எம் நேயர்கள் எம்மோடு நெருக்கமாக இருக்கவில்லையென்றா சொல்லவருகிறீர்கள்? “முடக்குதிரைக்கு சறுக்கியது சாட்டு” என்பார்களே. அதுதான் இது. இன்று இவர்களின் நேயர்கள் யார் என்பதிலிருந்துதான் நாம் இதனைப் பார்க்க வேண்டும். வெறுமனே பாடல்களை விரும்பிக் கேட்கும் நேயர்கள், அதுவும் தமது குரலில் தமது பெயரையும் உறவினர் நண்பர்கள் பெயர்களையும் வானொலியில் அறிவிக்க விரும்பும், (அதன் மூலம் தற்காலிக அறிவிப்பாளராக மனத்திருப்திகொள்ளும்) ஒருசில இளைய தலைமுறையினர் , அல்லது யாரோ வெளிநாடுகளில் கடும் குளிரில் விறைத்தபடி தொழில் பார்த்து, தமது ஆசைகளை அடக்கியபடி டொலர்களாகவும் யூரோக்களாகவும் பௌண்ட்ஸ்களாகவும் சேமித்து அனுப்ப, இங்கே அறை எடுத்துச் சொகுசாகச் சாப்பிட்டுக்கொண்டிருக்கும் ஒரு கூட்டத்தினரே இவர்களின் நேயர்கள். இவர்களின் கல்வித்தரமென்ன? சமூக நிலையென்ன? என்ன செய்து கொண்டிருக்கிறீர்களென்றால், படித்துவிட்டு வீட்டிலிருக்கிறேன் என்பதே பதிலாகக் கிடைக்கிறது. எதுவரை படித்தார்களென்பதைக் கேட்டால் தவறு. கேட்கக் கூடாது. தப்பித் தவறிக் கூட ஒரு தொழிசார் நிபுணரோ உயர்பதவி வகிப்போரோ இந்த வானொலிகளைக் கேட்பதாகத் தெரியவில்லை. ஒருமுறை கலையகத்திலிருந்து வடதுருவம் பற்றி ஒரு நிகழ்ச்சியை ஒலிபரப்புச் செய்துவிட்டு, அலுவலகத்துக்கு வந்து பார்த்தால் புவியியல் தொடர்பாக அமெரிக்காவில் கலாநிதி கற்கை நெறியை முடித்துவிட்டு அதற்கும் மேலே தன் படிப்பைத் தொடரும் ஒரு பெண் கல்வியியலாளர் – அதுவும் இலங்கையர்- எமது நிகழ்ச்சியை இணையத் தளம் மூலம் கேட்டுவிட்டு , நாம் நிகழ்ச்சியில் தந்த தகவல் ஒன்றில் தவறிருப்பதைச் சுட்டிக்காட்டி மின்னஞ்சல் அனுப்பியிருக்கிறார். எத்தனை ஆசிரியர்கள்,அதிபர்கள், அலுவலர்கள் நிகழ்ச்சிகளைக் கேட்டுக்கொண்டிருந்ததில் நேரம் தவறியதாகச் சொல்ல அவர்களை அன்புடன் கண்டித்து அலுவலகங்களுக்கு அனுப்பி வைத்திருக்கிறோம். ஆனால் இன்றோ..?

இதைப்பற்றிய எவ்விதக் கவலையும் ‘வானொலி முதலாளிகளுக்குக்’ கிடையாது அவர்களுக்கு வேண்டியதெல்லாம் ‘rating’ அல்லது தரக் கணிப்பு. தரமென்றால் நிகழ்ச்சியின் தரமென்பதல்ல. இன்று தரக்கணிப்புச் செய்யும் நிறுவனங்கள், சந்தை ஆய்வு செய்யும் நிறுவனங்களாகவேயுள்ளன. எத்தனை பேர் ஒரு வகை சவர்க்காரத்தைப் பாவிக்கிறார்கள் என்று சந்தை ஆய்வு செய்வதைப்போல எத்தனை பேர் இந்த வானொலியைக் கேட்கிறார்கள் என்பதையே ஆய்வு செய்து வெளியிடுகின்றன. இதை வைத்துக்கொண்டு தாமே முதல் தர வானொலியென்று தமக்குத் தாமே முடி சூடிக்கொள்கின்றார்கள். முதல் தரமென்பது நிகழ்ச்சியின் தரமாக இருக்கவேண்டுமே தவிர அதிகம்பேர் ‘பாவிக்கிற’ வானொலியென்பதாக இருக்கக்கூடாது. உங்கள் கேள்விக்கு வருகிறேன்.

கொச்சைப் பேச்சுத் தமிழில் ஒலிபரப்பினால்தான் நேயர்களை நெருக்கமாக வைத்திருக்கும். அவர்களை இலகுவில் சென்றடையும் என்று ஒரு வாதத்திற்கு வைத்துக்கொள்வோமே. அவ்வாறெனில் ஒரு வானொலி நிலையத்தின் மிக முக்கிய நிகழ்ச்சியான செய்திகளை நீங்கள் ஏன் கொச்சைத் தமிழில் அல்லது பேச்சுத் தமிழில் ஒலிபரப்புவதில்லை? “இண்டைக்குக் காலையிலை வந்து பாருங்கோ ஒரு பத்துமணிபோல கொழும்பிலையிருந்து எயார்போட் போன SLTB பஸ் ஒண்டு ஜா எலக்குக் கிட்ட அக்சிடெண்டானதிலை 3 பேர் செத்துப் போச்சினமாம். 8 பேருக்குக் காயமாம். அதிலையும் 4 பேருக்கு சீரியசாம். சீரியசானவையை கொழும்பு பெரியாஸ்பத்திரியிலை அட்மிட் பண்ணியிருக்கினமாம் “ எனச் செய்தி வாசித்தால் அது இன்னும் மக்களை நெருங்கி அல்லது நெருக்கிச் செல்லுமே? யாராவது ஒரு ‘வானொலி முதலாளி ‘ இதனை முயற்சி செய்து பார்க்கலாம். அது வெற்றியளித்தால், இதற்கான புலமைச் சொத்துரிமையாக (Copyright) இலங்கை ரூபா 5 லட்சத்தை எனக்குத் தந்துவிட வேண்டுமென இப்போதே சொல்லிவிட்டேன்.

நல்ல தமிழில் வாசிக்கப்படுகின்ற செய்திகளைப் பாமர மக்களும் புரிந்துகொள்ள முடியுமென்றால், ஏனைய அறிவிப்புகளையும் நல்ல தமிழில் செய்தால் அவர்கள் புரிந்து கொள்வார்கள். மக்களைப் பற்றி நீங்கள் குறைவாக மதிப்பிடவேண்டாம். அவர்கள் எங்கள் அறிவிப்பாளர்களைவிடப் புத்திசாலிகள்.


7. நீங்கள் வர்ணணை யாளராகவும் , அறிவிப்பாளராகவும் பணியாற்றியவர் என்கிற அனுபவத்தில் இரண்டு துறைகளுக்கும் இறையிலான வேறுபாடுகளாக எதை உணர்கிறீர்கள்?

முதலில் என்னை ஒரு ஒலிபரப்பாளன் என்று கூறுவதையே நான் விரும்புகிறேன். ஓர் ஒலிபரப்பாளன் ஒலிபரப்பின் அனைத்துத் துறைகளிலும் ஓரளவேனும் அனுபவம் பெற்றிருக்கவேண்டுமென நம்புபவன் நான். வானொலி நிகழ்சிகளில் கலந்துகொள்ளும் ஒரு கலைஞனாக ஆரம்பித்த நான், அறிவிப்புச் செய்துள்ளேன், வானொலி தொலைக்காட்சிகளில் நேர்முக வர்ணனை செய்திருக்கிறேன், சமகால மொழிபெயர்ப்புச் செய்துள்ளேன். நிகழ்ச்சித் தயாரிப்பு, நிகழ்சித் தொகுப்பு செய்துள்ளேன். வானொலியிலும் தொலைக்காட்சியிலும் செய்தி ஆசிரியராகவும் செய்தி வாசிப்பாளனாகவும் (அதுவும் தொலைக்காட்சியியில் எனக்கு நானே மேக் அப் போட்டுக்கொண்டு) பணியாற்றியுள்ளேன். வானொலி நாடகம் – மெல்லிசைப்பாடல்கள் உட்பட வானொலிப் பிரதிகள் எழுதியுள்ளேன். விளம்பரப் பிரதிகள் எழுதியுள்ளேன். விளம்பரங்களுக்குக் குரல் கொடுத்துள்ளேன். மேடையில் நிகழ்ச்சிகளைத் தொகுத்துள்ளேன். ஆங்கிலம்-தமிழ், சிங்களம் – தமிழ் மொழிபெயர்ப்புச் செய்துள்ளேன், வானொலி மாமாவாகச் சிறுவர் மலர் நிகழ்ச்சியை 8 ஆண்டுக்காலம் நடத்தி வந்துள்ளேன். தட்டச்சு செய்பவர் வராதபோது தட்டச்சும் செய்துள்ளேன். வெளிக்களத்தில் சிரமமான நாட்டுக்கூத்து போன்ற நிகழ்ச்சிகளை தனியே ஓர் ஒலிவாங்கியின் துணையுடன் ஒலிபரப்புத் தரத்துடன் ஒலிப்பதிவு செய்துள்ளேன். கலையகங்களில் தொழில் நுட்பக்கலைஞர்கள் மட்டுமே செய்யும் ஒலிப்பதிவு (Recording) ஒலித்தொகுப்பு (Editing என்பவற்றைத் தனியே செய்துள்ளேன். ஏன் ஒரு விளம்பரத்திற்காக பாட்டும் பாடியுள்ளேன். இதை நான் என்புகழ் பாடவேண்டும் என்பதற்காக மட்டும் கூறவில்லை. தன்னை ஒரு முழுமையான ஒலிபரப்பாளனாகக் கருதும் அனைவரும் இதில் பாதியாவது செய்திருக்கவேண்டும் எனக் கருதுவதால் சொல்கிறேன். இன்று இப்படி எத்தனை பேர் உள்ளனரோ நானறியேன்.

இனி உங்கள் கேள்விக்கு வருவோம். அறிவிப்பாளனுக்குரிய பணிகள் மட்டுப்படுத்தப்பட்டவை. கொடுக்கப்படும் நிகழ்ச்சிக்குப் பொருத்தமான அறிவிப்பைச் செய்தல் அல்லது கொடுக்கப்படும் பிரதியை அறிவித்தல் என்பவற்றோடு அவனது பணிமட்டுப்படுகிறது. இன்று எஃப் எம் வானொலிகளில் செய்யப்படுவது அறிவிப்புத்தானா என்ற ஒரு கேள்வியும் இங்கே எழுகின்றது. ‘Disk Jockey அல்லது DJஎனப்படும் பாடல் தொகுத்துப் போடுபவரின் பணியைத்தான் இப்போதுள்ளவர்கள் செய்கிறார்கள். இடையிடையே ஏதோ பேசவேண்டும் என்பதற்காக ஏதேதோ பேசிவிட்டும் போகிறார்கள்.

ஒரு நேர்முக வர்ணனையாளனின் பணியென்பது இதை விடப் பாரியது. பொறுப்பானது. தனது நேயருக்கு – அவர் பார்வையற்றவராகக்கூட இருக்கலாம் – ஒரு நிகழ்வை காட்சிப்படுத்துவதே நேர்முக வர்ணனையாளரின் பிரதான பணி. காட்சிகளின் விபரிப்பு அந்த நிகழ்வை உங்கள் நேயர் காணச் செய்வதாக அமைய வேண்டும். அதற்காக உங்கள் நேயருக்கு அளவுக்கதிகமாகவும் காட்சிப்படுத்தத் தேவையில்லை. கிரிக்கெட் அரங்கினுள் நாயொன்று நுழைந்து ஆட்டத்தில் தடையேற்படும்போது நாயின் மைதானப்பிரவேசம் வர்ணிக்கப்படவேண்டியதே. ஆனால் அங்கு பறந்து செல்லும் காகத்தைப்பற்றிய வர்ணனை தேவையற்றது. எனவே நிகழ்வின் தன்மை குறித்து எதை வர்ணிக்கவேண்டும் எதைத் தவிர்க்க வேண்டும் என்பதைத் தீர்மானிக்கும் பொறுப்பும் வர்ணனையாளன் கையிலேதான் உள்ளது.

வர்ணனைகள் இருவகையென நான் நினைக்கிறேன். ஒன்று திட்டமிடப்பட்ட நிகழ்வுகளின் வர்ணனை. அதாவது ஓர் அரச தலைவரின் விஜயம் போன்றவை. இத்தகைய திட்டமிடப்பட்ட நிகழ்வுகளை வர்ணனை செய்யும்போது போனோமா வர்ணனை செய்தோமா என்றும் இருக்க முடியாது. அதற்காக நிறைய ‘வீட்டு வேலைகள்’(Home Work) செய்யவேண்டியிருக்கும். மற்றையது திடீரென நிகழும் நிகழ்ச்சிகள். குண்டு வெடிப்புகள், விமான விபத்துகள், வெள்ள அனர்த்தங்கள் போன்றவை. இங்கு முன் ஆயத்தங்கள் குறைவெனினும் அபத்தமாகப் பேச முடியாது. என்னைப் பொறுத்தவரை வர்ணனை என்பதே சிரமமான பணி.

8. இலங்கை வானொலிச் சூழலில் இலங்கை இனப்பிரச்சினை ஏற்படுத்திய முக்கிமான தாக்கம் என்று எதனை முக்கியமாகச் சொல்வீர்கள்?

சந்தேகங்கள் காரணமாக இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் பணிபுரிந்த அத்தனை தமிழ் ஊழியர்களையும் ஒட்டு மொத்தமாக கட்டாய விடுமுறையில் வீட்டுக்கனுப்பி மனத்தளவில் எம்மை நோயாளியாக்கிப் பார்த்தமை ஒரு தாக்கம். (இதில் தன் மதத்தைத் தழுவிய ஒரு தமிழ்ப் பெண்மணியை மணந்த நண்பர் பி.எச். அப்துல் ஹமீதும் , ஒரு தமிழரின் தூரத்துப் பேர்த்தியை மணந்த சிங்கள நண்பர் ஆனந்த புஞ்சிஹேவாவும் அடக்கம்) 83 ஜூலைக் கலவரம் காரணமாக புலம்பெயர்ந்த ஒலிபரப்பாளர்கள், வானொலிக் கலைஞர்கள், வானொலி எழுத்தாளர்கள் ஏற்படுத்திய வெற்றிடம் மற்றொரு தாக்கம். அதனால் ஏற்பட்ட தமிழ்நிகழ்ச்சி ஒலிபரப்பு நேரக்குறைப்பு இன்னுமொரு தாக்கம். வடகிழக்கிலிருந்து கலைஞர்கள், குறிப்பாக இசைக்கலைஞர்கள் கிராமிய நிகழ்ச்சிக் கலைஞர்களின் கொழும்பு வருகை தடைப்பட்டமையால் ஏற்பட்ட தாக்கம், மண்டைதீவு ஒலிபரப்பு நிலையம் மற்றும் யாழ்ப்பாணத்தில் அமைக்கப்பட்ட ஒலிப்பதிவுக் கூடம் என்பவை இயங்காது போனதால் ஏற்பட்ட தாக்கம், வடகிழக்கில் வெளிக்கள ஒலிபரப்பு, ஒலிப்பதிவுகளில் ஏற்பட்ட தடங்கல்கள் ஏற்படுத்திய தாக்கம் என தாக்கங்கள் அனேகம். ஆனால் தமிழர்கள் மீதான சந்தேகம் இன்னும் தொடர்வதால் நல்ல தமிழ்பேசும் ஒலிபரப்பாளர்களுக்குப் பதிலாக கொச்சைத்தமிழ் பேசும் ஒலிபரப்பாளர்கள் பெருகியுள்ளதையே நான் முக்கிய தாக்கமாகத் தற்போது காண்கிறேன்.


9. இனப்பிரச்சினை செய்திகளின் தேவையையை அதிகரித்ததோடு செய்திகளை மட்டுமே கவனிக்கிற மனோநிலைக்கு மக்களைக் குறிப்பாக தமிழ் மக்களைத் தள்ளி விட்டிருக்கிறது என்று கொள்ளலாமா? முன்பு போல நிகழச்சிகள் வானொலிகளில் இடம் பெறாமைக்கு அதுவும் ஓர் காரணமா?

இனப்பிரச்சினை, செய்திகளின் தேவையை அதிகரித்ததென்னவோ உண்மைதான். ஆனால் எத்தனை வானொலிகள் இவ்வாறு செய்திகளுக்கு மாத்திரமே முன்னுரிமை கொடுத்து நிகழ்ச்சிகளை ஒலிபரப்புகின்றன? அதுவும் சுயாதீனமாக, சரியான செய்திகளை ஒலிபரப்புகின்றன? இன்று செய்திக்கான கட்டுப்பாடுகளை மீறி எல்லாச் செய்திகளும் ஒலிபரப்பாவதில்லை. அவ்வாறு ஒலிபரப்பும் வானொலி நிலையங்களும் செய்தியாளர்களும் கண்காணிக்கப்படுகின்றனர். இதனால் 100% உண்மைச் செய்திகளைத் தர வானொலி நிலையங்கள் அஞ்சுகின்றன. தமக்குத் தாமே சில சுய கட்டுப்பாடுகளை விதித்துக்கொண்டு செய்திகளைத் தருகின்றன. இதனால் செய்திகளை அறிந்துகொள்ள மக்கள் இணையத்தளங்களையும் பிறநாட்டு ஒலி, ஒளிபரப்புகளையும் நாடவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

அத்துடன் செய்திகளைக் கவனிப்பவர்கள் யார் என்ற கேள்வியும் இங்கு எழுகின்றது. பெயர்கூறிப் பாடல் கேட்பவர்கள் ஒரு வானொலியின் செய்தி நேரத்தில் ஏனைய வானொலிப்பக்கம் போய் விடுகின்றனர். இவர்கள் எல்லா வானொலி நிலையங்களுக்கும் அபிமான நேயர்களாகவேயிருக்கின்றனர். மாவிலாறு தொடர்பாக திருகோணமலை மாவட்டத்தின் பல இடங்களிலும் மோதல்கள் இடம்பெற்று இடப்பெயர்வும் அனர்த்தங்களும் இடம்பெற்றுக்கொண்டிருந்த சமயம் இப்பிரச்சினையால் பாதிக்கப்பட்டிருந்த மூதூர்க் கிராமத்திலிருந்து ஓர் இளைஞன் தன் காதலிக்காகப் பாடல் கேட்கவில்லையா? அதேசமயம் தம் இருப்புத் தொடர்பாக அக்கறை கொண்டோர், செய்திகளின்பால் அக்கறை காட்டாமலுமில்லை. இவர்கள் அனைத்து வானொலிகளையும் செய்தி நேரத்தின்போது மட்டுமே செவிமடுக்கின்றனர் என்பதும் கவனத்தில் கொள்ளவேண்டிய விடயமே.

Photobucket

முன்புபோல் வானொலியில் நல்ல நிகழ்ச்சிகள் இடம்பெறாமைக்கு, செய்திகளின் தேவை அதிகரித்ததுதன் காரணமா எனக் கேட்டீர்கள். வானொலி முதலாளிகளும் அங்கு பணிபுரிவோரும் 24 மணி நேரமும் செய்திகளைத் தேடி ஒலிபரப்புவதற்கே தம்மை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டிருக்கின்றனர் என நீங்கள் எண்ணிக்கொண்டிருந்தால் அது தவறு. வெள்ளிக்கிழமை, சனிக்கிழமை இரவுகளில் நல்ல குத்துப்பாட்டுகளைப்போட்டு, தமிழ் இளைஞர்களை குத்தாட்டம் போடுமாறு அறிவிக்கச் சொன்ன ஒரு வானொலி முதலாளியை நான் அறிவேன். எனவே இந்த வானொலி முதலாளிகளின் ஒரே குறிக்கோள் தமது வானொலிகளை ‘No 1 hit music channel’ அதாவது ‘முதல் தர இசை அலைவரிசை’ என்ற இலக்கை எட்ட வைப்பதேயன்றி வேறொன்றும் அல்ல. உண்மையில் இவர்களுக்கு செய்திகள் தொடர்பான அக்கறையிருந்தால் நல்ல உச்சரிப்புடன், அடிப்படைத் தமிழ் இலக்கணப் பிழைகளின்றி செய்திகளைத் தயாரித்துத் தரட்டும் பார்க்கலாம்.


10. FM வானொலிகளின் வருகையும் அவற்றின் 24 மணிநேர ஒலிபரப்பும் வானொலி நிகழ்சிகளின் போதாமைக்கும் தரமின்மைக்கும் காரணம் என்று சொல்கிறீர்களா?

வானொலிகளின் ஒலிபரப்பு 24 மணி நேரமாக விஸ்தரிக்கப்படதுபோல ஒலிபரப்பாளர்களின் அறிவு நிலை விஸ்தரிக்கப்படவில்லை என்பதே இன்று பலராலும் முன்வைக்கப்படும் ஒரு குற்றச்சாட்டு. அவர்களுக்குத் தெரிந்ததெல்லாம் சினிமாப் பாடல்களும் சினிமாத் தகவல்களுமே. அவர்களது அதிகபட்ச வாசிப்பு தமிழக வாராந்தரிகளுடன் மட்டுப்பட்டுவிட்டது. எத்தனையோ பெயர்களுடன் நிகழ்ச்சிகள் ஒலிபரப்பானாலும் அத்தனையும் சினிமாப்பாடல்களே. சினிமாப்பாடல்களில்கூட மறைந்துகிடக்கும் நல்ல விஷயங்களைப் பிரித்துத்தர அவர்களுக்குத் தெரியவில்லை. அமரர் எஸ்.கே. பரராஜசிங்கம் தொகுத்துத்தந்த ”திரை தந்த இசை” நிகழ்ச்சியும் சினிமாப்பாடல்களை வைத்துத்தான் தொகுக்கப்பட்டது, ஆனால் அந்தப்பாடல்கள் எந்தெந்த கர்னாடக ராகத்தில் அமைந்ததென கர்நாட இசைக்கு முக்கியமளித்ததாக அமையவில்லையா? நான் தயாரித்து வழங்கிய ‘வணக்கம் தாயகம்’ தனியே பொது அறிவு, தமிழறிவுடன் தொடர்புடையதாக அமைந்தது. அதற்கும் அடிப்படை சினிமாப்பாடல்கள்தான். ராஜேஸ்வரி ஷண்முகம் வழங்கிய ‘பொதிகைத் தென்றல்’ நிகழ்ச்சியும் அப்படித்தான். இப்படி அறிவுபூர்வமான நிகழ்ச்சிகளைச் செய்யத்துடிக்கும் சில இளம் ஒலிபரப்பாளர்களின் ஆவலைக்கூட வானொலி முதலாளிகள் மழுங்கடித்துவிடுகின்றனர். இரண்டு பாடல்களுக்கிடையில் 90 செக்கனுக்குமேல் பேசக்கூடாதென உத்தரவிட்டு காலமளக்கும் கருவி (stop watch) ) வாங்கிக்கொடுத்த வானொலி முதலாளிகளும் இருக்கின்றனர். இப்படியிருக்கும்போது நிகழ்ச்சிகளின் தரம் எப்படி அதிகரிக்கும்.

பாடலுக்கோ இசைக்கோ முக்கியத்துவமின்றி ஒலிபரப்புச் செய்யலாமா என்று கேட்பீர்கள். கிரிக்கெட் ஆட்டம்பற்றிய நேர்முகவர்ணனையை வானொலியில் 6 மணிநேரம் பாடலின்றியே தொடர்ந்து கேட்பவர்கள் இல்லையா?‘A Man with the Golden Microphone’, ‘Golden tonsil’ என்றெல்லாம் அழைக்கப்பட்ட John Laws என்ற அவுஸ்திரேலிய ஒலிபரப்பாளரைப்பற்றி அவுஸ்திரேலியா சென்றிருந்தபோது அறிந்துகொண்டேன். தனது 71வது வயதில் கடந்த 2007 நவம்பர் மாதம், அவர் ஓய்வுபெறும் வரை, 54 ஆண்டுகளாக நடத்திவந்த வெறும் பேச்சையே அடிப்படையாகக் கொண்ட (talkback) வானொலி நிகழ்ச்சி, நேயர்கள் மத்தியில் புகழ்பெற்ற வானொலி நிகழ்ச்சியாகும். அவரின் எல்லா நிகழ்ச்சிகளும் காத்திரமான விடயதானங்களைக் கொண்டவை. 2003ல் ஒலிபரப்பு வாழ்வில் John Laws 50 ஆண்டுகளைப் பூர்த்திசெய்தபோது, அவர் பணியாற்றிய 2UE வானொலி நிலையம் 10,000 அவுஸ்திரேலிய டொலர் (இலங்கை ரூபாவில் அதன் தற்போதைய பெறுமதி 10 லட்சம் ரூபா!!) பெறுமதியான தங்கமுலாம் பூசப்பட்ட ஒலிவாங்கியொன்றை அவருக்கு பரிசளித்து மகிழ்ந்தது. இந்தத் தங்க முலாம் பூசப்பட்ட ஒலி வாங்கியைப் பயன்படுத்தியே தனது நிகழ்ச்சிகளை அவர் வழங்குவார். நிகழ்ச்சி நிறைவடைந்ததும் அவர் அதனைக் கழற்றிக் கொண்டு போய்விடுவார். இதற்கு முன்னரும் 40 வருட ஒலிபரப்பு வாழ்வைப் பூர்த்தி செய்தபோதும் அவருக்கு இவ்வாறே தங்கமுலாம் பூசப்பட்ட ஒலிவாங்கியொன்று பரிசளிக்கப்பட்டிருந்தது. அவ்வளவு தூரம் அவரது நிகழ்ச்சி புகழ்பெற்றிருந்தது. அதேபோல் அவரது நிகழ்ச்சி, அவர் பணியாற்றிய நிலையத்திற்குப் பெரும் புகழையும், வருமானத்தையும் ஈட்டித்தந்தது. அமெரிக்காவிலும் ஒரு வானொலி அவரது நிகழ்ச்சியை சமகாலத்தில் பெற்று ஒலிபரப்பியது. இவ்வளவுக்கும் அவர் தன்னை ஓர் ஊடகவியலாளன் என்று அழைத்துக்கொண்டதில்லை. எப்போதும் தன்னை களிப்பூட்டுபவராகவே அறிமுகப்படுத்துவார். அதாவது தனது பேச்சு நிகழ்ச்சி நேயர்களுக்குக் களிப்பூட்டும் என்பதில் அவருக்கு அசைக்கமுடியாத நம்பிக்கையிருந்தது. அவுஸ்திரேலியாவிலேயே அதிகூடிய சம்பளம் வாங்கிய ஒலிபரப்பாளர் துழாn டுயறள என்பது வேறு விஷயம்.

தரமான நிகழ்ச்சிகளைத் தந்தால் பாடல்கள் இல்லாமலே ஒலிபரப்பைக் கேட்க மக்கள் தயாராகவுள்ளனர் என்பதற்கு John Laws அவர்களின் நிகழ்ச்சி ஓர் எடுத்துக்காட்டு.

Photobucket

11. இத்தனை ஆண்டுகால அறிவிப்புத் துறை அனுபவங்களில் நீங்கள் முக்கியமாகப் பதிவு செய்ய வேண்டும் என்று நினைக்கிற அதிருப்தி என்று ஏதேனும் உங்களிடம் உண்டா?

அனேகமாக நான் செய்ய நினைத்த அனேகமான நிகழ்ச்சிகளை என் மேலதிகாரிகளுடன் சண்டை போட்டாவது செய்து முடித்திருக்கிறேன். என் மேலதிகாரிகளுக்கு எவ்வித அசௌகரியங்களையும் அந்த நிகழ்ச்சிகள் தந்ததில்லை. இங்கிலாந்து, ஜேர்மனி போன்ற நாடுகளில் ஒலிபரப்புத் தொடர்பான பயிற்சிகள் பெறும் வாய்ப்புகள் கிடைத்தன. இலங்கையில் மட்டுமன்றி, அவுஸ்திரேலியா, சிங்கப்பூர், ஃபிரான்ஸ், கனடா, இங்கிலாந்து, இந்தியா போன்ற நாடுகளில் உள்ள வானொலி நிலையங்களினூடாக தமிழிலும் தென்னாபிரிக்க வானொலி நிலையமொன்றினூடாக ஆங்கிலத்திலும் ஒலிப்பரப்புச் செய்யும் வாய்ப்பு எனக்குக் கிடைத்துள்ளது. ஒரு முழுநேர ஒலிபரப்பாளனாக மரணிக்கவேண்டுமென விரும்பியிருந்தேன். வஞ்சகம், சூது , பொறாமை காரணமாக, நான் எதிர்பார்த்ததற்கும் முன்னரே ஒலிபரப்பிலிருந்து விலகியிருக்க நேர்ந்தமை துரதிஸ்டமே. இலங்கையில் மீண்டும் ஒலிபரப்பின் பொற்காலம் மலருமா என்ற ஒரேயொரு ஆதங்கமே இப்போது எஞ்சியுள்ளது. இன்று புலம்பெயர்ந்த நாடுகளிலெல்லாம் நல்ல தமிழை வானொலிகளில் எம்மவர்கள் முழங்கிக் கொண்டிருக்க, நாமோ கொச்சைத்தமிழ் பேசுவது எப்படி என்பதைக் கற்றுக்கொள்ள வெளிநாடுகளிலிருந்து சிலரை இறக்குமதி செய்துகொண்டிருக்கிறோம். இறக்குமதியான இவர்களோ வானொலி, தொலைக்காட்சிகளில் எப்படி நரம்பு தெறிக்கக் கத்தலாமென்பதையும் 100க்கு எத்தனை சதவீதம் ஆங்கிலம் கலக்கவேண்டுமென்பதையும் கற்றுத் தருகின்றனர். இவர்கள் எங்கிருந்து இறக்குமதியானார்களோ அங்கெல்லாம் இன்றும் எம் இலங்கை ஒலிபரப்பாளர்கள் போற்றப்படுகின்றனர். இதுதான் புரியாத புதிராகவுள்ளது.

என் வானொலி அனுபவங்களை எழுத்துவடிவில் ஆவணப்படுத்துவதொன்றே இதுவரை நிறவேறாத என் ஆசை. அதை நிறைவேற்றவேண்டும். பார்ப்போம்.