சாத்தானின் காதலி

Posted by த.அகிலன் on Feb 7th, 2009
2009
Feb 7

காதல் எப்போதும் தனக்கான நியாயங்களைக் கொண்டிருக்கிறது. உலகத்தின் நியதிகளைச் நீர்த்துப்போகச் செய்யவும் தனக்கான விதிகளை எழுதிக்கொள்ளவும் காதலால் முடிந்திருக்கிறது. காதலின் அழகான முடிச்சுக்கள் விழுகின்ற இடங்கள் நம்பமுடியாதவை சிலசமயங்களில் அதிர்ச்சிகளைத் தரவல்லவை.
காதல் நேசித்துக்கொண்டிருக்கிறது.. தன்னைத்தானே. எந்த எதிர்பார்ப்புகளுமற்று ஒரு கடைக்கண் பார்வையையோ அல்லது சின்னப்புன்னகையைத்தானும் பரிசளிக்காத காதலியின் பின்னால் அலைந்துகொண்டேயிருப்பான் ஒருத்தன்… தன்னைச் சட்டைசெய்யாது.. வேறுயாரோ ஒருத்தியின் பின்னால் அலைந்துகொண்டிருக்கும் ஒருத்தனிடம் காலம் முழுதும் தன்னை நிராகரிக்கிற ஒருவனிடம் தன் மொத்தஅன்பையும் கொட்டிக்கொண்டிருப்பாள் இன்னொருத்தி.

alfred-gockel-shades-of-love-lav-1.jpgஆனால் இந்த உலகமே ஒட்டுமொத்தமாகச் சேர்ந்து நின்று வெறுத்துக்கொண்டிருந்த ஒருவனை. “கடவுளே இவன் சாத்தான் இவனைக்கொன்றுவிடு” என்று லட்சக்கணக்கானவர்கள் அவனது மரணத்தை வேண்டி இறைவனிடம் பிரார்த்திக்கும்படி நடந்துகொண்ட ஒருத்தனை. மனிதர்களை வெறும் எண்களாக்கி அவர்களைப் பட்டியலிட்டு தினமும் கொன்றுகுவித்துக்கொண்டிருந்த அவனை எந்தத் தயக்கமும் இன்றி தான் சாகும் வரைக்கும் நேசித்துக்கொண்டிருந்தாள் ஒரு தேவதை.
அந்தச் சாத்தான் ஹிட்லர் அந்தத் தேவதை ஈவா பிரௌன்..
யூதர்களின் கனவுகளில் கொலைவாட்களோடு அலைந்த அதே ஹிட்லர்; ஈவாவின் கனவுகளைப் பூக்களால் நிறைத்தான்…  அதிகாரத்தின் போர்வைக்குள் இறுக்கமான பல வேடங்களைப் போர்த்தியிருந்த ஹிட்லரின் மனசுக்குள் ஒரு பூஞ்சோலை இருப்பது ஈவாவுக்கு மட்டுமே தெரியும். உலகமே அ;சசத்தோடு பார்த்த மனிதனை ஈவா தன் கண்களில் வழியும் காதலோடு பார்த்தாள். சிலவற்றுக்குக் காரணங்கள் கூடத்தேவையில்லை ஹிட்லர் என்கிறமனிதனிடத்தில் இருந்து எதையுமே அவளது காதல் யாசித்ததில்லை..
அந்தத் தேவதையின் காதல் அதிகமான அசாத்தியங்களைக் கொண்டிருந்தத. ஹிட்லரின் 40 வயதில் 17 வயதான ஈவாபிரவுணை தன் நண்பரின் போட்டோ ஸ்ரூடியோவில் வைத்து சந்திக்கிறார் ஹிட்லர் தன்னைவிட 23 வயது பெரியமனிதரை 17 வயதேயான ஈவா நேசிக்கஆரம்பிக்கிறாள். இந்தப் பிரபஞ்சத்தின் அற்புதமான காதல் முடிச்சொன்று அந்தக்கணத்தில் விழுகிறது. அதுதான் காதல். எதிர்பார்ப்புகளற்ற பிரியம் ஒன்றையே அது யாசிக்கிறது. நீ சிவப்பா, கறுப்பா, நெட்டையா, குட்டையா, ஒல்லியா, தடிமனா, காந்தியா, கோட்சேயா, இதெல்லாம் சிந்தித்துக்கொண்டிருக்கவில்லை.. அது நிகழ்ந்துவிடுகிறது அதுவாகவே. ஈவாவிடமும் அது நிகழ்ந்தது. உலகத்தை அச்சப்படுத்திய ஹிட்டலரின் விழிகள் ஈவாவிடம் மண்டியிட்டன.. அவள் பிரியத்தை யாசித்தன. எல்லையற்ற நிபந்தனைகள் ஏதுமற்ற தன் முழுப்பிரியத்தையும் அவள் அவனுக்கு வழங்கினாள். அதிகாரத்தின் போதையிலிருக்கிற ஒரு மனிதனின் அந்தரங்கம் என்பது ஒரு இருண்டகுகைவெளி மட்டுமல்ல அது மலர்வனங்களையும் கொண்டிருக்கிறது என்பதை ஈவா கண்டுபிடித்தாள்..
அவள் ஹிட்லரிடம் எதையுமே யாசித்தாளில்லை. தன் பிரியத்தின் விலையாய் அவள் ஜேர்மனியைக்கூடக் கேட்டிருக்கலாம். அப்படி அவள் செய்திருப்பாளானால் பல பேரசர்களின் வீழ்ச்சிகளின் பின்ணணியில் ஒழிந்துகொண்டிருக்கும் அழகிகளின் விழிகளில் அவளுடையதும் ஒன்றாகியிருக்கம். அவள் ஆனால் அவள் காதலின் புனிதங்களை நம்புபவளாயிருந்தாள். எதிர்பார்ப்புகள் ஏதுமற்ற நிர்பந்தங்கள் ஏதுமற்ற தூய்மையான அன்புஇதயமொன்றே அவளிடம் இருந்தது. ஹிட்லரிடம் அவள் மனைவி என்ற அந்தஸ்தைக்கூட எதிர்பார்த்தவளில்லை அவளது காதல் வலையில் அவனது இயல்புகளைச் சிக்கவைக்க அவள் முயன்றதில்லை ஹிட்லரை அவனாகவே இருக்க அவள் அனுமதித்தாள்.
இரண்டாம் உலகப்போர் இறுதிக்கட்டத்தை நெருங்குகிறது. பேர்லின் நகர வீதிகளில் ர~;யப்படைகளின் வாகனத்தடங்கள் பதியத்தொடங்கிவிட்டன. ஹிட்லரின் தலைமையகம் இருந்த சுரங்க மாளிகை தோல்வியின் செய்திகளால் நிறைகிறது. ஜேர்மனி வீழ்ந்துவிட்டது என்பதை அவர்கள் உணர்ந்தார்கள். ஹிட்லர் தன் நண்பர்களை நெருக்கமானவர்களை அழைத்தான். வெளியேற விரும்புபவர்கள எதிரிகளிடம் சிக்காமல் பேர்லினை விட்டு வெளியேறுங்கள் என்று சொன்னான். ஈவாவிடமும் கூடத்தான். தன் வாழ்நாளின் மிகமோசமான தோல்வியின் துயரம் தாழாமல் துடித்துக்கொண்டிருக்கும் ஹிட்லரின் விழிகளை ஈவா பார்த்தாள். அந்த விழிகளில் ததும்பிக்கொண்டிருந்த ஒரு சாம்ராஜ்யத்தோல்வியின் துயரத்தை துடைத்துவிடுகிறவள் போல ஹிட்லரின் கண்களுக்கு ஆறுதளித்தது அவள் பார்வை. பின் அவள் தன் உதடுகளால் சொன்னாள் வெகு நிதானமாக “நான் மரணத்திலும் உங்களோடிருக்கவே விரும்புகிறேன்.” ஹிட்லர் அந்தக்கணத்தில் தன்மீது கவிந்த அந்தத்தேவதையின் பெரும்பிரியத்தை சுமக்கமுடியாமல் திணறினான். உயிர் தப்பும் வழிகள் ஏதுமில்லை என்பதைச் சர்வநிச்சயமாகத் தெரிந்துகொண்ட பின்னாலும் தன்னைநேசிக்கிற ஒருத்தியின் பெரும்பிரியத்திற்குப் பதிலளிக்கும் வார்த்தைகள் ஏதுமற்றவனாய். தன் நண்பர்கள் முன்னிலையில் அதிகாரிகள் முன்னிலையில் அவளை முத்தமிட்டான் அந்த ஒற்றை முத்தம் அந்த இரும்மனிதனுள் உருகிவழியும் ஓர் காதல் இதயத்தின் ஆயிரம் வார்த்தைகளை ஈவாவுக்குச் சொல்லியது..
இப்போது மரணத்தின் கண்களால் கண்காணிக்கப்பட்டுக்கொண்டிருக்கும் ஹிட்லர் என்கிற மனிதனுக்குள் இருக்கிற காதலன். தன் காதலியைக் கௌரவிக்க விரும்பினான். தன் வாழ்நாளில் தன்னை நேசித்த என்றைக்கும் யாராலும் எதனாலும் பிரதியிடமுடியாத அன்பைப் பரிசளித்த தன் பரியசகிக்கு தன்னுடைய மனைவி என்கிற அந்தஸ்தை அளிக்கவிரும்பினான். அவளது பிரியத்தின் எதிரில் தான் அளிக்கவிருக்கும் மனைவி என்கிற அந்தஸ்து ஏதுமற்ற ஒரு வெறும் சடங்கு என்பதை அவன் அறிவான் ஆனால் அவனால் அவன் அப்போதிருந்த நிலையில் அவளுக்கு அளிக்கமுடிந்த ஒரே பரிசு அதுதான். அதுவே அவளது காதலை பூரணப்படுத்தும் ஒன்றென்று ஹிட்டலர் நம்பினான்.
ஏப்ரல் 29 ஹிட்லருக்கும் ஈவாபிரௌனுக்கும் சட்டபூர்வமான திருமணம் ஹிட்லரின் சுரங்க மாளிகையில் நடந்தது. உலகத்திற்கு ஹிட்லரின் காதலியாக அறியப்பட்டிருந்த ஈவா என்கிற தேவதை திருமதி ஹிட்லரானாள். ஏப்ரல் 30 தன் வாழ்நாள் முழுதும் எவனுக்காகப் பிரியத்தைப் பொழிந்தகொண்டிருந்தாளே அவனது மரணத்தைக் காணச்சகியாதவளாய்.. அவனுக்கு முன்பாகவே சயனைட் வில்லைகளை சாப்பிட்டு ஈவா மரணித்தாள். அதன் பிறகு ஹிட்லரும் தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு இறந்தான்.. எல்லாம் நிகழந்தபின் ஹிட்லரின் அறைக்குள் நுழைந்த காவலர்கள்.. ஹிட்லரின் காலடியில் புன்னகைத்தபடி இறந்துபோயிருந்த ஈவாவைக் கண்டார்கள்.. பின்னர் அவர்கள்..அந்தக்காதலர்களை ஒன்றாகத் தீயிட்டு எரித்தனர். எதிரிகளின் கையில் தன் சடலமோ காதலியின் சடலமோ கூடச் சிக்கிக்கொள்ளக் கூடாதென்கிற ஹிட்லரின் ஆணையின் படி. 3 மணிநேரம் எரிந்து சாம்பரானது அவர்களின் உடல்கள்.
ஆனால் ஈவாவின் காதலை அதன் பிறகு உலகம் வியந்தது. விதிகளிற்குச்சிக்காமல் விதிவிலக்காக வீழ்ந்த காதலின் அற்புதமான முடிச்சுகளின் ஒன்று ஈவாவின் காதல். அவளது காதல் வாழ்ந்துகொண்டிருக்கிறது இன்னமும்.. ஹிட்லர் மீது அவள் கொண்டிருந்த காதலின் புன்னகை ஒன்று இன்றும்கூட உயிர்வாழ்கிறது ஹிட்லர் ஈவாவை வரைந்த ஓவியமொன்றின் வடிவில்..

காதலின் சிறைக்கைதி…

Posted by த.அகிலன் on Feb 5th, 2009
2009
Feb 5

உலகத்தின் அழகான வார்த்தைகள் ஒருவனிடம் மண்டியிட்டுக்கொண்டிருந்தன. என்னையும் உன் காவியங்களில் சேர்த்துக்கொள் என்று அவனிடம் கெஞ்சின. பெண்கள் அவனது வார்த்தைகளிடம் அடிமையாயிருந்தனர். வார்த்தைகள் அவனிடம் அடிமையாயிருந்தன. முறிந்த சிறகுகள் என்கிற தன் காதல் காவியத்தை கலீல்ஜிப்ரான் உலகத்திற்குக் கொடுத்தார். அந்த அளப்பெரிய காதலனுபவத்தை ஜிப்ரானுக்கு பரிசளித்தவள் அவனது செல்மா.

ஜிப்ரான் தன்னுடைய பதினெட்டாவது வயதில் தன் தந்தையின் ஆத்ம நண்பரான பாரிஸ் எபாண்டி கராமி என்பவருடைய செல்ல மகளாக செல்மாவைச் சந்திக்கிறான். முதல் பார்வையில் அந்த ஆன்மாவை உருக்கும் காதல் பிறந்துவிடுகிறது. தன்னுடைய இன்னொரு பாதியைக் கண்டுகொண்டதாக ஜிப்ரானின் மனம் கூத்தாடியது. செல்மா பேரழகி. இவளுடைய அழகை எந்த ஓவியனாலும் முழுமையாகப் பிரதிசெய்துவிடமுடியாது அவ்வளவு அழகு அவள். ஜிப்ரான் செல்மாவைச் சினேகிக்கத் தொடங்கினான். செல்மாவும்..

எப்போதும் காதலுக்கு அந்தஸ்து எதிரியாகவே இருக்கிறது. காதலுக்கு மட்டும் விதவிதமான எதிரிகள். சிலசமயங்களில் காதலர்களே காதலின் எதிரிகளாகிவிடுகிறார்கள். பேரழகியும் பணக்காரியுமான செல்மாவை அடைந்துவிட நிறையப்பேர் துடிக்கிறார்கள். அவர்களுடைய தூக்கத்தையெல்லாம் செல்மா கெடுத்துக்கொண்டிருக்கிறாள். ஆனால் செல்மாவின் கனவுகளில் ஜிப்ரான் அலைந்துகொண்டிருந்தான்.

இந்தக் காதலுக்கு வில்லன் ஒரு பாதிரியார் வடிவத்தில் வந்தான். கழுத்தில் சிலுவையும் மனசுள் அழுக்கையும் சுமந்துகொண்டிருக்கும் பாதிரி. தன்னுடைய மருமகனுக்கு செல்மாவை மணமுடிப்பதன் மூலம் அவனைப் பெரும் பணக்காரனாகவும் அழகியின் கணவனாகவும் மாற்றி ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிக்கலாம் என்று திட்டம் போட்டான்.

செல்மாவின் தந்தையை வார்த்தைகளால் மயக்கி அந்தத்திருமணத்தை நடத்தியும் முடித்துவிட்டான். காதலின் வெளியில் சுதந்திரமாக மிதந்துகொண்டிருந்த செல்மாவினதும் ஜிப்ரானினதும் சிறகுகள் முறிந்து விழுந்தன. செல்மாவின் தந்தை கடுமையாக நோயுற்றிருக்கையில் இந்தத் திருமணம் நடந்தது. அதற்கு முன்பாக ஜிப்ரானை அழைத்த செல்மாவின் தந்தை “ஜிப்ரான் என்னை உன் தந்தைபோலவும் செல்மாவை உன் தங்கையைப்போலவும் நேசிக்கவேண்டும்” என்று சொன்னார். ஜிப்ரான் தன் காதலை உள்ளே ஒழித்து வைத்துக்கொண்டு புன்னகை புரிந்தான்.
ஜிப்ரானின் பிரியத்துக்குரிய செல்மாவின் இல்வாழ்க்கை பூத்துக்குலுங்கவேண்டும் என்று அவன் பிரார்த்தித்தான்.

ஆனால் அவனுடைய ஒப்பற்ற மலர் வாடிவதங்கியது. செல்மாவின் கணவன் நாள் முழுதும் மதுவிடமும் மாதர்களிடமும வசமிழந்து கிடந்தான். தன் இனிய காதலியின் வாழ்வின் துயரங்களில் எல்லாம் அவளுக்கு துணையிருந்தான் ஜிப்ரான். திருமணத்திற்குப்பின்பும் அவளைச் சந்தித்து அவளுக்கு ஆறுதலாயிருந்தான் எல்லையற்ற தன் நேசத்தை அவளுக்கு வழங்கினான். தன்னுடைய இதயத்தை அவளுடைய துயரங்களின் கல்லறையாக மாற்றினான்.

ஆனால் விதி எல்லாவற்றையம் விட வலியது. திருமணத்திற்குப்பிறகு ஜிப்ரானைச் சந்திக்கக் கூடாதென்று செல்மாவுக்கு தடை விதிக்கப்பட்டது தனது மனதுக்கு ஆறதலாக இருந்த ஒரே ஒரு ஆத்ம நண்பனை காதலனையும் இழந்து செல்மா துன்பத்தில் உழன்றாள். கருவுற்றிருந்த செல்மா தன் குழந்தையின் மழலைச் சொல்லாவது தன் துயரங்களினின்றும் தன்னை விடுவிக்கும் என்று நம்பினாள்.

குழந்தை பிறந்து தன் தாயின் கண்களை ஒரு முறை பார்த்தது. இந்த உலகத்தின் பேரன்பு முழுவதையும் தன் குழந்தைக்காக வைத்துக்கொண்டிருந்த செல்மா தன் மகனை முத்தமிட்டாள். ஆனால் அந்தக் குழந்தை அதுவே அவனது தாயைப் பார்த்த கடைசித் தடைவை தனது தாய் இந்தப்பூமியின் தன்பெயரால் துன்பப்படகூடாது என முடிவு செய்தவனைப்போல அந்தக் குழந்தை இறந்து போயிற்கு ஒரு கறுத்தநாளில். தனது மகனின் இறந்து போன உடலை முத்தமிட்டபடி செல்மா சொன்னாள் “மகனே நீ என் துயரங்களை போக்க வந்தவன் துயரங்களில்லா தேவதைகளின் நகருக்கு என்னை அழைத்துச் செல்ல வந்தவன்” அந்த வார்த்தைகளே செல்மாவின் இறுதி வார்த்தைகள். தன்னுடைய பிரியமான காதலனும் தனக்கு கிடைக்காமல் மகனும் கிடைக்காமல் உயிர்வாழ விரும்பாத செல்மா மரித்தாள்.

செல்மாவின் கணவன் அவளது மரணத்தின் போதும் குடித்துக் கும்மாளமிட்டான். மணப்பெண்போல் அலங்கிரிக்கப்பட்ட செல்மாவின் உடலை கல்லறைத்தோட்டத்திற்கு ஜிப்ரான் எடுத்துச் சென்றான். அவளுடைய குழந்தையை அவளுடைய உள்ளங்கைகளிலேயே வைத்தான். (தாயின் கரங்களே குழந்தையின் சவப்பெட்டியானது என்று எழுதுகிறான் ஜிப்ரான் பின்னர்) தனது பியம் முழுவதுமே மண்ணில் புதைந்துபோவதை ஜிப்ரான் பார்த்தான். இனி என்றைக்குமே தனது முறிந்த சிறகுகளால் பறக்கவியலாது என்பதை அவன் உணர்ந்தான்.

அவன் சொல்கிறான்….

ஓ பெய்ரூட் நகரில் சிதறிக் கிடக்கும் என்து இளம் பருவத்து நண்பர்களே
பைன் மரக் காட்டினருகே அமைந்துள்ள அந்த சமாதியைக் கடந்துசெல்லும் போது அதன் அருகே அமைதியாய் மெல்ல நடந்த செல்லுங்கள்
உங்கள் காலடியோசைகள் இறந்தவரின் ஆழ்நத் உறக்கத்தை கலைத்து விடக்கூடாது.

செல்மாவின் சமாதியின் முன்னால் அடக்கமாக நில்லுங்கள்
அவள் உடலை மூடியிருக்கும் மண்ணை வாழ்த்துங்கள்
என்பெயரை ஆழ்ந்த பெருமமூச்சுடன் உச்சரித்துவிட்டு
தனக்குத் தானே இப்படிச் சொல்லுங்கள்

காதலின் சிறைக்கைதியான கடல்கள் கடந்து வாழும்
ஜிப்ரானின் எல்லா நம்பிக்கைகளும் இங்கே தான் புதையுண்ட கிடக்கின்றன.
இந்த இடத்தில் தான் அவன் தனது மகிழ்ச்சியை இழந்தான்
இங்கே தான் அவன் கண்ணீர் வற்றிப் போயிற்று
இங்கே தான் அவன் தனது சிரிப்பை மறந்து போனது.

வாழ்நாள் முழுதும் தன் செல்மாவைக் காதலித்துக்கொண்டிருந்த கலீல் ஜிப்ரான் அவளது கல்லறையில் எதிரில் சொல்லிய வாசகங்கள் இவை. என்றைக்கும் தீராக்காதல் அவனுடையது.

நன்றி: மல்லிகை மகள் பிப்ரவரி இதழில் வெளியான எனது ஒரு காதலன் ஒரு காதலி கட்டுரையியில் இருந்து ஒரு பகுதி.

FireStats icon Powered by FireStats