சாத்தானின் காதலி
காதல் எப்போதும் தனக்கான நியாயங்களைக் கொண்டிருக்கிறது. உலகத்தின் நியதிகளைச் நீர்த்துப்போகச் செய்யவும் தனக்கான விதிகளை எழுதிக்கொள்ளவும் காதலால் முடிந்திருக்கிறது. காதலின் அழகான முடிச்சுக்கள் விழுகின்ற இடங்கள் நம்பமுடியாதவை சிலசமயங்களில் அதிர்ச்சிகளைத் தரவல்லவை.
காதல் நேசித்துக்கொண்டிருக்கிறது.. தன்னைத்தானே. எந்த எதிர்பார்ப்புகளுமற்று ஒரு கடைக்கண் பார்வையையோ அல்லது சின்னப்புன்னகையைத்தானும் பரிசளிக்காத காதலியின் பின்னால் அலைந்துகொண்டேயிருப்பான் ஒருத்தன்… தன்னைச் சட்டைசெய்யாது.. வேறுயாரோ ஒருத்தியின் பின்னால் அலைந்துகொண்டிருக்கும் ஒருத்தனிடம் காலம் முழுதும் தன்னை நிராகரிக்கிற ஒருவனிடம் தன் மொத்தஅன்பையும் கொட்டிக்கொண்டிருப்பாள் இன்னொருத்தி.
ஆனால் இந்த உலகமே ஒட்டுமொத்தமாகச் சேர்ந்து நின்று வெறுத்துக்கொண்டிருந்த ஒருவனை. “கடவுளே இவன் சாத்தான் இவனைக்கொன்றுவிடு” என்று லட்சக்கணக்கானவர்கள் அவனது மரணத்தை வேண்டி இறைவனிடம் பிரார்த்திக்கும்படி நடந்துகொண்ட ஒருத்தனை. மனிதர்களை வெறும் எண்களாக்கி அவர்களைப் பட்டியலிட்டு தினமும் கொன்றுகுவித்துக்கொண்டிருந்த அவனை எந்தத் தயக்கமும் இன்றி தான் சாகும் வரைக்கும் நேசித்துக்கொண்டிருந்தாள் ஒரு தேவதை.
அந்தச் சாத்தான் ஹிட்லர் அந்தத் தேவதை ஈவா பிரௌன்..
யூதர்களின் கனவுகளில் கொலைவாட்களோடு அலைந்த அதே ஹிட்லர்; ஈவாவின் கனவுகளைப் பூக்களால் நிறைத்தான்… அதிகாரத்தின் போர்வைக்குள் இறுக்கமான பல வேடங்களைப் போர்த்தியிருந்த ஹிட்லரின் மனசுக்குள் ஒரு பூஞ்சோலை இருப்பது ஈவாவுக்கு மட்டுமே தெரியும். உலகமே அ;சசத்தோடு பார்த்த மனிதனை ஈவா தன் கண்களில் வழியும் காதலோடு பார்த்தாள். சிலவற்றுக்குக் காரணங்கள் கூடத்தேவையில்லை ஹிட்லர் என்கிறமனிதனிடத்தில் இருந்து எதையுமே அவளது காதல் யாசித்ததில்லை..
அந்தத் தேவதையின் காதல் அதிகமான அசாத்தியங்களைக் கொண்டிருந்தத. ஹிட்லரின் 40 வயதில் 17 வயதான ஈவாபிரவுணை தன் நண்பரின் போட்டோ ஸ்ரூடியோவில் வைத்து சந்திக்கிறார் ஹிட்லர் தன்னைவிட 23 வயது பெரியமனிதரை 17 வயதேயான ஈவா நேசிக்கஆரம்பிக்கிறாள். இந்தப் பிரபஞ்சத்தின் அற்புதமான காதல் முடிச்சொன்று அந்தக்கணத்தில் விழுகிறது. அதுதான் காதல். எதிர்பார்ப்புகளற்ற பிரியம் ஒன்றையே அது யாசிக்கிறது. நீ சிவப்பா, கறுப்பா, நெட்டையா, குட்டையா, ஒல்லியா, தடிமனா, காந்தியா, கோட்சேயா, இதெல்லாம் சிந்தித்துக்கொண்டிருக்கவில்லை.. அது நிகழ்ந்துவிடுகிறது அதுவாகவே. ஈவாவிடமும் அது நிகழ்ந்தது. உலகத்தை அச்சப்படுத்திய ஹிட்டலரின் விழிகள் ஈவாவிடம் மண்டியிட்டன.. அவள் பிரியத்தை யாசித்தன. எல்லையற்ற நிபந்தனைகள் ஏதுமற்ற தன் முழுப்பிரியத்தையும் அவள் அவனுக்கு வழங்கினாள். அதிகாரத்தின் போதையிலிருக்கிற ஒரு மனிதனின் அந்தரங்கம் என்பது ஒரு இருண்டகுகைவெளி மட்டுமல்ல அது மலர்வனங்களையும் கொண்டிருக்கிறது என்பதை ஈவா கண்டுபிடித்தாள்..
அவள் ஹிட்லரிடம் எதையுமே யாசித்தாளில்லை. தன் பிரியத்தின் விலையாய் அவள் ஜேர்மனியைக்கூடக் கேட்டிருக்கலாம். அப்படி அவள் செய்திருப்பாளானால் பல பேரசர்களின் வீழ்ச்சிகளின் பின்ணணியில் ஒழிந்துகொண்டிருக்கும் அழகிகளின் விழிகளில் அவளுடையதும் ஒன்றாகியிருக்கம். அவள் ஆனால் அவள் காதலின் புனிதங்களை நம்புபவளாயிருந்தாள். எதிர்பார்ப்புகள் ஏதுமற்ற நிர்பந்தங்கள் ஏதுமற்ற தூய்மையான அன்புஇதயமொன்றே அவளிடம் இருந்தது. ஹிட்லரிடம் அவள் மனைவி என்ற அந்தஸ்தைக்கூட எதிர்பார்த்தவளில்லை அவளது காதல் வலையில் அவனது இயல்புகளைச் சிக்கவைக்க அவள் முயன்றதில்லை ஹிட்லரை அவனாகவே இருக்க அவள் அனுமதித்தாள்.
இரண்டாம் உலகப்போர் இறுதிக்கட்டத்தை நெருங்குகிறது. பேர்லின் நகர வீதிகளில் ர~;யப்படைகளின் வாகனத்தடங்கள் பதியத்தொடங்கிவிட்டன. ஹிட்லரின் தலைமையகம் இருந்த சுரங்க மாளிகை தோல்வியின் செய்திகளால் நிறைகிறது. ஜேர்மனி வீழ்ந்துவிட்டது என்பதை அவர்கள் உணர்ந்தார்கள். ஹிட்லர் தன் நண்பர்களை நெருக்கமானவர்களை அழைத்தான். வெளியேற விரும்புபவர்கள எதிரிகளிடம் சிக்காமல் பேர்லினை விட்டு வெளியேறுங்கள் என்று சொன்னான். ஈவாவிடமும் கூடத்தான். தன் வாழ்நாளின் மிகமோசமான தோல்வியின் துயரம் தாழாமல் துடித்துக்கொண்டிருக்கும் ஹிட்லரின் விழிகளை ஈவா பார்த்தாள். அந்த விழிகளில் ததும்பிக்கொண்டிருந்த ஒரு சாம்ராஜ்யத்தோல்வியின் துயரத்தை துடைத்துவிடுகிறவள் போல ஹிட்லரின் கண்களுக்கு ஆறுதளித்தது அவள் பார்வை. பின் அவள் தன் உதடுகளால் சொன்னாள் வெகு நிதானமாக “நான் மரணத்திலும் உங்களோடிருக்கவே விரும்புகிறேன்.” ஹிட்லர் அந்தக்கணத்தில் தன்மீது கவிந்த அந்தத்தேவதையின் பெரும்பிரியத்தை சுமக்கமுடியாமல் திணறினான். உயிர் தப்பும் வழிகள் ஏதுமில்லை என்பதைச் சர்வநிச்சயமாகத் தெரிந்துகொண்ட பின்னாலும் தன்னைநேசிக்கிற ஒருத்தியின் பெரும்பிரியத்திற்குப் பதிலளிக்கும் வார்த்தைகள் ஏதுமற்றவனாய். தன் நண்பர்கள் முன்னிலையில் அதிகாரிகள் முன்னிலையில் அவளை முத்தமிட்டான் அந்த ஒற்றை முத்தம் அந்த இரும்மனிதனுள் உருகிவழியும் ஓர் காதல் இதயத்தின் ஆயிரம் வார்த்தைகளை ஈவாவுக்குச் சொல்லியது..
இப்போது மரணத்தின் கண்களால் கண்காணிக்கப்பட்டுக்கொண்டிருக்கும் ஹிட்லர் என்கிற மனிதனுக்குள் இருக்கிற காதலன். தன் காதலியைக் கௌரவிக்க விரும்பினான். தன் வாழ்நாளில் தன்னை நேசித்த என்றைக்கும் யாராலும் எதனாலும் பிரதியிடமுடியாத அன்பைப் பரிசளித்த தன் பரியசகிக்கு தன்னுடைய மனைவி என்கிற அந்தஸ்தை அளிக்கவிரும்பினான். அவளது பிரியத்தின் எதிரில் தான் அளிக்கவிருக்கும் மனைவி என்கிற அந்தஸ்து ஏதுமற்ற ஒரு வெறும் சடங்கு என்பதை அவன் அறிவான் ஆனால் அவனால் அவன் அப்போதிருந்த நிலையில் அவளுக்கு அளிக்கமுடிந்த ஒரே பரிசு அதுதான். அதுவே அவளது காதலை பூரணப்படுத்தும் ஒன்றென்று ஹிட்டலர் நம்பினான்.
ஏப்ரல் 29 ஹிட்லருக்கும் ஈவாபிரௌனுக்கும் சட்டபூர்வமான திருமணம் ஹிட்லரின் சுரங்க மாளிகையில் நடந்தது. உலகத்திற்கு ஹிட்லரின் காதலியாக அறியப்பட்டிருந்த ஈவா என்கிற தேவதை திருமதி ஹிட்லரானாள். ஏப்ரல் 30 தன் வாழ்நாள் முழுதும் எவனுக்காகப் பிரியத்தைப் பொழிந்தகொண்டிருந்தாளே அவனது மரணத்தைக் காணச்சகியாதவளாய்.. அவனுக்கு முன்பாகவே சயனைட் வில்லைகளை சாப்பிட்டு ஈவா மரணித்தாள். அதன் பிறகு ஹிட்லரும் தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு இறந்தான்.. எல்லாம் நிகழந்தபின் ஹிட்லரின் அறைக்குள் நுழைந்த காவலர்கள்.. ஹிட்லரின் காலடியில் புன்னகைத்தபடி இறந்துபோயிருந்த ஈவாவைக் கண்டார்கள்.. பின்னர் அவர்கள்..அந்தக்காதலர்களை ஒன்றாகத் தீயிட்டு எரித்தனர். எதிரிகளின் கையில் தன் சடலமோ காதலியின் சடலமோ கூடச் சிக்கிக்கொள்ளக் கூடாதென்கிற ஹிட்லரின் ஆணையின் படி. 3 மணிநேரம் எரிந்து சாம்பரானது அவர்களின் உடல்கள்.
ஆனால் ஈவாவின் காதலை அதன் பிறகு உலகம் வியந்தது. விதிகளிற்குச்சிக்காமல் விதிவிலக்காக வீழ்ந்த காதலின் அற்புதமான முடிச்சுகளின் ஒன்று ஈவாவின் காதல். அவளது காதல் வாழ்ந்துகொண்டிருக்கிறது இன்னமும்.. ஹிட்லர் மீது அவள் கொண்டிருந்த காதலின் புன்னகை ஒன்று இன்றும்கூட உயிர்வாழ்கிறது ஹிட்லர் ஈவாவை வரைந்த ஓவியமொன்றின் வடிவில்..
